‘டில்லி மகளிர் ஆணையத்தின்’ உதவி கேட்டு ஓராண்டில் 6.30 லட்சம் புகார்கள் வந்ததாக ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் கூறியுள்ளார்
பெண்களுக்காக இயங்கும் 181 என்ற ஹெல்ப்லைனில் பெண்கள் ஆணையத்திற்கு கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன; ஒரே ஆண்டில் மட்டும் ஜூலை 2022 முதல் ஜூலை 2023 வரை 6.30 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன.
ஆணையத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் டில்லி காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாலிவால் கேள்வி எழுப்பினார்; மற்றும் இந்தப் புகார்கள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.
“எங்களுக்குக் கிடைத்தவையில் 92,000 புகார்கள் புறநகர் டில்லியில் இருந்தும், 11,000 புகார்கள் டில்லி நகரத்தில் இருந்தும் வந்தவை. மற்றவை டில்லியின் அதிகார வரம்பிற்கு வெளியிலிருந்து வந்துள்ளன.
இப்புகார்களில் – 38,000 குடும்ப வன்முறை வழக்குகள், 5,000 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல் வழக்குகள் மற்றும் 3,500க்கும் மேற்பட்ட சிறுமிகள் குழந்தைகள்மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள்” என்று அவர் கூறினார்.
மேலும், “குழுக்கள் இடையே நடைபெறும் மோதல்களில் பெண்கள் மீதான வன்முறைகள் 9,516 வழக்குகள் – பெண்கள் கடத்தல் நாட்டின் இதர பகுதிகளில் இருந்து 5,895 – பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 4,229 சிறுமிகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான 3,647 வழக்குகள் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 3,558 வழக்குகள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 38,140 வழக்குகள் 21 முதல் 31 வயதுக்குட்பட்ட பெண்களிட மிருந்து பதிவாகியுள்ளன. மொத்தம் 16,939 வழக்குகள் 11 முதல் 20 வயதுக்குள்பட்ட பெண்களுடன் தொடர்புடையவை.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடமிருந்தும் – 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடமிருந்தும் 3,735 வழக்குகள் பெறப்பட்டுள்ளன, மற்றும் 90 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடமிருந்து 40 வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயார் செய்து காவல்துறை ஆணையர், முதலமைச்சர், ஆளுநர், ஒன்றிய பெண்கள் சமூக நலத்துறை மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு நேரிடையாக பொறுப்பு இருப்பதால், மேலே கூறிய அனைவரும் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, விவாதிக்க அவர்களை அழைக்கிறோம் என்பதை ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தத் தரவுகளைப் பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
“181 என்பது 24/7 ஹெல்ப்லைன் ஆகும், ஆபத்தில் இருக்கும் பெண்களுக்காக இயக்கப்படுகிறது. புகார்தாரர்களுக்கு ஆலோ சனை வழங்கப்படுகிறது, தேவைப்பட்டால், அவர்களுக்கு டில்லி காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் தங்குமிடங்கள் போன்றவற்றை வழங்கும்.
அவர்களுக்கு உதவவும், ஆபத்தில் இருக்கும் பெண்களை மீட்கவும் ஓர் ஆலோசகர் குழு அனுப்பப் படுகிறது.
பெண்கள் எங்கிருந்தாலும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம், இணையம் மற்றும் அலைபேசி இல்லாத தொலைதூர மலைக் கிராமங்களிலும் பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். அவர்களிடமிருந்தும் புகார்கள் பெற நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து அச்சத்தில் பல பெண்கள் உள்ளனர். புகார் அளிக்கும் பெண்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய ‘தேசிய மகளிர் உரிமை ஆணையம்’ தயாராக உள்ளது” என்றும் ஆணையத்தின் தலைவி சுவாதிமாலிவால் கூறினார்.
குற்றம் சுமத்தி இருப்பவர் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர் அல்லர். அதிகாரப் பூர்வமான பெண்கள் நலனைப் பாதுகாக்கும் பெண்கள் ஆணையத்தின் தலைவர்.
டில்லி – தலைநகரத்தில் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. டில்லியின் காவல் துறை – பாதுகாப்பு என்பது ஒன்றிய அரசுக்கும், ஆளுநருக்கும் கட்டுப்பட்டவை.
டில்லி மாநில அரசுக்கென்று இருந்த அதிகாரங்கள் எல்லாம் ஒன்றிய பிஜேபி அரசால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.
பிஜேபி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை – இல்லவே இல்லை.
இந்த வெட்கக் கேட்டில் ‘பாரத மாதாக்கி ஜே!’ என்று உரத்த குரல்! இந்த ஆட்சியை நீடிக்க விடலாமா? வெகு மக்கள் சிந்திப்பார்களாக!