மூடநம்பிக்கைக்கு எல்லையே கிடையாதா?

Viduthalai
4 Min Read

மனிதன் என்றால் அவனுக்குரிய அடையாளமே பகுத்தறிவுதான் – பகுத்தறிவுள்ள மனிதனைப் பார்த்து ‘சிந்திக்காதே!’ என்பதைவிட பெரிய தண்டனையும் கேடும் ஒன்று இருக்க முடியாது.
இதுகுறித்து தந்தை பெரியாரின் அறுதியிட்ட கருத்து மிகவும் முக்கியமானது.
‘மக்களை எந்தக் காரியத்திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும், அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வதென்ன வென்றால் எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள்கிறேன்’’ (‘விடுதலை’ 4.4.1968) என்று தந்தை பெரியார் கூறியுள்ளதை வளர்ச்சியை விரும்பும் எந்த மனிதனும் ஏற்றுக்கொள்வான்.
இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற அறிவியல் வளர்ச்சியும், அதனால் ஏற்பட்டிருக்கிற பலன்களையும் மனிதன் மகிழ்ச்சியாகத் துய்த்து வாழ்கிறான்.
ஒரு பக்கத்தில் அறிவியல் வளர்ச்சியால் பலன் பெற்றுக் கொண்டே இன்னொரு பக்கத்தில் அஞ்ஞான மூடநம்பிக்கைப் படுகுழியில் வீழ்வது பரிதாபமே!

அத்தகைய மூடநம்பிக்கைகள்கூட வெறும் கடவுள் பற்றோடு நின்று விடுவதில்லை; ஆபாசம், அருவருப்பு என்பதைபற்றிக்கூடக் கிஞ்சிற்றும் கவலைப்படாத நிலையை நினைத்தால், பகுத்தறிவுவாதிகளால் பரிதாபப்பட வேண்டிய நிலையும் இந்த மூடநம்பிக்கையை ஆணி வேரோடு வீழ்த்தும் மானுடத் தொண்டு வேறு ஒன்றும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து தீர வேண்டியுள்ளது.
எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைக் கூறிடலாம்.
‘‘கோவில் திருவிழாவில் பக்தர்கள் துடைப்பம் மற்றும் முறத்தால் அடி வாங்கினர்.
வேலூர் மாவட்டம் புட்டவாபாரிபல்லி ஊராட்சி, பெருமாள்பல்லி குரம்பூர் பகுதியில் திரவுபதி சமேத தர்மராஜா கோவிலில் மகாபாரத சொற்பொழிவு கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது.30ஆம் தேதி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்தது. கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை திரவுபதி கல்யாணம், அர் ஜுனன் தபசு, கர்ணன் மோட்சம், திரவுபதி துயில் உரிதல் மற்றும் துரியோதனன் வதம் ஆகியவை நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக 1.7.2024 அன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. துரியோதனன் மற்றும் பீமன் வேடமிட்டவர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
அதைத்தொடர்ந்து தனது மகன் துரியோதனனை படுகொலை செய்ததை அறிந்து கோபமடைந்த தாயார் காந்தாரி படுகளத்திற்கு வந்து தனது மகன் துரியோதனனை கொன்றவர்களை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூச்சலிட்டவாறே கையில் துடைப்பம் மற்றும் முறத்தால் அங்கிருந்த பக்தர்களை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காந்தாரி வேடமணிந்தவரிடம் பக்தர்கள் துடைப்பம் மற்றும் முறத்தால் அடி வாங்கினர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், ஆந்திர மாநில எல்லை பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.’’

‘தினத்தந்தி’ 2.7.2024

இப்படியும் ஒரு காட்டுமிராண்டித்தனம்.
துடைப்பத்தாலும், முறத்தாலும் அடிவாங்குவதுதான் பக்தியா? அப்படி அடி வாங்கினால்தான் கடவுளின் கடாட்சம் கிட்டுமா?
இதைவிட்டுத் தள்ளுங்கள். சேலம் அன்னதானப் பட்டியில் ஆண்டுதோறும் செருப்படி திருவிழாவும் நடைபெற்று வருகிறது.
திருப்பூரையடுத்த காரமடையில் கோயில் திருவிழா! பிள்ளை இல்லாத பெண்மணி பிள்ளைவரம் வேண்டி பூசாரி தனது வாயில் மென்று குழப்பிய வாழைப்பழத்தை – அந்தப் பெண் தன் வாயால் கவ்வி இழுத்துச் சாப்பிடும் கேவலத்தை என்ன சொல்ல!
கோயிலில் பக்தர்கள் சாப்பிட்டு வீசி எறிந்த எச்சில் இலையில் உருள்வது வேண்டுதலாம்.
இதனால் ஏற்படுவது பரவுவது நோயாக இருக்க முடியுமே தவிர, நல்ல பலன்கள், பயன்கள் ஏற்படப் போவதில்லை.
கோயிலில் சாமிக்குச் செய்யப்படும் அபிஷேகம் சாரத்தின் வழியாக வழிந்துவருவதைப் பிடித்து அருந்துவதும், தலையில் தடவிக் கொள்வதும்தான் பக்தியோ!

சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயில் பற்றி ஆய்வு செய்த இந்திரா காந்தி என்ற ஆய்வாளர் கபாலீஸ்வரர் கோயிலில் வழங்கப்பட்ட அந்த அபிஷேகத் தண்ணீரை கிண்டி ‘கிங்’ ஆய்வுச் சாலைக்கு அனுப்பி சோதனை செய்ததில் கொடிய நோய்க் கிருமிகள் இருந்ததைத் தன் ஆய்வில் வெளியிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் நடக்கும் மகாமகம். அந்த மகாமகக் குளத்தில் தலை முழுக்குப் போட்டால் 12 ஆண்டுகள் செய்த பாவம் ஒரேயடியாக ஒழிந்து போய் விடுவது மட்டுமல்ல; புண்ணியமும் கிடைக்குமாம்!
(பாவ, புண்ணியத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு என்று சொன்ன சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளுங்கள்)
கடந்த மகாமகம் முடிந்த பிறகு, மகாமகக் குளத்துத் தண்ணீரை எடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சோதனைக்கு அனுப்பியதில் அதன் முடிவு என்ன தெரியுமா?
அந்தத் தண்ணீரில் மலக்கழிவு 28% சிறுநீர்க் கழிவு 40% ஈகோலி என்ற எசரிக்கியா வகை பாக்டீரியாக்கள் கிருமிகளும் குடி கொண்டிருந்தன. (ஆதாரம்:் DT NEXT 23.2.2018)
பக்தியின் பெயரால் கடவுள் நம்பிக்கையின் பெயரால் இவ்வளவுக் கேவலங்களும், ஆபாசங்களும் நடக்கின்றன.
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றுதந்தை பெரியார் சொன்னால் கோபப்படும் பக்தர்கள் – அன்பர்கள் சிந்திப்பார்களாக!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *