திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே புதன்கிழமை அதி காலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கண்ணுக்குடிபட்டியைச் சேர்ந்த சின்னையன் மகன் முத்துசாமி (60), முருகேசன் மனைவி ராணி (37), ரமேஷ் மனைவி மோகனாம்பாள் (27), கார்த்தி மனைவி மீனா (26), செல்வராஜ் மனைவி
தனலட்சுமி (36), கவியரசன் மனைவி சங்கீதா (26) உள்ளி ட்டோர் குழுவாக சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி பிருந்தாவனம் உணவு விடுதி அருகே நேற்று (17.7.2024) அதிகாலை சென்றுகொண்டிருந்த இவர்கள் மீது, பின்னால் வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில், முத்துசாமி, ராணி, மோகனாம்பாள், மீனா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த தனலட்சுமி, சங்கீதா ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தனலட்சுமி உயிரிழந்தார். செங்கிப்பட்டி காவல்துறை யினர் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிந்து சரக்குவாகனத்தை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சவுந்தர ராஜனை கைது செய்தனர்.
கண்ணுக்குடிபட்டியில் சோகம்
உடற்கூராய்வுக்கு பின்னர், இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததால், உறவி னர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முதலமைச்சர் நிதி அறிவிப்பு
இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ. 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சாமி காப்பாற்றவில்லை அரசுதான் உதவிக்கரம் நீட்டுகிறது.