வங்கிக் கணக்கில் பணம் இல்லை
தருமபுரி, ஜூலை 1– தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பில்லியனூர் அக்ரகாரம் பகுதியில் முனியப்பன் கோயில் உள்ளது. மாதா மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு கோழிகளை பலியிடுவது, அங்கே கறி விருந்து சமைத்து சாப்பிடுவது வழக்கமாக நடைபெறுவது உண்டு. அறநிலைத் துறை மூலம் அங்கு உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் புதன் நாட்களில் அங்கு நடந்த திருவிழாவில் உண்டியலில் போட்ட பணத்தை எண்ணுவதற்காக அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் காணிக்கை எண்ணப் பட்டது.
அப்போது அந்த உண்டியலில் ஒரு காசோலை இருந்தது. அந்த காசோலையில் ரூபாய் 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 என எழுதி இருந்ததை கண்டு அறநிலை துறை அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காசோலையில் மகேந்திரா டெக்னாலஜி, என்றும் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலை என தெரியவந்தது.
அந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா? என சவுத் இந்தியன் வங்கியில் விசாரித்தினர். விசாரித்ததில் அந்தக் கணக்கில் பணம் ஏதுமில்லை அந்த காசோலையை யார் போட்டார்கள் என தெரியவில்லை என்று வங்கி அலுவலர்கள் தெரிவித்து விட்டதால் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ஆண்டவனுக்கே அல்வா கொடுத்த அந்த நபர் யார் என விசாரித்து வருவதாக பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர்.
இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்!
தமிழ்நாட்டை சேர்ந்த 24 மீனவர்கள் கைது!
4 படகுகளும் பறிமுதல்
சென்னை, ஜூலை 1- ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் தமிழ்நாட்டை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், 25 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை கடற்படையின் இந்த தொடர் கைது நடவடிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் ஜனவரி தொடங்கி இன்றைய தேதி வரையில் இந்திய மீனவர்களின் 32 படகுகளையும், 238 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் இலங்கை கடற்படை கூறியிருக்கிறது. மேலும், தனது கடல் எல்லையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று (30.6.2024) 24 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்திருக்கிறது. இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படை விளக்க மளித்திருக்கிறது. மீனவர்களின் 4 நாட்டுப் படகு களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து மீனவர்களிடம் கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். அதில், “25.6.2024 தேதி TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டும்” என கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.