காவிரி நீர்ச் சிக்கல் கருநாடகாவின் சண்டித்தனம் கடமையைச் செய்ய மறுக்கும் காவிரி ஆணையமும் ஒதுங்கி நிற்கும் ஒன்றிய அரசும்

Viduthalai
3 Min Read

சு. பழநிராசன்
சமவெளி விவசாயிகள் இயக்கம்

தமிழ்நாடு கருநாடகா,கேரளா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதியான புதுச்சேரி இவைகளுக்கு இடையிலான காவிரி நீர்ப் பகிர்வு சிக்கலுக்கு தீர்வுகாண ஒன்றிய அரசில் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது அவரால் 2-6-1990 இல்
காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அது தனது இறுதித் தீர்ப்பை 5-2-2007 இல் அளித்தது. அதன்படி கருநாடகா காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி நீரைத் திறந்துவிடவேண்டும்.(1 டிஎம்சி -100 கோடி கன அடி)அதைப்போல் கேரளாவிற்கு 30 டிஎம்சி யும் பாண்டிச்சேரிக்கு 10 டிஎம்சி யும் கொடுக்கவேண்டும்.குறைவான நீர்ப்பிடிப்பு ஆண்டுகளில் தீர்ப்பை செயல்படுத்த அமைக்கப்படும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் மாநிலங்களின் பங்கை முடிவு செய்யும் என்றும் அது அறிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அரசு அந்தத் தீர்ப்பை 19-2-2013 இல் தனது கெசட்டில் வெளியிட்டது.இருப்பினும் அந்தத் தீர்ப்பை கருநாடகாவும் தமிழ்நாடும் ஏற்றுக்கொள்ள மறுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டன.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை 16-2-2018 இல் அறிவித்தது.அது தனது தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா காவிரியில் ஆண்டுதோறும் திறக்கவேண்டும் என்று கூறிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி ஆகக் குறைத்தது.இதைத் தவிர நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வேறு மாற்றம் எதுவும் செய்யாமால் அதை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த அதிகாரமுள்ள காவிரி நீர் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பையும் அதற்கு உதவ காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் உடனே அமைத்து,தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு திட்டத்தையும்(Scheme)தயாரிக்க ஒன்றிய அரசிற்கு உத்தரவிட்டது.
ஒன்றிய அரசின் நீர்வளத்துறை காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்குப்(Cauvery Water Management Board) பதிலாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம்(Cauvery Water Management Authority)என்ற அமைப்பையும் அதற்கு உதவ காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும்(Cauvery Water Regulatory Committee)அமைத்து தீர்ப்புகளை நடைமுறைப் படுத்தும் திட்டத்தையும் தயாரித்து உச்சநீதி மன்றத்திடம் அளித்தது.
உச்சதீதிமன்றம் இந்தப் பெயர் மாற்றத்தை அதன் அதிகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி ஏற்றுக்கொண்டதுடன் திட்டத்தையும் ஏற்றுக் கொண்டது.இந்தத் திட்டம் 1-6-2018 முதல் செயல்பாட்டிற்கு வந்தது.

இங்கே முக்கிய மாகக் குறிப்பிடவேண்டியது இந்தத் திட்டத்தில் பாண்டிச்சேரி அரசின் வழக்குரைஞர் எம்.எஸ். நம்பியார் தெரிவித்த ஒரு முக்கியமான திருத்தம் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அது திட்டத்தில் ஆணையத்தின் அதிகாரம் பற்றி விளக்கும் பிரிவு 10 இல் உட்பிரிவு xv1.ஆகச் சேர்க்கப்பட்டது.அதன்படி ஆணையத்தின் உத்தரவுகளை எந்த ஒரு மாநில அரசும் ஏற்றுக் கொள்ள அல்லது நடைமுறைப் படுத்த மறுத்தால் ஆணையம் ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரலாம் என்று கூறுகிறது.
இந்தப் பின்னணியில்தான்.குறைநீர்ப் பிடிப்பு ஆண்டான இந்த ஆண்டிற்கு இதுவரை வந்த குறைவான நீரை கணக்கில் எடுத்துக்கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழ்நாட்டிற்கு தினம் 1 டிஎம்சி வீதம் தொடர்ந்து 20 நாட்களுக்கு 20 டிஎம்சி நீரைத் திறந்துவிடவேண்டும் என்று ஆணையத்திற்க்ப் பரிந்துரைத்தது.ஆணையம் இதை செயல்படுத்தக் கோரியும் கருநாடகா ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்தது.
இந்த நேரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒன்றிய அரசின் நீர்வளத்துறையிடம் முறையிட்டு அதை தலையிடச் செய்து தனது உத்தரவை அப்படியே அமல் படுத்த கர்நாடகாவைப் பணித்திருக்க வேண்டும். ஆணையம் இதைச் செய்யாமல் தனது கடமையிலிருந்து தவறுகிறது.உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி ஒன்றிய அரசின் நீர்வளத்துறை தானாகவே முன்வந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆணையத்தின் அறிவுரைகளை கருநாடகா செயல்படுத்தச் செய்திருக்கவேண்டும்.

ஆனால் ஒன்றிய அரசு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பாரக்கிறது.தமிழ்நாட்டின் மீது ஒன்றிய மோடி அரசிற்கு அவ்வளவு அக்கறை! இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவதைத் தவிர வேறுவழியில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதைத்தான் அறிவித்திருக்கிறார்.அதைத் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக காவிரி சமவெளி மக்கள் வரவேற்பதுடன் ஒன்றிய அரசையும்,தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் உடனே நாடி காவிரி நீரில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தற்பொழுது நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கன மழையால் வேறு வழியின்றி மிகை நீரை காவிரியில் கருநாடகா திறந்து விடுகிறது.இதனால் நாம் திருப்தி அடையாமல் நமது உரிமையை நிலைநாட்ட முதற்கட்டமாக ஒன்றிய அரசையும் அது செயல்படத் தவறினால் உச்சநீதிமன்றத்தையும் அணுகி சரியான தீர்ப்புகளைப் பெற்று கருநாடகா சட்டத்தையும் உச்சநீதிமன்ற ஆணையையும் மதித்து செயலாற்றும்படிச் செய்ய வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *