ராஜஸ்தானில் இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் செங்கல் வைத்து வீடு கட்டக்கூடாது, மண் வீடுதான் கட்டவேண்டும். பலகைக்கதவு வைக்கக்கூடாது – முள் மரத்தட்டி, தகரம் அல்லது கயிற்றுக்கட்டிலைத்தான் கதவாக வைக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்;
அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான இறுக்கமான ஜாதிவெறிமிகுந்த சமூகத்தில் இருந்து – தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சஞ்சனா ஜாதவ் ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதி மக்களவை உறுப்பினராக முதல் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 24 வயது நிரம்பிய சஞ்சனா ஜாதவ் குழந்தைத்திருமணத்தை எதிர்த்து போராடியவர். உயர்ஜாதியினர் இரண்டு முறை இவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயன்றனர்.
இவரது போராட்டக் குணத்தை கேள்விப்பட்ட ராகுல்காந்தி இவருக்காக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டிடம் பேசி இவருக்கு பரத்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார்.
இவரது தொகுதியில் தான் தேர்தல் பரப்புரையின் போது ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் வீட்டில் உள்ள சட்டி பானைகளில் கம்பு கேழ்வரகிற்குள் புதைத்து வைத்திருக்கும் தாலியைப் பிடுங்கி முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள்’’ என்றார் மோடி; ஆனால் மோடியின் இந்தத் தாலி செண்டிமெண்ட் பேச்சைப் பிடிக்காமல் இளம் வேட்பாளரான சஞ்சனா ஜாதவை தேர்ந்தெடுத்தனர் வாக்காளப் பெருமக்கள்.
பதவி ஏற்கவந்த இவர் தனது குடும்பத்தி னரை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவந்தார். இவரது தாயும், மூத்த சகோதரியும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைக்கூட பார்த்ததில்லை என்ற நிலையில் – அனைவரையும் தலைநகர் டில்லி அழைத்து வந்து சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து விட்டதாகக் கூறி ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். 18 வயது நிறைந்த ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை உண்டு, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொல்லுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.
ஆனாலும் பட்டியலின மக்கள் செங்கல்லால் வீடு கட்டக் கூடாது என்றும், மரக் கதவு போடக் கூடாது என்பதுமான நிலையில் – இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்று கூறுவது சரியானது தானா?
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் இந்தத் திசையில் ஒரு நூற்றாண்டுக் காலம் பாடுபட்டதன் – பிரச்சாரம் செய்ததின் அருமையை, வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தெரிந்து கொள்ளலாம்.
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் – தலித் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சனா ஜாதவை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெறவும் செய்தது பாராட்டுக்குரியதும் – புதிய விடியலுமாகும்.
அண்மைக் காலமாக இளந் தலைவர் ராகுலின் சிந்தனையும், செயல்பாடுகளும் தந்தை பெரியாரை ஒட்டி உறவாடுவது – வடபுலத்திலும் சமூக மாற்றங்கள் வருவதற்கான சிறப்பான அறிகுறிகளே!