‘விஸ்வகர்மா’ திட்டத்தை வாழ்த்தும் ‘தினமலர்!’

Viduthalai
3 Min Read

அரசியல்

“நம் நாடானது, அதன் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், மாறுபட்ட, சிறப்பு மிக்க கலை, கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இருப்பினும், கைவினை கலைஞர்களின் இந்த பாரம்பரிய திறமைகள், முறையான அங்கீகாரமின்மை, குறைந்த அளவிலான வருமானம், நவீன முறையில் தயாராகும் பொருட்களால் உருவாகியுள்ள போட்டி, போதிய சந்தை வாய்ப்புகள் இல்லாமை, போதிய பயிற்சி இல்லாதது மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் என, பலவிதமான சவால்களை சந்திக்கின்றன. 

இதனால், பல கைவினைக் கலைஞர்கள், தங்களின் மூதாதையர்கள் செய்து வந்த தொழில்களை விட்டு விட்டு, வாழ்வாதாரம் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வது தொடர்கிறது. இது, அவர்களின் சமூக, பொருளாதார தகுதியைப் பாதிப்பது மட்டுமின்றி, மதிப்புமிக்க கலாச்சார சொத்துக்களை இழக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தான், நாட்டின், 76ஆவது சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி யேற்றி பேசிய பிரதமர் , ‘நெசவாளர்கள், பொற்கொல்லர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் பயன் பெறும் வகையில், ‘விஸ்வகர்மா யோஜனா’ துவக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான, இத்திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை மனதில் வைத்து, இத்திட்டம் அறிவிக்கப் பட்டதாக கூறப்பட்டாலும், பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஒன்றிய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதே. விஸ்வகர்மா ஜெயந்தி தினமான, செப்டம்பர், 17இல், இத்திட்டம் துவக்கப்பட உள்ளது. விஸ்வகர்மா யோஜனா வாயிலாக, கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக, 5 சதவீத வட்டியுடன், முதற்கட்டமாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக, 2 லட்சம் ரூபாயும் கடனுதவியாக வழங்கப்பட உள்ளது. அத்துடன், கைவினைக் கலைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது, அவர்களின் திறனை மேம்படுத்த உதவுவது போன்றவையும் செயல்படுத்தப்பட உள்ளன.”

இது ‘தினமலர்’ ஏட்டின் (21.8.2023) தலையங்கமாகும். தலையங்கத்தின் தலைப்பு “விஸ்வகர்மா திட்டம் வெற்றிக்கு வாழ்த்துவோம்!” என்பதாகும்.

அதுவும் எந்த நாளில் இந்தத் திட்டம் தொடங்கப் படுகிறதாம்? தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17இல் தொடங்கப்படுகிறதாம்.

திடீரென்று சில ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 17 என்பது நரேந்திர மோடியின் பிறந்த நாள் என்று ஒரு கரடியைக் கட்டவிழ்த்து விட்டனர்.

எதிலும் தில்லுமுல்லு என்பது இவர்கள் இரத்த அணுக்களில் பிறந்தவையாகும்.

விசுவகர்மா என்பதன் பின்னணியில் புராண ஆபாசம் குடி கொண்டு இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

பாரம்பரிய தொழில் என்பதும், குரு   – சிஷ்ய பாரம் பரியம் என்பதெல்லாம்  இதில் அடங்குமா? ‘தினமலர்’ இதை வலியுறுத்துமா?

 அசல் பார்ப்பனீய கலாச்சாரப் படை எடுப்பு என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அது என்ன  – குறிப்பிட்ட ஜாதியினர் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு மட்டும்?

பார்ப்பான் தொழில் பிச்சை எடுப்பதுதான். இதனை மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே திருவாய் மலர்ந்துள்ளார்.

“பழைய நாளில் பிராம்மணன் தான் பிச்சை எடுப்பான். மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ‘பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு’ என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது. பிராம்மண சந்நியாசிகள், பிராம்மணர்களிடம் உஞ்ச விருத்தி செய்வார்கள். மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை! ஏதாவது வேலை செய்து விட்டு அதைக் கூலியாகப் பெற்றுக் கொள்கிறேன் என்பார்கள்.

இப்பொழுது இவன் (பிராம்மணன்) செய்கிற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்” (காஞ்சி காமக்கோடி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள்” முதற்பகுதி கலைமகள் 1957-1958 பக்கம் 28). 

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இது அடங்குமா? ‘தினமலர்’ இதை வலியுறுத்துமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *