மனுதர்மத்தை எடுத்துக்காட்டாகக் கூறிய குஜராத் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

Viduthalai
2 Min Read

அரசியல்

அகமதாபாத், ஆக 22 குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை 8ஆம் தேதி விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம், மனுதர்மத்தில் 8 வயதில் திருமணம் நடந்து 13 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்று எல்லாம் பழமைவாத கருத்துகளைக் கூறியதோடு கருவின் வளர்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவக்குழு அமைத்து உத்தர விட்டது. 

இதனைத் தொடர்ந்து பாதிக் கப்பட்ட பெண்ணின் உடல்நிலை, கரு வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த மருத்துவக்குழு கடந்த 10ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க சாத் தியக்கூறுகள் உள்ளதாக தெரி விக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இந்த வழக்கை 11ஆம் தேதி மீண்டும் விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கை 12 நாட் களுக்கு தள்ளி வைத்தது. ஆனால், கடந்த 17ஆம் தேதி இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக உயர்நீதிமன்றம் இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், கரு 28ஆவது வாரத்தை நெருங்குவதாகவும், காரணமின்றி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உட னடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு மீது முடிவெடுக்க உயர்நீதிமன்றம் காலதாமதம் செய்வதாகவும், மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப் பட்டுவிட்டதாகவும் குஜராத் உயர்நீதிமன்றம் மீது உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. மேலும், வழக்கை திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வ தாகவும் இந்த வழக்கில் குஜராத் அரசுக்கும் தாக்கீது அனுப்பியது. 

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கை கடந்த சனிக் கிழமை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம் கருவை கலைக்க தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் ணின் கருவை கலைக்கவும் உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியது. உச்சநீதிமன்றத்தில்  வழக்கு விசா ரணைக்கு வர உள்ள நிலையில் சனிக்கிழமை குஜராத் உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.  

இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, ஜிஜல் புயன் அமர்வு கூறுகையில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள எந்த நீதிமன் றமும் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. இது அரசமைப்பு தத்துவத்திற்கு எதிரானது’ என்று குஜராத் உயநீதிமன்ற உத்தரவை கடுமையாக சாடினர். அப்போது, குஜராத் அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் துஷார் மேதா, குஜராத் உயர்நீதி மன்ற உத்தரவில் எழுத்துப்பிழை ஏற்பட்டதாகவும், அது கடந்த சனிக்கிழமை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் வாதிட்டார். உத்தரவை திரும்பப் பெறும்படி மாநில அரசு சார்பில் உயநீதிமன்ற நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்’  தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *