துணை ஆட்சியர் உள்பட 95 பேருக்கு பணி நியமன ஆணைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன்26- டிஎன்பிஎஸ்சி குரூப் 1இல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்றாண்டுகளாக டிஎன் பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வு முகமைகள்மூலம் 32,774 பேர், அரசுத் துறை நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர் என மொத்தம் 65,483 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப்-1 பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடை யாளமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் 14 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.6.2024) வழங்கினார். முதலமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, புதிதாக பணி நியமனம் பெற்றவர்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.
அமைச்சர் தங்கம் தென் னரசு, மனித வள மேலாண்மை துறைசெயலர் க.நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நியமன ஆணை பெற்ற பயிற்சி அலுவலர்களுக்கு சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அடிப்படை பயிற்சி தொடங்க உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *