பேராசிரியர் மு.நாகநாதன்
46 ஆண்டுகளுக்குப் பின்பு ஜெகநாதர் கருவூலம் திறக்கப்பட்டது.
நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிகள்படி, கோயில் பொறுப்பாளர்கள் புடை சூழ, ஊடகங்கள் ஒளி பாய்ச்ச, கொட்டி வைக்கப்பட்ட தங்க வைர அணிகலன்கள் சரிபார்த்தல் பணி நடைபெற்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அய்தீகப்படி ஜெகநாதரின் தங்க வைரங்களைப் பாம்புகள் பாதுகாத்து வருகின்றன என்று மக்கள் நம்புவதால் பாம்பு பிடிப்பவர்களும் இந்தப் பணியில் இணைந்துள்ளனர்.
எத்தகைய முட்ட வரும் மூடநம்பிக்கை!
அய்தீகம் என்ற பெயரில் பல கதைகள் கோயில்களைப் பற்றி உலா வருவதுண்டு.
உலவவிட்டவர்கள் கோயில்களால் பெரும் நிதி பயன்களைப் பெறுபவர்கள் என்பதை அவ்வப்போது வரும் செய்திகள் சான்று பகிர்கின்றன.
பெரும்பான்மையான மக்களை இருளில் ஆழ்த்தி, அறிவியல் உணர்வுகளை வீழ்த்தி, கேள்விகள் கேட்பதைத் தடுப்பதற்கான சதிச்செயலின் கற்பனை வடிவம் தான் அய்தீகம்.
கோயில்களைத் தங்களின் பிடியில் வைத்துக் கொள்வதற்காகவும் தங்களின் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள ஆதிக்கச் ஜாதியினரும் ஆரியப் பூசாரிகளும் கண்ட ஒரு புரட்டுதான் அய்தீகம்.
சென்ற ஆண்டு உத்தரகண்ட் கோயிலுக்கு முலாம் பூசுவதற்காக வழங்கப்பட்ட தங்கத்தில் பல நூறு ரூபாய் கோடிகள் மோசடி!
அயோத்தி இராமன் கோயில் கட்ட வாங்கப்பட்ட நிலத்தில் ரூபாய் பல நூறு கோடிகள் மோசடி !
கோயிலின் உட்புறம் வெளிப்புறம் தொட்டுத் தொடங்கிய “திருப்பணி”களில் எல்லாம் நீக்கமற நிதி மோசடிகள் தொடர்கின்றன.
பேரறிஞர் அண்ணா தனது இறுதி மடலில் குறிப்பிட்ட மொரோவிய நாட்டின் முதுமொழிக்கு ஏற்ப ஆண்டவன் சொர்க்கத்தில் உறங்குகிறான் – பணக்காரன் பஞ்சு மெத்தையில் உறங்குகிறான்.
எனவே, மோசடிக ளுக்கு இந்திய நாட்டில் பஞ்சமில்லை.
இத்தகைய ஆன்மிக மோசடிகளுக்கு இடையே ஒடிசா பூரியாரின் கணக்குத் தொடங்கியிருக்கிறது.
இதில் என்ன அரசியல் என்ற கேள்வி எழலாம்?
எழுப்பியவர் மனிதக் கடவுள் என்ற பட்டத்தைத் தனக்கு தானே சூட்டிக் கொண்ட பிரதமர் நரேந்திரர்.
இதனால் தான் பூரியார் கோயில் கருவூலக் கணக்கெடுப்பு நாடு தழுவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அதுவும் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கணக்கெடுப்புப் பணியை விரைந்து முடிக்கப்போகிறார்களாம்.
இருப்பினும் கணக்கெடுப்பு முடிக்க சில வாரங்கள் ஆகலாம் என்று பூரியாரின் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
ஜெகநாதரின் பாதாள அறையில் கொட்டிக் கிடக்கும் தங்க, வைர வெள்ளி ஆபரணங்கள் எண்ணிலடங்கா.
மேற்குறிப்பிட்ட பணிகள் ஒடிசா மாநிலத்தின் பாஜக ஆட்சியில் நடைபெற்று வருகின்றன.
நல்ல வேளை பாம்புகள் பாதாள அறையில் இல்லை.
ஒரு வேளை ஒரு பாம்பு இருந்திருந்தால் கூட தேர்தல் பரப்புரை நேரத்தில் நரேந்திரர் குறிப்பிட்ட காணாமல் போன கருவூலச் சாவி பாம்பின் வாயில் தென்பட்டது என்று ஒரு புதிய மோடி அய்தீகத்தை உருவாக்கி இருப்பார்கள் ஒடிசா சங்கிகள்.
நாட்டின் உள்ள ஊடகங்கள் பூரியாரின் பக்த சங்கிகள் மனம் பூரிக்கும் அளவில் செய்திகள் ஊதிப் பெரிதுபடுத்தின.
ஆனால் ஒன்றை மட்டும் ஊடகங்கள் எழுப்ப அஞ்சுகின்றன.
கருவூலம் சாவி எங்கே இருந்தது?
எங்கே கண்டுபிடிக்கப்பட்டது?
எப்போது சாவி கிடைத்தது?
தமிழ்நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா?
சாவியை எடுத்து வந்து தமிழர் பெயர் என்ன?
ஒன்றிய அரசின் புலனாய்வுத்துறை புலிகள் சாவியைத் தேடுவதற்கு எப்போது வந்தனர்.
ஒரு வேளை அமலாக்கத்துறையின் அடிப்பொடிகள் கமுக்கமாகத் தமிழ்நாட்டிற்கு வந்து தேடினரா? தேடிய சாவி கிடைக்கவில்லையா? ஒரு வேளை கள்ளச்சாவியைப் பயன்படுத்தினரா?
தேர்தல் அரசியலுக்காகத் தமிழர்கள் ஜெகநாதன் கருவூலச் சாவியைத் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்ற கொடுமையான அழியாப் பழியை நரேந்திரர் வாய் கூசாமல் கூறினார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகுக்கு உயர் நெறியை அறிவித்த தமிழர்களை நரேந்திரர் நாவினால் சுட்டு வடு உண்டாக்கியுள்ளார். சுட்ட வடு அவ்வளவு சீக்கிரம் அழியாது.
ஊடகங்கள் மறைக்கலாம்!
தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.
இந்த வீண் பழி சுமத்தலுக்காக நரேந்திரர் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்பாரா?
தேர்தல்கள் வந்து போகும். இன்று வெற்றி பெற்றவர்கள், நாளை தோல்வியைச் சந்திப்பர். இதுதான் ஜனநாயகம் இயங்கும் முறை.
மோடி ‘ஜி ’ தமிழர்கள் மீது தொடுத்த பழி வெறி-நெறியற்ற செயல் என்பதை உணரும் காலமும், உணர்த்தும் காலமும் விரைவில் மலரும்!