ஆசிரியர் விடையளிக்கிறார்

viduthalai
3 Min Read

கேள்வி 1: ஆசாராம், ராம்பால், ராம்ரகீம், இப்போது நாராயண் போலே பாபா எல்லோரும் பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் கட்டி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஏதாவது பெரிய பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் வெளிவருகிறதே. இவர்களின் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்காதா??

– மா.செங்கிஸ்கான், திருத்தணி

பதில் 1: காவிகளை வணங்கி, பழைய கிரிமினல் குற்றவாளிகளையெல்லாம் “சாமியார்களாக” “பாபாக்களாக” மற்றும் பெரும் பெரும் ஆசிரம சுகபோகம் அனுபவிப்பதை ஊக்கப்படுத்துகிறது பா.ஜ.க. அரசு. மற்ற சில அரசியல் கட்சிகளில் பல சாமியார் பைத்தியங்கள் உள்ளன. (புதுச்சேரி நினைவுக்கு வருகிறதா?)
வேலிகளே பயிரை மேயும் நிலைதான்! அதனால் போலிகள் உற்பத்தி நாளும் பெருகுகிறது.


கேள்வி 2: கங்கையில் குளித்து பசுமாட்டுக்கு வெல்லமும் ரொட்டியும் கொடுத்தால் நீட் தேர்வு மோசடிக் குற்றச்சாட்டு மறைந்துவிடும் என்று கூறி ஒரு ஆசிரியை வாரணாசியில் பசுமாட்டிற்கு பூஜை செய்த போது கைதாகி உள்ளாரே? அப்படி என்றால் கங்காவில் ஆரத்தி பசுபூஜை செய்பவர்களை எல்லாம் இவர் வரிசையில் சேர்க்கலாமா??

– சே.ஆறுமுகம், மதுரை

பதில் 2: நல்ல கேள்வி. பதிலும் அதில் உள்ளதே! மகிழ்ச்சி!
பசு பூஜை பற்றி இவர்கள் பாராட்டும் ‘வீர’ சாவர்க்கர் எவ்வளவு கடுமையான எதிர்மறை விமர்சனம் செய்துள்ளார் தெரியுமா? மறைத்துவிட்டார்கள் இந்த பசுப் பாதுகாவலர்கள்.


கேள்வி 3: எண்ணில்லா வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளேன் – அதன் பலன் இப்போது தெரியாது என்று மோடி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது குறித்து?

– வே.தமிழ்மணி, ஒசூர்

பதில் 3: டிரால்ஸ் (Trolls) என்ற பொய் பரப்பும் தொழிற்சாலைகளை குறிப்பிடுகிறாரோ என்னவோ? யாமறியோம்! அதன் பலன்தான் எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் பட்டியலைப் பார்த்தாலே தெரிகிறதே!


கேள்வி 4: குறிப்பிட்ட பார்ப்பன அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் ஒரே பதவியில் நீடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனரே – இதனால் அந்தப் பதவிகளை அடையாமலேயே தகுதியுள்ள பலர் ஓய்வு பெற்றுவிட்டார்களே? இங்கே தகுதியான அதிகாரிகளே இல்லையா?

– க.காந்திராஜன், தூத்துக்குடி

பதில் 4: உச்சநீதிமன்றம், தேர்தல் கமிஷன் மற்றும் பிற துறைகளில் பதவி நீடிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியும் திருந்தவில்லையே!


கேள்வி 5: ராகுல் 100க்கு 99 மார்க் எடுக்கவில்லை என்று மோடி கூறியிருக்கிறாரே… அவர் 400 சொல்லி வெறும் 240 பெற்றதைப் பற்றி பேசமறுக்கிறாரே?

– த.கோதண்டராமன், கன்னியாகுமரி

பதில் 5: சிரிப்புதான் வருகுதய்யோ!


கேள்வி 6: தேர்வு மோசடிகளில் கைதானவர்கள் வட மாநிலங்களில் பல அரசுத்தேர்வுகளில் நடந்த மோசடிகளில் கைதாகி சிறைசென்று அவ்வப்போது வெளியே வருபவர்கள் என்று சிபிஅய் கூறியுள்ளதே? மோசடி செய்து தற்போது பதவியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தமாட்டார்களா?

– க.காளிதாசன், காஞ்சி

பதில் 6: அவதாரமான அவர்தான் இக்கேள்விக்கு பதில் அளிக்க முடியும். அடியேனால் முடியாது!


கேள்வி 7: ‘ஹத்ரஸ்’ கொடூரம் நடந்த தடம் கூட மறையவில்லையே – கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தை மோடி ஏன் தவிர்க்கவில்லை?

– வே.செங்குட்டுவன், விருதுநகர்

பதில் 7: மணிப்பூருக்காக நாடே துக்கப்பட்டோம். பிரதமர் மட்டும் அங்கு செல்லாது – பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் இதுவரை சொல்லாத நிலையில் இது அதிசயமா?


கேள்வி 8: எந்த ஒரு வலுவான குற்றச்சாட்டும் இல்லாமல் 5 மாதம் ஒரு மாநில முதலமைச்சரை சிறைவைத்துள்ளார்களே – சாமானியர்கள் நிலை எப்படி?

– நா.நெப்போலியன், வேளச்சேரி

பதில் 8: வாக்காளர்கள் – நல்ல குடிமக்கள் கட்சி வேறுபாடு இன்றி சிந்திக்க வேண்டிய விஷயம் இது!


கேள்வி 9: சமஸ்கிருதப் பெயர் சூட்டப்பட்ட மூன்று சட்டங்களுக்கும் – சமஸ்கிருதம் படிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று மன்கி பாத் நிகழ்வில் மோடி பேசியதற்கும் தொடர்பு உண்டா?

– தி.சங்கமித்திரன், வியாசர்பாடி

பதில் 9: ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு நிகழ்ச்சிகளே இரண்டும். ஒன்றுக்கு மற்றொன்று தொடர்பு உள்ள செய்திகளே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *