திருப்பதி, ஜூலை 17- ஏழுமலையானை தரிசிக்க, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு லட்சக்கணக்கானவர்கள் வருகின்றனர். மலைப்பாதை வழியாக கோவிலுக்கு நடந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் திருமலையில் உள்ள ஜப்பலி ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே பக்தர்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழங்கால மரத்தின் கிளை ஒன்று திடீரென முறிந்து விழுந்தது. அப்போது, கீழே நடந்து சென்ற பெண்ணின் தலையில் அதிவேகமாக கிளை விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த பெண் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தேவஸ்தான கோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில், பக்தர் ஒருவர் இந்த காட்சிப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவெளியில் “சண்டாளர்” என்ற சொல்லை பயன்படுத்தினால் நடவடிக்கை
எஸ்.சி., எஸ்.டி ஆணையம் எச்சரிக்கை!
சென்னை, ஜூலை 17- இழிவுபடுத்தும் நோக்கிலோ, நகைச் சுவையாகவோ, அரசி யல் மேடைகளிலோ ‘சண்டாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும்
பழங்குடியினர் ஆணையம் எச்சரித்துள்ளது. இது குறித்து ஆணையம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவின் ஜாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு ஜாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப் பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சுட்டுவதாக உள்ளன. தங்களின் ஜாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதும் ஜாதிகள், அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.
மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், உடல்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளை செய்யும், சமூக குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாட பயன்படுத்துவதும், கலை இலக்கியங்கள், திரைப்பட நகைச்சுவை காட்சிகளிலும், திரைப்பட பாடல்களிலும் அப்பெயர் களை பயன்படுத்துவதும் பரவலாக உள்ளது.
இது, இப்பெயர்களில் உள்ள மக்களை புண் படுத்துவதாகும். தவிர இது சட்டப்படி தண்ட னைக்குரிய குற்றம் என்ற எண்ணமும் பொது மக்களிடம் இல்லை. மேலும், தாழ்த்தப்பட்ட ஜாதியினர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப் புச் சட்டப்படி, பொதுவெளியில் பட்டியல் ஜாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் ‘சண்டாளர்’ என்ற பெயரில் மக்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூக அட்டவணையில் இப்பெயர் 48ஆவது இடத்தில் உள்ளது. அண்மைக்காலங்களில் பிறரை இழிவு படுத்தும் நோக்கில் இப்பெயர் பொது வெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாக பேசப்படுவதை காண முடிகிறது.
எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச் சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ ‘சண்டாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில்
ஆயிரம் கூடுதல் காலியிடங்கள்
21ஆம் தேதி போட்டித் தேர்வு
சென்னை, ஜூலை 17- இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2023-2024ஆம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடை நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மய்யங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 26,510 பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.