உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் முற்றுகை
நெல்லை, ஜூலை 5 கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிக்கு நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் இரண்டு அணு உலைகள் மூலம் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3 மற்றும் 4ஆவது அணு உலைகளில் 80 சதவிகித கட்டுமானபக பணிகள் நிறைவடைந்த நிலையில், 5 மற்றும் 6வது அணு உலைகளில் 35 சதவிகித பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 200 தொழிலாளர்களை 2 பேருந்துகளில் தனியார் நிறுவனம் கட்டுமான பணிக்கு அழைத்து வந்தது. இதனை அறிந்த உள்ளூரைச் சேர்ந்த கூடங்குளம் காண்ட்ராக்ட் அசோசியேஷன் தொழிற்சங்க நிர்வாகிகள் நேபாள பணியாளர்களை அழைத்து வந்த பேருந்துகளை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் கூடங்குளம் காவல்துறையினர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் வரை பணிக்கு செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி உள்ளூர் தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மகாராட்டிரக் கூட்டணி ஆட்சியில் நிர்வாக சீர்கேடு
அங்கன்வாடியில் குழந்தைக்கு கொடுத்த உணவில் பாம்பு
சாங்கிலி, ஜூலை 5 மகாராட்டிராவில் அங்கன்வாடியில் குழந்தைக்கு தரப்பட்ட உணவில் இறந்த பாம்பு இருந்தது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் எழுப்பி உள்ளது. மகாராட்டிராவில் ஏக்நாத் ஷிண்டே(சிவசேனா), அஜித் பவார்(தேசியவாத காங்கிரஸ்) மற்றும் பாஜ அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசால் நடத்தப்படும் அங்கன்வாடி பள்ளிகளில் மதிய உணவுத்திட்டடத்தின்கீழ் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பருப்பு கிச்சடி, சாதம் அடங்கிய உணவு பொட்டலங்கள் தரப்படுகின்றன.
இந்நிலையில் சாங்கிலி மாவட்டம் பலூஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் கடந்த 1.7.2024 அன்று வழக்கம்போல் குழந்தைகளுக்கு மதிய உணவு பொட்டலங்கள் தரப்பட்டன. அப்போது ஒரு குழந்தைக்கு தரப்பட்ட பொட்டலத்தில் இறந்த நிலையில் சிறிய பாம்பு இருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அதை புகைப்படம் எடுத்து உள்ளூர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை எழுப்பி உள்ளது.
மாணவா்களுக்கு இலவச பேருந்து பயணஅட்டை
‘எமிஸ்’ தளத்தில் வசதி
சென்னை, ஜூலை5 பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா்களுக்கு இலவசமாக பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாணவா்களின் நலன்கருதி பயண அட்டையைப் பெறுவதற்கு எமிஸ் வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள் எமிஸ் தளத்துக்கு சென்று மாணவா்களுக்கு பேருந்து பயண அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்தப் பணியை உயா் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநா் மற்றும் ஆய்வக உதவியாளா்களைப் பயன்படுத்தி உடனே செய்து முடிக்க வேண்டும். இது சார்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமையா சிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.