முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை, ஜூலை 16- காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (16.7.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், மாண் பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப் பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கருநாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.
இதனை முறியடித்து, தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கைகளைப் பற்றி பல ஆக்க பூர்வமான கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கருநாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம்.
இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக் கூடிய சூழ்நிலையிலும், கருநாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு களை நான் தீர்மானங்களாக இப்பொழுது படிக்கின்றேன்:
தீர்மானங்கள்
1. காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதி மன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கருநாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
2. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கருநாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை யத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
3. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கை களையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலை நாட்டும் என உறுதியளித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
-இவ்வாறு முதலமைச்சர் உரையில் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16.7.2024) தலைமைச் செயலகத்தில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் கருநாடக அரசிடமிருந்து தமிழ்நாட் டிற்கு காவிரி நீரைப் பெறுவதற்கு தேலையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அனைத்து சட்ட மன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன், ஆர்.எஸ்.பாரதி, அ.இ.அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி. ஒ.எஸ்.மணியன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கு.செல்வப்பெருந்தகை, செ.ராஜேஷ்குமார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே.மணி மற்றும் சதாசிவம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் எஸ்.எஸ். பாலாஜி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரு. நாகராஜன். கருப்பு முருகானந்தம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வி.பி. நாகைமாலி மற்றும் பி. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி. இராமச்சந்திரன் மற்றும் மூ. வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்எம்.எச். ஜவாஹிருல்லா, பதுமடம் அலீம், கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் மற்றும் சூரியமூர்த்தி, புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பூவை எம். ஜெகன்மூர்த்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சதன் திருமலைக் குமார் மற்றும் பூமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உபர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.