ஜாதி சங்க மாநாடுகளுக்குச் சென்று ஜாதியைக் கண்டித்துப் பேசியவர் தந்தை பெரியார் சட்டப்பேரவையில் ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் டாக்டர் நா. எழிலன் புகழாரம்

Viduthalai
10 Min Read

சென்னை, ஜூன் 28- ஜாதிப் பெயரை அகற்றியவர் தந்தை பெரியார். ஜாதி சங்க மாநாட்டுக்குச் சென்று ஜாதியைக் கண்டித்துப் பேசினார் தந்தை பெரியார் என்று சட்டமன்றத்தில் 25.6.2024 அன்று ஆதி திராவிடர், பிற்படுத் தப்பட்டோர், சீர் மரபினர்,கதர் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் ஆயிரம் விளக்குத் தொகுதி உறுப்பினர் டாக்டர் நா. எழிலன் பேசியதாவது:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமான துறைகள் இரண்டு, ஒரு துறை உடல்ரீதியான குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு காணும் துறை அது மாற்றுத்திறனாளிகள் துறை; இன்னொரு துறை சமூகக் கோட்பாடால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வழங்கும் துறை அது ஆதி திராவிடர் நலத் துறை. அந்த ஆதி திராவிடர் நலத் துறையில் என் விவாதத்தைத் தொடங்குகிறேன்.

நான் பிறந்த மதத்தில் சாக மாட்டேன் என்றுஅண்ணல் அம்பேத்கர் அக்டோபர் 14 ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு தீக்க்ஷா பூமியில் 4 இலட்சம் பட்டியல் இன மக்களோடு புத்த நெறியைத் தழுவினார். அவ்வாறு அவர் தழுவும்போது, மதமாற்றம் அடைந்தால் ஜாதிச் சான்றிதழ், தாழ்த்தப்பட்டவர் என்ற சான்றிதழ் போய்விடும் என்று தெரிந்தே 4 இலட்சம் பட்டியல் இனத்தவர் அண்ணல் அம்பேத்கருடன் சேர்ந்து 22 உறுதி மொழிகளை எடுத்தார்கள். 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முறையாக முத்தமிழறிஞர் கலைஞர்தான் தாழ்த்தப்பட்டவர் மதம் மாறினாலும், பவுத்த மதத்தைத் தழுவினாலும், அவர்களுக்கு எஸ்.சி. சான்றிதழ் வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

ஜாதி என்பது ஒரு மனநோய்
அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வி.பி. சிங் அவர்கள், நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோருக்கு சான்றிதழ்களை மக்களுக்கு உரிமையாக வழங்கினார். இன்று (25.6.2024) வி.பி. சிங் அவர்களுக்குப் பிறந்தநாள். சமூகநீதிக் காவலருக்கு சிலை வைத்த நம் தமிழ்நாட்டின் முதல மைச்சர் அவர்களை வணங்கி, என் உரையைத் தொடங்கு கிறேன். ஜாதி என்பது ஒரு மனநோய். “Caste is a disease of the mind” என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார். ஜாதி என்பது நில உைடமைகளிலும், பல்கலைக் கழக வளாகங்களிலும், கல்லூரி வளாகத்திலும் ஏன் அதிகார மய்யத்திலும் நிலவி வருகிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் புனிதம் என்றும், இன்னொரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தீட்டு என்றும், வகைப்படுத்திப் பிரித்தால் அதன் நிலவரம் கொடூரமான நிலவரம். மேலிருக்கும் ஜாதி படிக்கட்டுகளில் இருப்ப வர்களை மரியாதையாக பார்ப்பதும், கீழ் உள்ளவர்களை அவமரியாதையாகவும் பார்க்கும் ஒரு நிலை இழிவு நிலை. இந்த இழிவு நிலைக்கு எதிராக களம் அமைத்த இயக்கங்கள்தான் இந்த நாட்டின் முற்போக்கு இயக்கங்கள். புத்தரில் தொடங்கி, கபீரில் தொடங்கி, மராத்திய மண்ணில் ஜோதிபா பூலேவும், அண்ணல் அம்பேத்கரும், கருநாடகாவில் பசவண்ணா, கேரளாவில் நாராயண குரு போன்றவர்கள் களம் அமைத்தார்கள்.

நம் தமிழ்நாட்டில் சித்தர் வழி வழிபாடு, அய்யா வழி வழிபாடு, இராமலிங்க அடிகளார், அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் சமூக தளத்தில் பண்பாட்டு புரட்சி நடத்தினார்கள்.
ஆனால், அரசியலில் சமூக தளத்தில் இந்தச் சமூகத்தை சமத்துவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது திராவிட இயக்கம், நீதிக் கட்சி. ஆதி திராவிடர் என்ற சொற்றொடரை முதன்முதலில் அரசாங்க Gazette-இல் ஏற்றியது நீதிக் கட்சி. பொது பேருந்துகளிலும், பொது கிணற்றிலும் தீண்டாமையை கடைப்பிடிப்பதைசட்டங்கள் கொண்டு வந்து அதை நிறுத்திய வர்கள் நீதிக் கட்சியாளர்கள்.
தந்தை பெரியார். ஜாதி பெயரை அகற்றியவர். சுயமரியாதை என்ற வார்த்தையை வாழ்வியலாக இந்த மக்களுக்குக் கொடுத்தவர். ஜாதி சங்கங்களுக்கு சென்ற தந்தை பெரியார் அங்கே ஜாதி பெருமையைப் பற்றி பேசவில்லை. ஜாதி இழிவுகளை பேசி ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டவர் தந்தை பெரியார்.

பேரறிஞர் அண்ணா. நம் தி.மு.க.வின் தலைமைச்செய லகமான அறிவகம் தொடக்க விழாவை பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்த திமுக உடன்பிறப்பு, கன்னியாகுமரி வி.என். ஜான் அவர்களை வைத்து திறந்தார். அதுதான் இந்த நாட்டுக்கு அவர் சொல்லும் செய்தி. அந்த செய்திதான் இன்று தங்கை அனிதாவிற்காக மனுதர்ம எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் எங்கள் இளைஞர் அணி செயலாளரின் போராட்டமும் அந்தப் பார்வையில்தான் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசாணைகள். நிலவுடைமைச் சமூகத்தில் சத்தமின்றி, இரத்தமின்றி ஜமின்தாரி முறையை ஒழித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அது நிலச் சீர்த்திருத்த சட்டமாக இருந்தாலும், ஒரு விவாதம் நடக்கிறது, இதே சட்டமன்றத்தில், 2006 ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கட்சி வரதராஜன் ஒரு கேள்வி எழுப்புகின்றார், அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர்; ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு வங்காளத்தைவிட நிலச் சீர்த்தி ருத்ததை நாங்கள் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம். 2 இலட்சம்ஏக்கர் நிலத்தில் 1 இலட்சத்து 34 ஆயிரம் ஏழை விவசாயிகளுக்கு நிலத்தை கொடுத்திருக்கிறோம். அதில் 64 ஆயிரம் பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்று இங்கேபதிவு செய்கின்றார்.

இந்தியா முழுமைக்கும் பட்டியல் இன சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு 15 சதவிகிதம். ஆனால், முத்தமிழறி ஞர் அவர்களின் இடஒதுக்கீடு கொள்கையால் தமிழ்நாட்டில் 18 சதவிகிதம். ஒரு சதவிகிதம் பழங்குடி யினருக்கு. இடஒதுக்கீடு கொள்கையை கல்லூரி வளாகத்தில், பல்கலைக்கழகத்தில் நடை முறைப் படுத்தினார்.
பெரியார் சமத்துவபுரம். ஊரெங்கும், ஊரும், காலனியும், ஊரும், சேரியும் பிரிந்தி ருந்த சூழலை அகற்றி, பெரியார் சமத்துவபுரத்தில் டோக்கன் இட்டு, ஒன்றாம் நம்பர் என்றால் பட்டியல் இன மக்கள், இரண்டாம் நம்பர் என்றால் மிகவும் பிற்படுத்தப்ப ட்டோர், மூன்றாம் நம்பர் என்றால் பிற்படுத்தப்பட்டோர் என்று வரிசைப்படுத்தி, பெரியார் சமத்துவபுரத்தில் இன்றுவரை ஏதாவது ஒரு ஜாதி-பூசல் சண்டை நடந்துள்ளதா? என்ற குறிப்பை நான் இங்கே வைக்கின்றேன். ஏனென்றால், அங்கே சுமுகமான வாழ்க்கை நெறியை உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்தச் சித்தாந்த ங்களின் ஒருங்கிணைப்பாகதான் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வலம் வருகின்றார்.

அம்பேத்கார் பிறந்தநாள் சமத்துவ நாள்!
நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதிகார மய்யங்களில் ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகின்றார். இன்று நமது சட்டமன்றம் அதிகார மய்யத்தின் உச்சம். இந்தச் சட்டமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என்று கூறி, அனைவரையும் ஜாதி ஒழிப்புநடவடிக்கையில் உறுதிமொழி ஏற்க வைத்தவர் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்.
அதுமட்டுமா, துணைச் சட்டம். அதாவது ஒவ்வொரு துறையிலும் துணைச் சட்டம் என்பது பல்வேறு துறைக ளுக்குப் போகும். சில துறைகள் gap funding-காக ஆதி திராவிடர் நலத் துறையின் fund-அய் எடுத்துக்கொண்டு பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி, துணைச் சட்டத்திற்குப் பாதுகாப்பு அளித்து, ஆதி திராவிடர் நலன் என்பது அந்தத் துறைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற சட்டத்தை நிறை வேற்றியவர் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

திறன்மிக்க நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள், பல்வேறு திட்டங்களை வரிசைப்படுத்தினார். ஓர் ஆய்வு என்ன சொல்கிறது என்றால், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள எண்ணிக்கையைப் பார்த்தால், 50 இலிருந்து 60 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட இன மக்கள் படிக்கின்றனர், 30 சதவிகிதம் மிகவும் பிற்படுத்தப்ப ட்ட மக்கள் படிக்கின்றனர், 10 சதவிகிதம் பிற்படுத்தப்ப ட்டோர், 1 சதவிகிதம்தான் மேல் ஜாதியினர் படிக்கின்றனர். அப்படியென்றால், நம் பள்ளிக் கல்வியில் நடக்கும் அனைத்து சீர்த்திருத்தங்க ளும், இல்லம் தேடி கல்வி, தகைசால் பள்ளிகள், Smart classrooms, தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்ற அனைத்து திட்டங்களும் தாழ்த்தப்பட்ட இன மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டமாக அமைவதால்தான் இன்று ஆதி திராவிடர் பள்ளியில் பத்தாம் வகுப்புகளில் pass percentage 81 விழுக்காடாக ஆக உள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களின் pass percentage 85%. அப்போது நாம் செய்த எல்லா முயற்சிகளும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது கல்வி நிலையங்கள். உங்களுக்குத் தெரியும் எவ்வளவு நாளைக்குத்தான் நாம் தொழிலாளியாக இருப்பது என்று, விவசாய கூலியாக இருந்து என்று பார்த்து, ஆதி திராவிடர் மக்களையும் தொழில் முனைவராக்கி அழகு பார்த்தவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம். கிட்டத்தட்ட 1,300 பேருக்கு 130 கோடி ரூபாய் மானியம் கொடுத்து தொழில் கொடுப்பவராக மாறியுள்ளார்கள். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் அதாவது ஒரு தொழில் முனைவோர் திட்டத்தை தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காக உருவாக்கி கூலி வேலைகள், அன்றாட வேலைகளை மாற்றியமைத்து, சென்ற ஆண்டு மட்டுமே 71, இந்த வருடம் 14 இணைத்து பார்த்தால் கிட்டத்தட்ட 100 startup நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு உருவாக்கியுள்ளனர். இந்தச் சூழல்தான் சமத்துவத்தை நோக்கிய பயணம். அப்போது சமத்துவத்தைநோக்கிய பயணத்தில் நான்கே நான்கு கோரிக்கைகளை நான்உங்கள் முன் வைக்கிறேன்.

முனைப்புடன் செயல்படும் அதிகாரிகள்
ஒவ்வொரு District Adi Dravidar Welfare Officer என்பது punishment posting ஆகவும், அதாவது இறுதியில் retirement ஆகின்ற ஆட்களை அங்கு பணியமர்த்தி வைத்து இருக்கிறார்கள். இந்த மாதிரி அரசின் நூதன திட்டங்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டுமானால் முனைப்புடன் செயல்படும் அதிகாரி களை நாம் நியமிக்க வேண்டும். அப்போதுதான் திராவிட மாடல் ஆட்சி யின் கனவு களத்தில் நினைவாகும். அப்போது புதியதாக நியமிக்கப்பட்ட Group I, Group II தேர்வில் உள்ள அதிகாரிகளை Adi Dravidar Welfare Officer ஆக சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஆண்டு செயல்படுத்தவேண்டும். அப்போது தான் நம் திட்டங்களை களத்தில் கொண்டுபோய் சேர்க்கமுடியும், அது கோரிக்கை 1. கோரிக்கை 2, அதாவது விடுதிகளில் உணவு என்பது ரொம்ப ரொம்ப அவசியம் என்று நாம் பார்க்கிறோம்.

காலை உணவுத்திட்டம் அளிக்க
மகளிர் சுய உதவிக் குழுக்கள்
காலை உணவுத் திட்டத்தின் Scheme அமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்களே வந்து தர மேலாண்மை (quality management) செய்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று உணவை சாப்பிட்டு பார்க்கிறார்கள். ஏனென்றால் மகளிர் சுயஉதவிக் குழுக்களை உணவு கொடுக்கும் முயற்சியாக சேர்த்து, அங்கே ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம். ஒரு successful protein energy, malnutrition-அய் ஒழிக்கும் ஒரு eco system. நீங்கள் விடுதிகளில் தாழ்த்தப்பட்ட மாண வர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தான் கல்லூரிக்கு வந்து சேருகிறார்கள். அப்போது அந்த உணவு விடுதிகளில் மாணவர்களுக்கு தரமான உணவை அளிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களை இணைத்து செயல்பட வழி செய்ய வேண்டுமென்று கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்.

நம் தமிழ்நாடு ஒரு பரிணாம வளர்ச்சியில் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறோம். இப்போது ஒவ்வொரு ஆதி திராவிடர் நலத் துறையில் இருக்கும் எல்லா நிதிகளும் வெவ்வேறு துறைகளுக்கு சென்று சேருகிறது. ஆதி திராவிடர் நலத் துறையே அனைத்து நிதி பகிர்வையும் கண்காணித்து, inter-sectoral coordination ஆக ஒரு committee-அய் அமைக்க வேண்டும்.
நம் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த ஊர் தலைவர்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகிறார்கள். அந்த அதிகார வர்க்கத்தோடு அவர்களால் போட்டி போட முடிய வில்லை. அவர்களின் குறையை தீர்ப்பதற்காக ஆதி திராவிடர் நலத் துறையில் ஒரு நல்ல அருமையான Grievance Cell-அய் (குறை தீர் குழு) உருவாக்கவேண்டும் என்று சொல்கிறேன்.

இந்த அடிப்படையில்தான் நம் தமிழ்நாட்டினு டைய திராவிட மாடல் ஆட்சி, அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுபோய் சேர்ப்பதற்காக ஒரேயொரு குறிப்போடு என் பேச்சை நிறைவு செய்கிறேன். Australia-வில் 2008 ஆம் ஆண்டு Kevin Rudd என்ற ஒரு பிரதமர், வெள்ளையின மக்கள் Australia-வில் Aboriginal மக்களுக்கு, வெள்ளை யின மக்கள் செய்த அனைத்து இனப்படுகொலையையும், துரோகங்க ளையும் அதை எதிர்த்து, அவர் என்ன செய்கிறார் என்றால், அவர்களுடைய நாடாளுமன்றத்தில் பொது மன்னிப்பு கேட்கிறார். இங்கே காலகாலமாக 2,500 ஆண்டுகளாக தீண்டத்தகாதவர்கள் என்று அவர்கள்மீது நாம் ஏற்படுத்திவிட்ட ஜாதிய வன்கொடுமைகளுக்கு எந்த மன்னிப்பு கேட்டாலும் ஈடாகாது. மக்களும் நம்மிடம் மன்னிப்பு கேட்கவில்லை. பொது மக்களும் மன்னிப்பு கேட்கவில்லை.

ஒரு சுமூகமான வாழ் நிலையை எதிர்பார்க்கிறார்கள். அந்த வாழ் நிலையை உறுதிப்படுத்த, பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு இன்று காலையில் நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் அருமையான விளக்கத்தை கொடுத்தார்கள். ஆனால் வன்கொடுமை, ஜாதியின் பெயரால் கொடுமைகள் உச்சத்தில் போய்கொண்டிருக்கிறது அப்போது என்னாகிறது என்றால் withdrawal effect. எப்படி ஒருவர் alcohol அருந்தப் பழகி விட்டாரோ, எப்படி ஒருவர் cigarette புகைத்து பழகிவிட்டாரோ, இந்த ஜாதிய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி, செலுத்தி பழகியவர்களுக்கு ஒரு சமூக நிலையில் ஏறும்போது, அங்கே இருக்கும் குடும்பத்தை பார்த்தோ, மாணவர்களை பார்த்தோ, இல்லை வளர்ந்தவர்களைப் பார்த்தோ அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லையே என்ற கோபம் காழ்ப்புணர்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்தான் வேங்கை வயல். அந்த காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்தான் பொதுவுடைமை அலுவலகம் தாக்குதல், அந்த காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்தான் நாங்குநேரி சம்பவங்கள். அந்த காழ்ப்புணர்ச்சியை தடுப்பதற்கு நாம் தன்னிச்சையாக உளவியல் ரீதியாக பல்வேறு நிபுணர்களை கலந்தாய்வு செய்து வன்கொடுமை எதிர்ப்பாக ஒரு holistic ஆன ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை வைத்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலன் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *