அதுதான் கழகத் தலைவரின் தனித்தன்மையிலும் தனித்துவமானது!
குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் மாணவர்களுக்கு துணைத் தலைவர் எடுத்த சிறப்புப் பாடம்!
குற்றாலம், ஜூலை 15- மூன்றாம் நாளில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எனும் தலைப்பிலும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தேசியக் கல்விக் கொள்கை – நீட் எதிர்ப்பு ஏன்? எனும் தலைப்பிலும் பாடம் நடத்தினர்.
ஒரு நாளில் ஒன்பது வகுப்புகள்!
தென்காசி மாவட்டம் சிறப்பு நிலை பேரூராட்சியாக விளங்கும் குற்றாலத்தில் 45 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கடந்த ஜூலை 4.7.2024 வியாழன் அன்று தொடங்கி 7.7.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு நிறைவு பெற்றது. இம்முகாமின் மூன்றாம் நாளான 6.7.2024, சனிக்கிழமை அன்று 9 வகுப்புகள் நடைபெற்றன. முதல் வகுப்பாக பேராசிரியர் ஆ. திருநீலகண்டன், “தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்”, இரண்டாம் வகுப்பாக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், “தேசியக்கல்விக் கொள்கை – நீட் எதிர்ப்பு ஏன்?”, மூன்றாம் வகுப்பாக வழக்குரைஞர் சு. குமாரதேவன், “புராண இதிகாச புரட்டுகள்”, நான்காம் வகுப்பாக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு”, அய்ந்தாம் வகுப்பாக முனைவர் மு.சு.கண்மணி, “தந்தை பெரியாரும் தமிழ் இலக்கியங்களும்”, ஆறாம் வகுப்பாக முனைவர் வா.நேரு, “சமூகநீதிக்கான சவால்களும், தனியார் துறையில் இடஒதுக்கீடும்”, ஏழாம் வகுப்பாக எழுத்தாளர் வி.சி.வில்வம், “தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள்”, எட்டாம் வகுப்பாக மருத்துவர் இரா.கவுதமன், “அறிவியலும், மருத்துவமும்” எனும் தலைப்புகளில் பாடம் நடத்தினர். ஒன்பதாம் வகுப்பாக, மாணவர்களே கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதன் பிறகு இரவு 11 மணி வரை கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கற்றுக் கொள்வதில் ஆர்வமும், உற்சாகமும் காட்டிய மாணவர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.
நுழைவுத் தேர்வும் தமிழ்நாடும்!
தேசியக் கல்விக் கொள்கை – நீட் எதிர்ப்பு ஏன்? எனும் தலைப்பிலான வகுப்பில், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், NEET என்பது National Entrance Eligibility Test ஆ? இல்லை, National Entrance Eliminate Test ஆ? என்று சிந்திக்க வைத்தார். தேர்வு நடத்தும் NTA என்பது அரசு அமைப்பு அல்ல, அதுவொரு தனியார் அமைப்பு என்றும், KOTA என்பது ஆந்திராவில் உள்ள ஒரு இடம் என்றும், அங்கு நாமக்கல் போல் பயிற்சிக்காக மாணவர்களை ஒரு இயந்திரம் போலத் தயாரிக்கிறார்கள் என்பதையும், அங்குதான் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரிக்கின்றன என்றும், அப்படித்தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று ’நீட்’டின் ஆபத்தை உணர்த்தினார். NEET என்பது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கத்தான் என்றும் அதிகம் தெரியாத தகவல்களைச் சொல்லி, 1984 லிருந்து 2007 வரை பொறியியல் கல்விக்கு தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இருந்தது என்றும் ஒத்த உணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து போராடி அதை நீக்கச் செய்தது திராவிடர் கழகம்’ என்பன போன்ற பல தகவல்கள் அடங்கியதாக வகுப்பை அமைத்துக்கொண்டு, இடையிடையே கேள்விகள் கேட்டு, மாணவர்களிடம் பதில்களைப் பெற்று பாடம் நடத்தினார்.
சுயமரியாதை கொள் தோழா!
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எனும் தலைப்பில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாடம் நடத்தினார். அவர் தனது வகுப்பில், நமது பெயர்கள், ஊர் பெயர்கள், தமிழ்ப்புத்தாண்டின் பெயர்கள் ஆகியவற்றில் தமிழ் இல்லையே என்று ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார். புராண இதிகாசங்களில் வரும் அசுரன், ராட்சதன், அரக்கன் ஆகிய பெயர்களெல்லாம் நம்மைத்தான் சுட்டுகின்றன என்பதை அம்பலப்படுத்தினார். திருமண நிகழ்வுகளில் பார்ப்பனர்கள் சொல்லும் மந்திரங்களை விவாக மந்திரார்த்த போதினி என்று பார்ப்பனரால் எழுதப்பட்டு, பார்ப்பனரால் பதிப்பிக்கப்பட்டு, பார்ப்பனரால் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு நமது இழிநிலையை சுட்டிக்காட்டினார். இதற்குப் பிறகாவது மாற்றங்கள் உங்கள் மூலமாக நடைபெறட்டும் என்று உணர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஏன் திருமண வீட்டில் மணப்பெண்ணை இவ்வளவு இழிவு படுத்துகிறார்கள்? என்ற கேள்வியைக் கேட்டு, அய்வருக்கும் தேவியாம் அழியாத பத்தினியாம் என்ற சொற்றொடரைக் குறிப்பிட்டு, இதுதான் பார்ப்பனர்களின் கலாச்சாரம். அதைத்தான் நம் மீது திணித்திருக்கிறார்கள் என்ற கொடூரமான உண்மையை போட்டுடைத்து, சுயமரியாதைத் திருமண முறை மூலம் அதிலிருந்து நம்மை மீட்டது தந்தை பெரியார் தான்! திராவிடர் இயக்கம் தான்! என்று கூறிவிட்டு, இந்த இயக்கம் இல்லாவிட்டால் நமக்கு மான உணர்ச்சி ஏது? என்று மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார். தொடர்ந்து, தோழர்களே! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு இது! புரட்சிக்கவிஞர் கூற்றுப்படி, சுயமரியாதை கொள் தோழா! என்று சொல்லி தனது வகுப்பை நிறைவு செய்தார்.
பகுத்தறிவா? இனநலமா? – பட்டிமன்றம்!
இறுதியில் ஒன்பதாம் வகுப்பாக மாணவர்கள் கலந்து கொள்ளும் தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமா? பகுத்தறிவா? எனும் தலைப்பில் சிறப்பான பட்டிமன்றம் நடைபெற்றது. கழகக் காப்பாளர் பால்.இராசேந்திரம் நடுவராக பொறுப்பேற்றார். பகுத்தறிவே எனும் தலைப்பில் தேவராஜ பாண்டியன், யாழினி, அன்பெழில், கண்ணம்மாள், ராஜேஷ் ஆகிய அய்வரும், இனநலமே எனும் தலைப்பில் நர்மதா, கியூபா, வெண்ணிலவு, ப.வெங்கடேஷ், சிவசக்தி ஆகிய அய்வரும் பங்கேற்றனர். பதின்மரும் அவரவர்களின் தலைப்பில் தேவையான கருத்துகளை எடுத்து வைத்து பேசினர். இறுதியில் நடுவர் தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமே என்று தீர்ப்பளித்தார். இதற்காக மாணவர்கள் தங்கள் குழுவினருடன் கலந்துரையாடி தகவல்களை சேகரித்து மேடையில் துணிச்சலுடன் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பயிற்சிப்பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் ப.காளிமுத்து ஆகியோர் முன்னிலையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பயிற்சி முகாமில் பிறந்தநாள் விழா!
முன்னதாக வெற்றிச்செல்வி பூங்குன்றன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 6.7.2024, சனிக்கிழமை அன்று துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஒரு நாள் முன்னதாகவே (5.7.2024, வெள்ளிக்கிழமை) தனது வகுப்பு முடிந்தவுடன் வெற்றிச்செல்வி பூங்குன்றன் அவர்களை மேடைக்கழைத்து ஆடையணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவின் தோழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், கழகக் காப்பாளர் சி.டேவிட் செல்லதுரை, தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் வை.சண்முகம், மாநில ப.க. துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் சு. இனியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அய்.இராமச்சந்திரன், பொன்ராஜ் ஆகியோர் மூன்றாம் நாள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்தனர்.
குற்றாலம் நான்காம் நாள்
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நான்காம் நாளில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ”தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்.
நான்காம் நாள் வகுப்புகள்!
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நான்காம் நாள் வகுப்பு 7.7.2024, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. முதல் வகுப்பாக பொருளாளர் வீ.குமரேசன், “பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்”, இரண்டாம் வகுப்பாக முனைவர் எழில், “தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?”, மூன்றாம் வகுப்பாக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி”, நான்காம் வகுப்பாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்” ஆகிய தலைப்புகளில் பயிற்றுநர்கள் பாடம் நடத்தினர்.
தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்!
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 45 ஆண்டுகளாக நடைபெற்று வருவது எப்படி சிறப்புக்குரியதோ, அதே போல் 45 ஆண்டு காலமும் கவிஞர் கலி.பூங்குன்றன் பயிற்றுநராக கலந்துகொள்வது சிறப்புக்குரியது. இதை பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களை அறிமுகம் செய்து வைக்கும் போது குறிப்பிட்டார். இந்த ஆண்டும் கவிஞர் நான்கு நாளும் கலந்துகொண்டு நான்காம் நாளில், ”தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார். அவர் பேசும் போது, “முதல் நாளில் முதல் வகுப்பு “பெரியார் ஓர் அறிமுகம்” நான்காம் நாள் இறுதி வகுப்பு, “தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்” என்று குறிப்பிட்டுவிட்டு, “எவ்வளவு பொருத்தம் பாருங்கள்” என்றார்.
அன்றைய நாள் (7.7.2024) இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் என்பதை நினைவூட்டினார். ”தொடர்ந்து, கழகத் தலைவரின் 92 வயதில் 82 ஆண்டுகள் பொது வாழ்க்கை என்பதே தனித்தன்மையானதுதான்” என்று தொடங்கி, ”1949 இல் தி.மு.க. பிரிந்த போது, 16 வயது மாணவரான இன்றைய நமது கழகத் தலைவர், அன்று ”பெரியார் தான் என் தலைவர்” என்று உறுதியாக நின்றாரே, அதுதான் தனித்தன்மையிலும் தனித்துவமானது! 62 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியர்! இதே குற்றாலம் பயிற்சி முகாமில் மானமிகு, இணையர் என்ற சொற்களை தமிழுக்குத் தந்தவர்! நெருக்கடி காலத்தை எதிர்கொண்டவர்! இயக்கத்தின் மீது வருமான வரித்துறை வழக்கு பாய்ந்தபோது அதை துணிச்சலுடன் எதிர்கொண்டவர்! 1980 இல் இதே போன்றதொரு பயிற்சிப் பட்டறையின் போதுதான் திருநெல்வேலியில் “பார்ப்பன எதிர்ப்பு மாநாடு நடத்தியவர்! அதன் தொடர்ச்சி தான் பார்ப்பன ஒழிப்பு மாநாடு ஆனது!” என்பது உள்ளிட்ட ஆசிரியரின் பல்வேறு தனித்தன்மைகளை அடுக்கிக்கொண்டே சென்று பாடத்தை உரிய நேரத்தில் நிறைவு செய்தார்.
மேலமெஞ்ஞானபுரம் தோழர் தங்கராஜ் பயிற்சி முகாமுக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கினார். தென்காசி மாவட்டச் செயலாளர் வை.சண்முகம் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி கூறி, 45 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்தார். மதிய உணவுக்குப் பின் மாணவர்கள் அனைவரும் நினைவுப் பரிசுகளுடன் உற்சாகத்துடன் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
மாணவர்களுக்கு
சான்றிதழ், நினைவுப் பரிசுகள்!
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வழங்கினார். சான்றிதழுடன் திருச்சி பிச்சாண்டார் கோயில் சோம. இளங்கோவன் ரூ.35,000 மதிப்புள்ள தோழர் நலங்கிள்ளி எழுதிய 11 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு நூலான ”ஆங்கில ஆசான்” எனும் புத்தகமும், தோழர் வெற்றிச் செல்வன் எழுதிய, ”கருஞ்சட்டை” எனும் புத்தகமும் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. சிறப்பாக குறிப்பு எடுக்கிறவர்களுக்கு பரிசு உண்டு என்று பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் அறிவித்திருந்தார். திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர் ரூ.3000 மதிப்புள்ள இயக்க நூல்களை நன்கொடையாக வாங்கிக் கொடுத்திருந்தார். அவரது கையாலேயே, முதல் பரிசு தேவ.நர்மதா, இரண்டாம் பரிசு சு.பிரதீப், மூன்றாம் பரிசு பெ.சிவசக்தி, ஆறுதல் பரிசாக இரா. இலத்தீஸ்வரன், செ.அ.அவனிகோ ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டது. பட்டிமன்றத்தில் பகுத்தறிவே எனும் தலைப்பில் கலந்துகொண்ட தேவராஜ பாண்டியன், யாழினி, அன்பெழில், கண்ணம்மா, ராஜேஷ் மற்றும் இனநலமே எனும் தலைப்பில் கலந்துகொண்ட நர்மதா, கியூபா, வெண்ணிலவு, ப.வெங்கடேஷ், சிவசக்தி ஆகிய பதின்மருக்கும் நினைவுப் பரிசாக புத்தகங்களை, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனியசாமி, திருவையாறு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.
பயிற்சி பெற்றவர்கள் கருத்து!
பயிற்சி பெற்றவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்ததன் பேரில், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொழில் துறையில் முனைவர் கல்வி பயிலும், தனியார் நிறுவனத்தில் எழுத்தராகவும் பணி செய்யும் திருச்சியைச் சேர்ந்த ஆர்த்தி, “பாடம் எடுக்கிறவர்கள் குறிப்புகள் இல்லாமலேயே புள்ளி விவரங்களோடு பேசியது வியப்பைக் கொடுத்தது. இங்கே பயிற்சிக்கு வந்ததால் நானும் செங்கல்பட்டு மாநாடு 1929 என்று சொல்லி பழகிக்கொண்டேன். எனக்கு தெரிந்திருந்த விவரங்கள் போதாது என்பதால்தான் நான் கலந்துகொண்டேன். ஒரே ஒரு வேண்டுகோள், பெரியார் கொள்கைகளை தமிழில் மட்டும் சொல்லாமல் ஆங்கில வழியில் இருந்தால், நானும் வெளியில் சென்று பேசுவதற்கு நன்றாக இருக்கும். அடுத்த ஆண்டு ஆங்கிலத்தையும் சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும். இனநலனுக்கு புரட்சிக்கவிஞரின் பாடல் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கிறேன். “நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்! வான்தான் என்புகழ்!” என்று கூறி அமர்ந்தார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு பயாலஜி பயிலும் சூரிய நரசிம்மன், “பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. நிறைய நண்பர்கள் எனக்கு கிடைத்துள்ளனர். குற்றால அருவிக்காகத் தான் இங்கே வந்தேன். ரொம்ப பிடிச்சு போயிடுச்சு. இந்த இடத்தை விட்டு போக மனசு இல்ல! நானும் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இயலவில்லை. அடுத்த ஆண்டு கலந்துகொண்டு நிச்சயமாக பட்டி மன்றத்தில் பேசுவேன். நன்றி” என்று பேசினார்.
சென்னையைச் சேர்ந்த காவியா, “என் பெயர் காவியா. நான் இங்கே ஏற்கனவே அறிமுகம் ஆனவள் தான். நான் இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எனக்கு இங்கே மிகவும் பிடித்தது, இங்கு எனக்கு அண்ணன், தம்பி, பாசக்கார தங்கை மற்றும் நண்பர்கள் நிறையக் கிடைத்தார்கள். நிறைய கற்றுக்கொண்டேன். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த முறையும் வருவேன். நன்றி” என்று பேசினார்.
அடுத்து தஞ்சையைச் சேர்ந்த அன்பழகன், “என் பெயர் அன்பழகன். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம். என்னை முதன் முதலாக இயக்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்தது எனது நண்பர் வழக்குரைஞர் ஸ்டாலின் தான். அவருக்கு என்னுடைய நன்றி! இயக்கத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. நான் ஒரு தனியார் மருத்துவமனையில் பணி செய்கிறேன். இங்கு நிறையக் கற்றுக் கொண்டேன். நன்றி” என்றார்.