கரூர், ஜூன் 28- கரூர், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு)முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி அதிமு.க. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12ஆம் தேதி முன்பிணை கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்தவழக்கை விசாரணை செய்த நீதிபதி, அவரின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே நிலமோசடி வழக்கு சி.பி.சி.அய்.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.