சேலம், ஜூலை 2- பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அங்கு நீதித்துறையின் பங்களிப்பு மிகுந்த அவசியமாகிறது. பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் பல நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் உள்துறை மற்றும் நிதித்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது.
இந்த ஆண்டு ஒன்றிய அரசின் பங்களிப்பு கிடைக்கும்போது, மாநில அரசின் பங்களிப்போடு இன்னும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும்.”
-இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
கேதார்நாத் கோயில் பக்திப் பயணம் என்றால் உயிர்பலி பயம்தான்
பனிச்சரிவால் பக்தர்கள் அவதி
டேராடூன், ஜூலை 2- உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. கேதார்நாத் கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக கடந்த மே மாதம் 10ஆம் தேதி திறக்கப்பட்டது.
கேதர்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள காந்தி சரோவர் மலையில் 30.6.2024 அன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. கோவிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி சரோவர் மலையில் அதிகாலை 5 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது.
மிகப் பெரிய பனிப் பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதனிடையே கேதார்நாத் கோவிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் பனிச்சரிவை தங்களது அலைபேசிகளில் காட்சிப் பதிவு மற்றும் ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாகியுள்ளன.