பெரியார் மெடிக்கல் மிஷன் சார்பில் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

Viduthalai
9 Min Read

பெரியார் மெடிக்கல் மிஷன் சார்பில் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள்
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
‘உடல் நலமும், மன நலமும்’ உரை
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம்

கழகம்

சென்னை, ஜூன் 30- பெரியார் மெடிக்கல் மிஷன் சார்பில் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் எனும் தலைப்பில் மருத்துவத்துறைகளில் வல்லுநர்களைக் கொண்டு நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் சிறப்புக் கூட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 28.6.2024 அன்று சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று பல்வேறு தகவல்களை சுருக்கமாகவும், சுவையாகவும் வழங்கினார்.
‘உடல் நலமும், மன நலமும்’ எனும் தலைப்பில் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மருத்துவத் துறையில் மன நலனைப் பேணிப்பாதுகாப்பது குறித்து விரிவாக எடுத்துரைத்து பார்வையாளர்களுக்கு மனநலன் பாதுகாப்புகுறித்த விழிப்புணர்வை ஊட்டி சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் மருத்துவக் குழுமம் பெரியார் செல்வி இணைப்புரை வழங்கினார்.
இயக்குநர் மருத்துவர் மீனாம்பாள் வரவேற்புரை ஆற்றி, மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் குறித்து அறிமுக உரையாற்றினார். கடந்த 20 ஆண்டுகளாக மன நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சரிவிகித உணவு, உடற்பயிற்சி, தடுப்பூசி, கால முறைப்படி மருத்துவ பரிசோதனைகள் என அறிவியல் முறைப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். மனநலம் என்பது மற்றவர்களுக்காக வாழும் ஒரு நல்லெண்ணத்துடன் இருப்பது, தனிமையைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் தலைமையுரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையில்,
மருத்துவம், பத்திரிகை என்பது தொழிலா, தொண்டா? என்றால், பல பேருக்கு தொழில், சில பேருக்கு தொண்டு. அப்படி தொண்டாகக் கருதி பணியாற்றி வருபவர் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் ஒருவர்.
மக்கள் மனதில் ஜாதி மனநோய் போல், படித்தவர்கள் மத்தியில் பேத உணர்ச்சி உள்ளது. மற்ற மருத்துவ வல்லுநர்க ளிடம் வைத்தியத்துக்கு செல்பவர்கள் வெளிப்படையாக கூறுகிறார்கள். ஆனால், மனநல மருத்துவரிடம் செல்வது குறித்து வெளிப்படையாக சொல்வதில் வேறுபாடு உள்ளது.

மனமது தூய்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டிய தில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மோட்டார் கார் உதிரிப் பாகங்களை மாற்றுவதைப்போல், உடல் உறுப்புகளை மாற்றுகின்ற அறிவியல் வளர்ச்சி மருத்துவத்துறையில் வளர்ந்து வருகிறது.
கண்ணுக்கு கண்ணாடி அனைவருக்கும் தெரிவ தைப்போல், காது கேட்பதற்கு கருவி வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் என்றால் ஒரு நிலை, அதே விமானம் ஓட்டுபவர் என்றால் வேறு நிலை. தொழிலில் பேதம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்று திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.

அறிவு சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். செயல்திறனுடன் இருக்க வேண்டும்.
மருத்துவர் சிவபாலன் வயதானவராக இருப்பார் என்று நினைத்தேன். இளையவராக துடிப்புள்ளவராக, நிறைய புத்தகங்களை எழுதியுள்ளவராக இருக்கிறார். கவிஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களில் டாக்டர் சக்தி போல் இவரும் குறிப்பிடத்தக்கவராக உள்ளார். இவரைப்போல், கொள்கையால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் ஏராளம். அந்தவகையில், இவர் பெரியார் திடலுக்கு புதியவரல்ல.
மன உறுதி இருக்க வேண்டும். நம்மால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று வாழ்வியல் சிந்தனையில் குறிப்பிட்டுள்ளோம்.

Immunity – நோய் எதிர்ப்பாற்றல் வேண்டும் என்பதைப்போல், Rationalism- mental immunity is much more important. பகுத்தறிவின்படி மன நலனுக்கான எதிர்ப்பாற்றல் மிகவும் முக்கியம்.
மனநல மருத்துவத்துறை மிக முக்கியமான துறை. எவரும் எளிதில் வெளிப்படையாகப் பேசத்தயங்கும் துறை.
வெளிநாடுகளில் , அமெரிக்காவில் அப்படி அல்ல, அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டும்.
மண்ணை மணந்த மணாளன் தந்தைபெரியார். சமுதாயத்தில் பேதநிலை எதிலும் இருக்கக் கூடாது, குழந்தைகளில் ஆண், பெண் என பேதம் இருக்கக்கூடாது. மனிதர்களில் எல்லாரும் சமம். குழந்தைகள் வளர்ப்பில் பாகுபாடு கூடாது.
தந்தைபெரியாரிடம் 120 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பார்கள். அதிலென்ன கஞ்சத்தனம், 1000 ஆண்டுகள் என்று சொல்ல வேண்டியதுதானே என்பார்.

நீண்ட காலம் வாழ வேண்டும் என்று சொல்பவரிடத்தில், சொல்வதற்கென்ன, வாழ்பவருக்குதான் தெரியும் என்பார்.
நீண்ட நாள் வாழ்வு என்பதைவிட, நல வாழ்வு வாழ வேண்டும்.
மருத்துவத் துறைகள் நாளும் வளர்ந்து வருகின்றன. வயதான மருத்துவர்களை விட வயதில் குறைந்தவர்களிடம் சிகிச்சைபெறுங்கள் என்று மூத் மருத்துவர்களே ஆலோசனை கொடுக்கிறார்கள்.

தந்தைபெரியார் கருத்துகளைத் தொகுத்து, அப்போது ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தோம். அந்த புத்தகத்துக்கு அறிவின் எல்லை என்று தலைப்பு போட்டிருந்தோம். தோழர் ஒருவர் தந்தைபெரியாரிடம் அந்த ப்புத்தகத்தில் கையெழுத்து வாங்கச் சென்றார். புத்தகத் தலைப்பைப் பார்த்தார் தந்தைபெரியார். கையெழுத்துபோட்டுவிட்டு, பின்னர் தனியே எங்களை அழைத்தார். பாராட்டப் போகிறார் என்று நினைத்து சென்றோம். ஆனால், தலைப்பு அறிவின் எல்லை என்று உள்ளதே, அறிவுக்கு ஏது எல்லை? அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும். ஈ.வெ.ராமசாமி என்ற பிற்போக்காளன் இருந்தான் என்று 120 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் தலைமுறையினர் சொல்லும் அளவுக்கு அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.

மருத்துவம் என்பது தொண்டறம். போதைப்பொருள் பழக்கங்கள் இருப்பதற்கான காரணம் என்ன? மனநலத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு சமூகப்பிரச்சினைகள் உள்ளன.
மருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது ஏன், யாருக்காக? மருத்துவருக்காகவா, மருந்து கடைகளில் விற்பனை ஆகவேண்டும் என்பதற்காகவா?
நமக்காக, நோய் தீர்ப்பதற்காக.
அதிலும் காலாவதியான மருந்து என்றால் ஒதுக்கிவிடுகிறோம்.
அதேபோல் காலாவதியான பழக்க, வழக்கங்கள், மூடநம்பிக்கைகள் உள்ளிட்ட பலவற்றை ஒதுக்க வேண்டும்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை உரையில் குறிப்பிட்டார்.
மருத்துவருக்கு சிறப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மருத்துவர் சிவபாலன் இளங்கோவனுக்கு பயனாடை அணிவித்து வாழ்வியல் சிந்தனைகள் புத்தகத்தை வழங்கி சிறப்பு செய்தார்.
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் உரை
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் உரையில்,
சமுதாயத்தில் மனநலம் குறித்த பார்வை எதிர்மறையான பார்வையாக உள்ளது.
சமுதாயத்தில் இருந்துவருகின்ற மூடத்தனங்கள் பலவற்றை உடைத்த இடம் பெரியார் திடல். அதேபோல், மனநலம் குறித்த அறிவியலுக்கு புறம்பானவற்றையும் உடைத்திட பெரியார் திடல் முன் வரவேண்டும்.
மன நல மருத்துவம் என்பது மன நலனை மேம்படுத்துவது, மன நல சிகிச்சை என்கிறோம்.
ஒருவரை நன்றாக இருக்கிறீர்களா? என்று கேட்கும்போது, நம்மையும் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்பதற்கு இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அதே நேரத்தில் உங்களின் மனநலன் நன்றாக இருக்கிறதா என்றால் குற்றமாக கருதுகிறார்கள்.
உடலிலுள்ள நோயை, காயத்தை மறைத்தால், அது சீழ் ஆகிவிடும். அதுபோல், மனநல சீர்கேடுகளை வெளியில் சொல்லாமல் இருப்பதால் அதன் பாதிப்பு மேலும் மோசமடையும்.
மனநலம் குறித்து படித்தவர்களிடையிலேயே எதிர்மறை சிந்தனை உள்ளது.
மனநலம் என்றதும், அறிவியலுக்கு எதிராக ஆன்மிகம், யோகா என்கிறார்கள்.
யோகாவிலேயே புதியதாக அரசியல் யோகா செய்கிறார்கள்.
மனதைப்பற்றி ஏராளமான புதிர்கள் பரப்பப்பட்டுள்ளன. உருவம் (structure) இல்லை என்பதால், இல்லாத ஒன்றைப் பற்றி இருப்பதைப்போல தத்துவம் கூறி வருகிறார்கள். அதனால்தான் எங்களைப்போல மனோவியல் மருத்து வர்களை மனோதத்துவ மருத்துவர்கள் என்கிறார்கள்.
மனதைப்பற்றி பேசுபவர்கள் யார் என்றால், சாமி யார்கள்தான். ஆன்மிக விளக்கங்களை பேசி வருகிறார்கள். பேய் பிடித்திருப்பதாக துன்புறுத்துகிறார்கள்.

முன்பெல்லாம் ஊருக்கு ஊர் நிறைய பேர் மன நிலை பிரச்சினை உள்ளவர்களாக இருந்தார்கள்.
மனநிலை பிரச்சினை உள்ளவர்களை வெளிநாட்டில் சோதனை எலிகளைப்போல, அடைத்து வைத்து, பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை செலுத்தி அதன் விளைவுகளை சோதித்து வந்தார்கள். அப்படி சில மருந்துகளைக் கொடுத்தபோது அவர்களில் சிலர் தெளிவடைந்து வெளியே வந்தார்கள். அதன்பின்னர்தான் இந்த நோய்க்கு மருந்து கொடுத்து குணப்படுத்த முடியும் என்று கண்டறிந்தார்கள்.
ஃபீனியஸ் கேஜ் (Phineas P. Gage) என்று ஒருவர் ரயில்வேயில் ஃபோர்மேனாக இருந்தார். அனைவரிடமும் பண்பாக பழகிவந்த அவருக்கு ஏற்பட்ட விபத்தில் அவரது நடுமண்டையில் நீண்ட இரும்புக்கம்பி இறங்கியது. கம்பி குத்தியபின், மூளையில் ஒரு பகுதியில் (Prefrontal cortex) கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதன்விளைவாக அவரது மனிதப்பண்பு மாறி, விலங்குகளின் பண்பு வந்தது.
விலங்குகள் பண்பு தனக்கென்று வாழும் தன்மை கொண்டது.
விலங்கிலிருந்து மாறுபட்டு சமூகத்தைச் சார்ந்திருப்பது தான் மனித சமூகம். Human is a social animal
உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்துவது மனநலன் இல்லை. சமூகத்திற்காக வாழ்வதும் தான் மன நலன்.

சுருக்கமாக சொல்வதானால்,
மன நலன் என்பது பிடித்தவற்றை செய்யாமல், பிடிக்காதவற்றை செய்யவேண்டும்.
உனக்குப் பெருமை, கொண்டாட்டம் வேண்டுமானால், பிறருடன் போட்டி போட்டு தொண்டு செய் என்கிறார் தந்தை பெரியார்.
வளர்ச்சிகள் எங்கிருக்கிறதோ, அங்கே மன பிரச்சினைகள் வருகின்றன.
மிகவும் வளர்ச்சி அடைந்த ஸ்காண்டிநேவியன் நாடுகளில்தான் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளில், தனக்கு, தனக்கு என தன்னலப்போக்கு அதிகரிக்கிறது.
மன பிரச்சினைகளால், infertiluty, இளம் வயது மரணங்கள் ஏற்படுகின்றன.
Morality குறைந்துவிட்டது.

மனரீதியான பிரச்சினைகளால், உடல்ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மன நோய் அல்ல, மனநல சீர்கேடு. தனிமைப்படுத்திக் கொள்ளாமல், சமூகத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
Active Social Life என்பதற்கான உதாரணங்களாக தந்தை பெரியார், ஆசிரியர், கவிஞர் உள்ளனர்.
அறிவு நாணயம்தான் மன நலன்.
யாரும் யாருடனும் ஒப்பிடக் கூடாது.
குழந்தைகள் வளர்ப்பில் அனுபவமின்மையால், தன்னலத்துடன் வளர்க்கப்படுகிறார்கள்.
இன்றைய சிறார்களிடம் நண்பர்கள் எத்தனை பேர் என்றால் 3000 என்கிறார்கள். எங்கே என்றால், சமூக வலைத்தளங்களில். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பழகுவதில்லை.
மற்றவர்களுடன் இணைந்து வாழும் நடைமுறைகள் (Moral Principles) சொல்லிக்கொடுக்கப்படாமல், தன்னலத்துடன் (self-centred) வளர்க்கப்படுகிறார்கள்.

இயல்பாக, சுதந்திரமாக (independent), சக மனிதர்களை மதிப்பது, பொறாமை இன்றி இருக்க வேண்டும்.
மற்றவர்களின் குணாம்சத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் வாழ வேண்டும்.
மற்றவர்களிடம் சொல்லத் தயங்குவதை செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழப்பழக வேண்டும். (Healthy Lifestyle)
பல்வேறு பிரச்சினைகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட தோல்வி இல்லை, பலவீனம் இல்லை. தனி நபர்களாக எவரும் தனித்தே வாழ்ந்து விட முடியாது, (Dependent Individuals) சார்ந்து வாழுவதை குற்றஉணர்ச்சியாகக் கருதக்கூடாது. அனைவருமே ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும்.(Interdependent)
சக மனிதரிடம் உதவி கேட்கத் தயங்கக் கூடாது. மனக்கஷ்டம், கவலைகளை வெளிப்படுத்த வேண்டும்.
வெளிப்படையாக சொல்வதைக் கேட்க வேண்டும். Non-Judgementalஆக பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்.
சமூகத்தில் இரண்டு விதமாக மக்கள்தொகை பார்க்கப்படுகிறது. (Population- Child, Adolescent)
சமுதாயம், சமுதாய அவலம் என்பதில் தனி நபர் நலன்தான் சமுதாயத்தின் நலன்-
நீண்ட ஆயுள் என்பதைவிட, மன நலத்துடன், நிறைவான வாழ்வு வாழவேண்டும். அறிவு சார் சமூகம் எதிர்மறை பார்வையிலிருந்து ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைப்பதை ஒரு பிரச்சாரமாக பெரியார் திடலிலிருந்து தொடங்க வேண்டும். இன்றைய வாழ்க்கை முறை அழுத்தங்கள் அதிலிருந்து வெளியே வரவேண்டும்.

இவ்வாறு மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மன நலன் சார்ந்த பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை அறிவுரைகளை அறவுரைகளாக அளித்து தனதுரையை நிறைவு செய்தார்.
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு
பதில்களை அளித்தார்

மனம், அறிவு வேறா? எனும் கேள்விக்கு மனமே இல்லாத அறிவு கடிவாளம் இல்லாத ஒன்று என்று பதில் அளித்தார்.
சிறப்புக் கூட்டத்தின் நிறைவாக பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
பங்கேற்றோர்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், புலவர் பா.வீரமணி, மோகனா வீரமணி, சி.வெற்றிசெல்வி, சுதா அன்புராஜ், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பசும்பொன் செந்தில்குமாரி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் பெரியார் மெடிக்கல் மிஷன் பொறுப்பாளர்கள், கழகப்பொறுப்பாளர்கள். பெரியார்திடல் பணியாளர்கள் உள்பட பலர் சிறப்புக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *