பார்ப்பனர் பார்ப்பனரே!

viduthalai
3 Min Read

“பிரிட்டன் பார்லிமெண்டுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், லண்டனில் உள்ள கோவிலுக்குச் சென்ற இந்திய வம்சாவளியான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ”ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன்; அதுவே என்னை வழிநடத்துகிறது,” என்று குறிப்பிட்டார்.

அய்ரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமெண்டுக்கு, 4ஆம் தேதி (4.7.2024) தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அவருடைய மனைவி அக் ஷதா மூர்த்தி நேற்று முன்தினம் சென்றனர். கோவிலில் பூஜைகள், வழிபாடுகளில் அவர்கள் பங்கேற்றனர்.

ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் நாராயண மூர்த்தி, சமூக ஆர்வலர் சுதா மூர்த்தியின் மகள் தான், அக் ஷதா மூர்த்தி. பழமைவாத கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹிந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார். கடந்தாண்டு ஜி – 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தபோதும், டில்லியில் உள்ள சுவாமிநாராயண் கோவிலுக்கு தம்பதியர் சென்று வந்தனர்.

லண்டனில் உள்ள கோவிலுக்குச் சென்ற ரிஷி சுனக், அங்கிருந்த மக்களிடையே பேசியதாவது:
நான் ஒரு ஹிந்து என்பதில் பெருமைப்படுகிறேன். என் மத நம்பிக்கையில் உறுதியாக உள்ளேன். அது என் வாழ்க்கையில் எனக்கு உந்துதலாக இருந்து வந்துள்ளது. என் பெற்றோர் எனக்கு ஹிந்து மதத்தின் பெருமைகளை ஊட்டி வளர்த்தனர்.

பார்லிமெண்ட் எம்.பி.,யாக பகவத் கீதையை வைத்து பதவியேற்றேன். என் மதம் மற்றும் நம்பிக்கை, நம் கடமையை செய்யும்படி வலியுறுத்துகிறது. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று கீதை கூறுகிறது. அதுதான், என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். எந்த எதிர்ப்புகள் வந்தாலும், நல்லது செய்வதில் இருந்து விலக மாட்டேன்.
ஹிந்து தர்மம், பொது வாழ்க்கையில் எப்படி செயல்பட வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளது. இதை, என் மகள்களுக்கும் கற்றுத் தருகிறேன். என் பெற்றோர், என் மாமியார் செய்து வரும் பணிகள் எனக்கு முன்மாதிரியாக உள்ளன.

கடந்த சில நாட்களாக, என் மதத்தின் அடிப்படையில் சிலர் விமர்சித்து வருகின்றனர். மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் இந்த நாட்டின் பிரதமர் என்பதே எனக்கு பெருமை. அதுவே, இந்த நாட்டின் சிறப்புமாகும். இவ்வாறு பேசினார்.”

– ‘தினமலர்’, 1.7.2024

நாடு கடந்து சென்றாலும் பார்ப்பனர்கள் தங்களுடைய பார்ப்பனத்தனத்தை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
பிரிட்டன் மக்கள் தங்களுக்கான பிரதமர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் – எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்ப்பதில்லை.

அந்நாட்டு மக்களின் ‘பெருந்தன்மையை’ தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்வதை என்ன செய்ய!
ஹிந்து மதத்தின் பெருமையைப் பற்றிப் பேசும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஹி ஹிந்து மதத்தின் ஆணி வேரான வர்ணா சிரமத்தின் பிறப்பால் பேதம் விளைவிக்கும் ஜாதிய கண்ணோட்டத்தில் அங்கு ஆட்சி நடத்த முடியுமா?
பிரிட்டன் நாட்டு மக்கள் ஹிந்து வர்ண தர்மப்படி எந்தப் பட்டியலின்கீழ் வருவார்கள்? அதையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே!

இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் பார்ப்பனர்கள், தங்கள் கையோடு ஹிந்து – வைதிகக் குப்பைகளையும் சுமந்து செல்வதைக் கவனிக்கத் தவறக் கூடாது! ஹிந்து மதம் என்று வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்பதால், அதனைக் காரணம் காட்டி சமாதானம் சொன்னாலும் சொல்லுவார்கள் – யார் கண்டது?

அமெரிக்கத் தீவான ஹவாய் மாகாணத்தின் பிரதிநிதிகள் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட துளசி கப்பார்ட் பதவி ஏற்றபோது பகவத் கீதைமீது பதவிப் பிராமணம் எடுத்ததையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

வெளிநாடுகளில் பிழைப்புக்காகச் செல்லும் பார்ப்பனர்கள் பாரதி சங்கம் என்ற பெயராலும், H.S.S. என்ற பெயராலும் (R.S.S.இன் புது வடிவம் மூலம்) தங்களின் பார்ப்பனீயத்தைப் பரப்புவதும் தெரிந்த ஒன்றே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *