*மின்சாரம்
‘‘சேலம் செயலாற்றும் காலம்‘‘ என்று இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் தீட்டினார்.
2024 ஜூலை 15 (திங்களன்று) சேலத்தில் அது நிகழ்த்திக் காட்டப்பட்டது.
‘நீட்டை ஒழிப்போம்! – சமூகநீதி காப்போம்!’ என்ற முழக்கத்தோடு திராவி டர் கழக இளைஞரணி, மாணவர் கழகத்தின் இருபால் தோழர்கள் 112 பேர் இரு சக்கர வாகனத்தில் 4,500 கி.மீட்டர் தூரம் பயணித்த னர் என்பது இயக்க வரலாற்றில் மட்டும் அல்ல– இன வரலாற்றிலேயே ஒரு செப்பேட்டுச் சிலாசாசனமாகும்.
அடேயப்பா! புல்லட் வாகனத்தில் கழகக் கொடி பறக்க கருஞ்சட்டைச் சேனை கொள்கை முழக்கமிட்டு அணி வகுத்து வந்த காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். புதிய புறநானூறு படைத்தனர் எம் தோழர்கள்!
திராவிடர் கழகத்தின் அணுகுமுறைகள் இரண்டு – ஒன்று பிரச்சாரம் மற்றொன்று போராட்டமாகும்.
அந்த வகையில் நீட்டைக் கொண்டு வந்தது முதல் திராவிடர் கழகம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும், பிரச்சாரங்களையும், மாநாடுகளையும் நடத்தி வருகிறது.
ஜூலை 11 முதல் 15 முடிய 5 முனைகளிலிருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட இருபால் மாணவ –மாணவியர்களின் இரு சக்கரப் பிரச்சாரப் பயணம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
திராவிடர் கழகத்தின் இந்தப் பிரச்சாரத் திட்டத்திற்கு வழி நெடுக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் பாராட்டி மகிழ்ந்த னர். வரும் வழிகளில் முக்கிய இடங்களிலும் தோழர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தே. நர்மதா, யாழ் திலீபன், இளமாறன் ஆகியோர் ‘நீட்’ ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுபற்றி விளக்கி உரையாற்றினர்.
‘நீட் ஒழிப்புஏன்?’ என்று திராவிடர் கழகம் வெளியிட்ட துண்டறிக்கையை வழி நெடுக பொது மக்களிடம் வழங்கினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட ‘நீட்’ சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணி வெடி’’ என்ற அரிய தகவல்களை உள்ளடக்கிய 8 பக்கங்களைக் கொண்ட வெளியீட்டையும் விற்பனை செய்தும் வந்தனர். பிரச்சாரப் பயணத்தில் ஏந்திய உண்டியல்களில் பொது மக்கள் முகமலர்ச்சியோடு நிதியை வழங்கினர்.
கழக வரலாற்றின் 1938இல் நடைபெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்புப் போரில் 100 பேர்க ளைக் கொண்ட ‘தமிழர் பெரும்படை’’ ஒன்று திருச்சியிலிருந்து, தஞ்சாவூர் அய்.குமார சாமிபிள்ளை தலைமையில், அஞ்சா நெஞ்சன் அழகிரி படைத் தளபதி, படை அமைச்சராக மணவை ரெ. திருமலைச்சாமியைக் கொண்டும் சென்னையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடைப் பயணம் அதற்கு முன் காணாத ஒன்று! இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அந்த நூறு பேர்களில் ஒரே ஒருவர் பெண். அவர்தான் வீராங்கனை – பெருஞ்சோற்றுத் தலைவி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள்.
இது போன்ற நடப்புகள் வேறு எங்கும் கேட்டிராத – படித்திராத ஒன்றே!
அந்தத் தமிழர் பெரும்படையை வரவேற்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் கடல் பொதுக் கூட்டத்தில்தான் தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற முழக்கத்தை முதன் முதலாகக் கர்ச்சித்தார்!
நீட்டினால் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்காக திராவிடர் கழகம் அதனை எதிர்க்கவில்லை. முறைகேடுகள் இல்லாமல் நடந்தாலும் நீட்டை திராவிடர் கழகமோ, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளோ ஏற்கவில்லை – இது உறுதி! உறுதி!!
திருச்சி உறையூரிலிருந்து புறப்பட்ட அந்தத் தமிழர் பெரும் படை 600 மைல்கள் நடந்து வந்தது. 27 மைல்கள் கொட்டு மழையில் கொள்கை முரசறைந்து இராணுவச் சிப்பாய்களாக ஆர்ப்பரித்து மிடுக்கு நடைபோட்டு வந்தது. 1.8.1938இல் புறப்பட்ட அப்படை 11.9.1938இல் சென்னைக் கடற்கரையில் சங்கமித்தது என்பது வரலாறு.
அதற்குப் பிறகும் குலக்கல்வி ஒழிப்பு வழி நடைப் படை நாகையிலிருந்து நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையிலும், பட்டுக்கோட்டை டேவிஸ் தளபதியாகவும் இருந்து நடைபெற்றதுண்டு. (1954 மார்ச்சு)
படை சென்னை வருவதற்குள் துண்டைக் காணோம் – வேட்டியைக் காணோம் என்று குலக்கல்வி கொண்டு வந்த முதலமைச்சர் சி. ராஜகோபாலாச்சாரியார் பதவியை விட்டு ஓடினாரே!
இதே நீட்டை எதிர்த்து 2017 மார்ச்சு 18 முதல் 21 முடிய நான்கு நாள்கள் 5 முனைகளிலிருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் இரு சக்கரவாகனங்களில் மாணவர் கழகத்தினர் – இளைஞரணித் தோழர்கள் நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டு விருத்தாசலத்தில் சங்கமித்தனரே!
3575 கி.மீட்டர் தூரம் பயணித்தனரே! தமிழ்நாட்டில் 265 இடங்களில் நீட் எதிர்ப்புப் பிரச்சாரப் போர் முழக்கம் செய்ததை மறப்போமா!
தமிழர் தலைவர் போர் முரசம் கொட்டினார் – பயணங்கள் தொடரும் என்றார் – ஆம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம் – வெற்றி நம் தொடும் தூரத்தில்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல – ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் ‘நீட்’ எதிர்ப்புத் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்ச்சிக்கிறார் பிஜேபியில் கூட முணு முணுக்க ஆரம்பித்து விட்டனர். ஆம், தந்தை பெரியார் வடமாநிலங்களிலும் பயணிக்கிறார்.
சட்டமன்றம் சென்றதில்லை – நாடாளு மன்றம் சென்றதில்லை – திராவிடர் கழகம் சென்றதெல்லாம் மக்கள் மன்றத்தில்தான்!
மக்கள் சக்தியே மகத்தான சக்தி! அந்த எரிமலை வெடித்துக் கிளம்பினால் அதிகார எரிமலையும் தூள் தூளாகி விடும் என்பது கடந்த கால நமது இயக்க வரலாறு!
மண்டல் குழு பரிந்துரையை சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் செயல்படுத்தினார். (7.8.1990) அதற்கு இடைக்காலத் தடை விதித்தபோது உச்சநீதிமன்ற நீதபதிகளின் கொடும்பாவியை எரித்த எரிமலைப் படை திராவிடர் கழகம் – அதற்காக நமது தலைவரும், தோழர்களும் சிறைப்ப டுத்தப்படவில்லையா? இறுதி வெற்றி நமக்குத்தானே!
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது பார்ப்பனீயம்!
குளித்த குதிரையும், படித்த சூத்திரனும் ஆபத்தானவயாம்.
‘‘சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும். படித்ததைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். மனப்பாடம் செய்து வைத்திருந்தால் கோடரியால் வெட்ட வேண்டும்’’ என்கிறதே கவுதம தர்ம சூத்திரம் (2/3/4).
வெள்ளைக்காரன்மீது பார்ப்பனர்க ளுக்கு அடங்காச் சினமே அவன் கல்விக் கூடங்களை திறந்தான் என்பதற்காகத்தானே தவிர நாட்டுச் சுதந்திரத்திற்காக அல்லவே!
ஏதோ நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததோ, நாம் பிழைத்தோம் என்பதுதான் நிலை!
இன்றைக்குப் பார்ப்பன அல்லாதாரும் படிக்கின்றனர் – பட்டம் பெற்றனர் – பதவி பெற்றனர் என்ற நிலை ஏற்பட்டது என்றாலும் அதற்காக அன்று போல் ஆரியக் கூட்டம் – நாக்கை அறுக்க முடியுமா? காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிக் கதறச் செய்ய முடியுமா? நெஞ்சைக் கோடரி கொண்டு பிளக்க முடியுமா?
முடியாது – காரணம் தந்தை பெரியாரும், அவர்கண்ட இயக்கமும் தானே!
அதே நேரத்தில் நேரடியாக சமூக நீதியை எதிர்க்க முடியாது என்ற நிலையில், நரித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் – கண்ணி வெடிகளைப் பதிக்கிறார்கள்!
அதுதான் ஆச்சரியாரின் குலக்கல்வி – அதுதான் நீட் – அதுதான் உயர் ஜாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு (EWS) – அது தான் 50 விழுக்காடு மேல் இடஒதுக்கீடு விஞ்சக் கூடாது என்ற தீர்ப்பு!
அதுதான் தகுதி – திறமை கூப்பாடு!
‘நீட்‘ மூலம் ஒரு வெற்றியை நயவஞ்ச மாகப் பெற்று விட்டனர். 12 ஆண்டுகள் படித்துப் பெற்ற மதிப்பெண்ணைக் கசக்கிக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டனர்.
‘நீட்’ தேர்வு வினாக்கள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் அமையும் என்ற நயவஞ்சக நஞ்சு தோய்ந்த கத்தியைத் தீட்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்வி என்ற கழுத்தில் பாய்ச்சி விட்டார்கள்.
விளைவு… எடுத்துக்காட்டுக்கு ஒன்று ‘நீட்’ இல்லாதபோது 2016இல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றவர்கள் வெறும் 12. நீட் வந்த பிறகு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220. எத்தனை மடங்கு அதிகம் கணக்கிட்டுப் பாருங்கள் – நீட்டின் பின்னணியில் எத்தனைப் பெரிய பாழுங் கிணறு நம் மக்களுக்கு வெட்டப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வீர்!
அனிதாவில் ஆரம்பித்து இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எத்தனை எத்தனைத் தற்கொலைகள்!
நெஞ்சம் பதறவில்லையா? ‘வஞ்சக நாதா போற்றி’ என்று அறிஞர் அண்ணாவின் ஆழமான படப்பிடிப்பின் உண்மை புரியவில்லையா?
இந்த ஆரிய நயவஞ்சகத்துக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டாமா?
மக்கள் மத்தியில் எழுச்சி எரிமலையை வெடிக்கச் செய்யவே திராவிடர் கழகம் மேற்கொண்ட மாணவர்களின் – இளைஞர்க ளின் இந்த இரு சக்கர வாகன நீட் எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பயணம்.
நம் பயணங்கள் முடிவதில்லை – வெற்றி இலக்கை எட்டும் வரை நம் கண்கள் துஞ்சாது. எந்த விலை கொடுக்கவும் தயார் – வெற்றிக் கனியைப் பறிக்காமல் ஓயப் போவதில்லை.
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு அவர்கள் போட்டுத் தந்த உறுதியான அஸ்திவாரதின்மீது நின்று, அவர் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!
தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட நமது தமிழர் தலைவர் – தகைசால் தமிழர் – வாழ்நாள் சாதனையாளர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இருக்க நமக்குத் தயக்கம் ஏது?
இளைஞர் பட்டாளம், மாணவர் பட்டாளம் (இருபாலரும்) தமிழ்நாட்டை வலம் வந்திருக்கிறார்கள். அவர்களின் அளப்பரும் பணி வரலாற்றில் கல்வெட்டா கும். அவர்களின் பெயர்கள் காலம் கால மாகப் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அந்த இளம் ரத்தங்களுக்குப் பாராட்டுகள், ஒத்துழைத்த கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!!
இப்படைத் தோற்கின்
எப்படை வெல்லும்!?
நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது – வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
வெல்க திராவிடம்!!!