தமிழ்நாட்டிற்கு காவிரியில் 8,000 கன அடி நீர் திறப்பு கருநாடக மாநில முதலமைச்சர் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

பெங்களூரு, ஜூலை 15- காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீரை திறக்க கருநாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டில்லியில் கடந்த 11ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜூலை 31ஆம் தேதிக் குள் தமிழ்நாட்டில் 1 டிஎம்சி காவிரி நீரை கருநாடக அரசு திறக்க வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை முதல மைச்சர் சித்தராமையா கூட்டினார். நேற்று (14.7.2024) மாலை நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் நிறை வாக பேசிய கருநாடக முதலமைச்சர், “கருநாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இந்த ஆண்டில் 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் 63 சதவீதம் மட்டுமே நிறைந்துள்ளன.

ஆனாலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது. தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், நாங்கள் 8,000 கனஅடி நீரை திறக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்
இதற்கிடையே, காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,250 கனஅடி என தமிழ் நாட்டிற்கு வினாடிக்கு 22,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *