நாளை தி.மு.கழக சட்டத்துறை சார்பில் கருத்தரங்கம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – ஆர்.எஸ்.பாரதி சிறப்புரை!
என்.ஆர்.இளங்கோ எம்.பி. அறிக்கை!
சென்னை, ஜூலை 19– சென்னை உயர்நீதி மன்றத்தின் அருகில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க. சட்டத் துறைச் சார்பில் நாளை (20.7.2024) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொள்ளும் “புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்; ஏன் மக்களுக்கு எதிரானவை?” கருத்தரங்கம் நடைபெறுகிறது என தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை வருமாறு:–
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் – மாநில சுயாட்சிக்கும் – மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாகத் திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக” மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான – ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. சட்டத்துறையின் சார்பில், கடந்த 5.7.2024 அன்று மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் நுழைவு வாயிலில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து 6.7.2024 அன்று சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் “மாபெரும் பட்டினி அறப்போராட்டம்” இந்தியாவே வியந்து நோக்கும் வண்ணம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து,
அரசியல் அமைப்பிற்கு எதிரான – ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. வழக்குரைஞர் அணியின் சார்பில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை முன்னிலையில், சட்டத்துறை துணைச் செயலாளர் கே.சந்துரு வரவேற்புரையாற்றிட “புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்; ஏன் மக்களுக்கு எதிரானவை?“ என்ற தலைப்பில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொள்ளும் “கருத்தரங்கம்” 20.7.2024 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகில் உள்ள “இராஜா அண்ணாமலை மன்ற”த்தில் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கத்தில் சட்டத்துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ., -என்.மணிராஜ் – கே.எம்.தண்டபாணி, சு.ராதா கிருஷ்ணன், பி.ஆர்.அருள் மொழி, இரா.தாமரைச்செல்வன் சட்டத்துறை துணைச் செயலாளர்கள் ஜெ.பச்சையப்பன், வி.வைத்திய லிங்கம், எஸ்.தினேஷ் – தலைமைக் கழக வழக்குரைஞர்கள் ப.கணேசன், சூர்யாவெற்றிகொண்டான், கே.ஜே.சரவணன், வீ.கவிகணேசன், ஏ.என்.லிவிஸ்ஸ்டன், கே.மறைமலை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஒருங்கிணைந்த சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் மாவட்ட வழக்குரைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களான துரை.கண்ணன், ஜெ.காணிக்கைநாதன், ஜே.லட்சுமிகாந்தன், வே. தேவேந்திரன், சி.கணேஷ்பாண்டியன், தரமணி ஜெகதீசன், எஸ்.கோபி, பெ.வினோத், பி.கே.நாகராஜ், என்.கனகராஜ், பி.எஸ்.ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகவும் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.இரவிச்சந்தி ரன் நன்றியுரை ஆற்றிட இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில், ஒருங்கிணைந்த சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வழக்குரைஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.