ஜோசியம் நிஜம் என்றால் மனிதர்கள்மீது குற்றம் சொல்லலாமா?

ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும். இஷ்ட சித்திக்கு ஏதாவது விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோ தத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் கேட்கப்பட்ட நேரம், கேட் பவரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசி யனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரன், பந்து முத லானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவை களைக் கேட்டல் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலாகியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே மேல்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேர மாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக் குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண் டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டு பிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லா விட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்?

நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம். சாதாரணமாய் ஒரு ஜாதகம் என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சம யத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2ந் தேதி புதன்கிழமை காலை சுமார் 10 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லி விடக் கூடும் என்பதே அநேகமான ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழி கைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக் கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக்கண்ணாடி பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும், இதுவுமொரு புறமிருக்க,

இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத் திற்காக மேற்படி 4158 பேருக்கும் வாழ்க் கையில் ஒரே விதமான பலன் அனுபவ மிருக்க முடியுமா? அந்தப்படி இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.
உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரி யான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப் பட்ட ஜாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்டவனுடைய ஜாதகத் திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தா லொழிய ஒருக் காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது உறுதியான தாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்ட தாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒரு காலமும் முடியவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண் டால் ஜோதிடம் பொய்யாய் விடும், அன்றி யும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத் திலும் இந்தச் சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாயிருப்பதின் மூலம் இரு வருக்கும் அந்த காலத்தில் அந்த சம்பவங் களால் கொலையோ சிறை வாசமோ கண்டிப்பாய் ஏற்படாது என்று தான் அந்த ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படியிருக்குமானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதை யாயிருந்தாலும் தெரியாமல் கவலை யற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறை வாசமும் கிடைக்க முடி யவே முடியாது என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் ஜாதகத்தில் ஏற்க னவே இருக்கின்றபடி நடந்துதானே தீரும்.

இதற்குச் சாந்தி தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை மாற்றி விட முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்க லாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தியாகும் என்று ஜோசியன் சொல் வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிர கங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது அவைகள் மாறுமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திரமில்லாமல் இம் மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பட்சம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய் என்றே தீர்மானமாகி விடும்.

நிற்க, முடிவாக எந்த காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?

ஜாதகப்பலன்படி நடவ டிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியப் பொறுப் பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்குத் திருட்டுத் தொழில் பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல் திருட்டு கொடுத்த வனுக்குப் பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந்தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனி டமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில் இன்னான் இன்னாரிடம் திருடுவதால் இன்ன இன்னா ருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதகப் பலனும் இருந்தாக வேண்டும். ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப் பயன் எங்கே? இவை களுக்கு வேலை ஏது? என்பதைப்பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.

இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்பு வதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடி யோடு விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.

– குடிஅரசு – தலையங்கம் – 06.07.1930

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *