‘மருத்துவக்கல்விக்குத் தேவையில்லாத நீட்’ தமிழ்நாடு மூதறிஞர் குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

viduthalai
3 Min Read

சென்னை, ஜூலை 12- ‘மருத்துவக்கல்விக்குத் தேவையில்லாத நீட்’ எனும் தலைப்பில் தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் சிறப்புக்கூட்டம் 10.7.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு மூதறிஞர் குழு தலைவர் பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ் தலைமையில் தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் பொறியாளர்  த.கு.திவாகரன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரான ஒன்றிய அரசின் மேனாள் செயலாளர், தமிழ்நாடு அரசில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மின்துறை பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவராகிய
ஆர்.பூர்ணலிங்கம் அய்.ஏ.எஸ். சிறப்புரை ஆற்றினார். அவருக்கு தமிழக மூதறிஞர் குழுசார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சுவாமிநாதன் தேவதாஸ் பயனாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி சிறப்பு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர்

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவு சிறப்புரை ஆற்றினார்.
தலைசிறந்த நிர்வாகிகள் கண்ணோட் டத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள் கருத்துகளைச் சொல்வார்கள். அது தான் மூலாதாரம். தந்தைபெரியார் தம் வாழ்நாள்முழுவதும் பேசினார். தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் என்றார் அறிஞர் அண்ணா.

மக்களாட்சி என்பது ஜனநாயகத்தில் மாநிலத்துக்கு மட்டும்தான் மக்கள் உண்டு. ஒன்றியத்துக்கு கிடையாது. 2 பல்கலைக்கழகங்களுக்குள் ஒரே தேர்வு நடத்த முடியாது என்றால், நாடு முழுமைக்கும் ஒரே தேர்வு நடத்தப்படுவது எப்படி? இது மாண வர்கள், பெற்றோர்களை மட்டும் பாதிக்கின்ற விஷயமல்ல, நீட் தேர்வு அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது. மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்துச்செல்வோம் வீதிமன்றத்தைப் பொறுத்து நீதிமன்றம் வரும். நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றால், தந்தைபெரியார் சொல்வதைப்போல, தோல்வி அல்ல, வெற்றிக்கு கால தாமதம் ஆகலாம் வெற்றி பெறுவோம் என்றார்-

ஆர்.பூர்ணலிங்கம்

‘மருத்துவக்கல்விக்குத் தேவையில்லாத நீட்’ எனும் தலைப்பில் ஆர்.பூர்ணலிங்கம் அய்.ஏ.எஸ். ஆற்றிய சிறப்புரையில்,
தமிழ்நாடு பிற மாநிலங்களைவிட முன்னோடி மாநிலமாக முன்னணி திகழ்ந்துவருவதை உரிய புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டி னார். அதற்கு காரணம் தமிழ்நாட்டை ஆண்ட திராவிட இயக்க தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாய அமைப்பு களின் தலைவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கான அவசியத்தை ஏடுத்துரைத்தார்.

அரசமைப்புச்சட்டத்தைக் காக் கின்ற குழுவாக பணிநிறைவு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் 200பேரைக் கொண்ட குழுவில் நானும் ஒருவன். அக்குழுவின் அடிப்படை அரசமைப்பின் முகவுரையில் குறிப்பிடப்பட்டவற்றை காப்பாற்ற வலியுறுத்துவதாகும். எதிராளிகளைக்கண்டு, உங்களைப் போல் பயப்படாமல் இருப்பதில்லை. நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தனி ஆள். எனக்கு பின்புலமாக இயக்கம் இல்லை. நான் புத்தகம் எழுதி வருகிறேன். மவுனமாக இருந்தால் தவறுக்கு துணைபோவதாக ஆகிவிடும். தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் எங்கள் குழு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளதற்கான பெருமை சமத்துவ சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்களையே சாரும்.ஒன்றிய அரசின் எஸ்.ஆர்.எஸ். சர்வே அறிக்கை யின்படி தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக உள்ளது. குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறின்போது இறப்பு விகிதம் உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாடு மருத்துவத்துறையின் மெக்காவாக உள்ளது. தமிழ்நாட்டைவிட உ.பி., பீகார் போன்ற மாநிலங்கள் 40 ஆண்டுகள் பின்தங்கியுள்ளன.

நீட் தேர்வு தொடர்ந்தால், தந்தை பெரியார் போராடி பெற்றுத் தந்நத சமூகநீதி, சமத்துவம் இருக்காது, அடி மட்டத்திலிருந்து யாரும் வரமுடியாது. மருத்துவத்துறையில் நகரம், கிராமப் பாகுபாடுகள் ஏற்படுவதை தடுக்க, தீங்கை ஒழிக்க, நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றார். இறுதியில் தமிழ்நாடு மூதறிஞர் குழு செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்: கழகப் பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ஆ.வெங்கடேசன், புலவர் பா.வீரமணி, கவிஞர் கண்மதியன், அவ்வை நன்னன், வா.மு.சே.திருவள்ளுவர், தாம்பரம் முத்தையன், மோகன்ராஜ், மா.ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *