தமிழ்நாட்டில் ‘கம்யூனல் ஜி.ஓ’ எனப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்பட்ட 1928ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது.
அந்த சமயத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பார்ப்பனர் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த கம்யூனல் ஜிஓவின் மூலம் இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது.
அப்போது பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44%, பார்ப்பனர்களுக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16%, ஆங்கிலோ – இந்தியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த அரசாணையை எதிர்த்து இரு பார்ப்பன மாணவர்கள் உச்சநீதிமன்றம் சென்றபோது, இந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்மூலம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்தினார்.
அதன்பிறகு அரசமைப்பின் பிரிவு 15இல் முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதமும் பட்டியலினத்தோருக்கு 16 சதவீதஇட ஒதுக்கீடும் அமலுக்கு வந்தது.
முதலமைச்சர் கலைஞரிடம் ‘‘49 சதவீதம் வரை உயர்த்தலாமே – சட்டம் இடம் கொடுக்குமே’’ என்றார் தந்தை பெரியார்.
கலைஞர் ஏ.என். சட்டநாதன் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார். இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1970இல்அளித்தது. அதன் அடிப்படையில் பிற்படுத் தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பட்டியலினத்தோருக்கான இட ஒதுக்கீடு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டைப் பெற ஆண்டு வருமானம் ரூ. 9 ஆயிரத்து மிகாமல் இருக்க வேண்டும் எனறு உச்சவரம்பை அறிவித்து பொருளாதார அளவுகோலை புகுத்தினார் எம்.ஜி.ஆர்..
திராவிடர் கழகம் கடுமையாகப் போராடியது – ஆணையை எரித்து, அதன் சாம்பலை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பியது. தொடர்ந்து 1980இல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அ.தி.மு.க. படுதோல்வியடைந்தது. இட ஒதுக்கீட்டிற்குபொருளாதார வரையறையை நிர்ணியித்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் எனக் கருதிய எம்.ஜி.ஆர். பொருளாதார வரம்பை நீக்கினார். அத்தோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின்அளவை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால், ஒட்டுமொத்தஇட ஒதுக்கீட்டின் அளவு 68 சதவீதமாக உயர்ந்தது.
1989இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு, 50 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டுருக்கும்என ஒதுக்கீடு செய்தது. பழங்குடியினருக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதையடுத்து மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதமாக உயர்ந்தது.
50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்று இந்திரா – சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது இந்திய அரசமைப்புச் சட்டம் 31 சி பிரிவின் கீழ் மாநில அரசே மசோதாவை நிறை வேற்றி, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று – அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணையில் சேர்த்தால் தமிழ்நாட்டின் 69 விழுக்காடு நிலை நீடிக்கும் நீதிமன்றம் – தலையிட முடியாது என்று கூறி, அதற்கான மாதிரி சட்டமுன் வடிவைத் தயாரித்துக் கொடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
அதன்படி, 69 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் நீடிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத்திருத்த வேண்டும் என நவம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நவம்பர் 26ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து 1993ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை, இடஒதுக்கீட்டிற்கான தனிச் சட்டமுன்வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
1994 ஜூன் 25ஆம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையில் பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, ஜூலை 14ஆம் தேதி பல்வேறுஅமைச்சகங்களுடன் பிரதமர் நரசிம்மராவ் ஆலோசனைநடத்தினார். இந்த நிலையில், ஜூலை 19ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா ஒப்புதல் வழங்கினார்.
இன்று வரை நாட்டிலேயே 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ள முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.