திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரான ராபர்ட் வில்லியம் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னை முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்றது (17.6.2024). அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.
ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: “நாட்டின் சுதந்திரத்துக்காக தனது 25ஆவது வயதில் தனது இன்னுயிரை இழந்த சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் ஆவார். இந்த இடத்தில் அவருக்கு என் மரியாதையையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு சமூகங்களில் இருந்து வந்தவர்களும் ஒருங்கிணைந்து போராடியுள்ளார்கள். துயரம் என்னவெனில் அவர்கள் இந்நாட்டிற்காக என்னென்ன தியாகங்கள் செய்துள்ளார்கள் என்பதில் பலவும் மறக்கப்பட்டுள்ளன’’ என்று வழக்கம் போலவே தங்களுக்கே உரித்தான கண்ணோட்டத்தில் ‘திருவாய்’ மலர்ந்தருளியுள்ளார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் வாஞ்சிநாதன் நாட்டின் சுதந்திரத்துக்காகத்தான் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றானா? அப்படியே பார்த்தாலும் ஒரு வெள்ளைக்கார அதிகாரியைப் படுகொலை செய்வதன் மூலம் நாட்டின் சுதந்திரத்தைப் பெற முடியும் என்பதுதான் ஆளுநர் ஆர்.என். ரவி போன்றவர்களின் கருத்தா?
“பிளேக்” நோய் எலிகளால் உண்டாகின்றது என்ற காரணத்தால் பிரிட்டிஷ் அரசு எலிகளை வேட்டையாடியபோது, ‘‘எலி கடவுளின் வாகனம். மிலேச்சர்களான வெள்ளைக்காரர்கள் நமது ஹிந்து மதத்தில் தலையிடுகிறார்கள்’’ என்று பாலகங்காதர திலகர் சொன்னதும், அதனால் வெறியுணர்ச்சி பெற்ற மத வெறியர்கள் இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றதும்கூட இந்தியாவின் சுதந்திரத்துக்காகத்தானா?
ஆளுநர் ஆர்.என். ரவி போற்றிப் பாடும் வாஞ்சிநாதய்யர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றது ஸநாதனத்துக்காகவா – நாட்டின் சுதந்திரத்துக்காகவா?
ஆஷைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் அய்யரின் சட்டைப் பைக்குள்ளிருந்த கடிதம் என்ன கூறுகிறது? இதோ அந்தக் கடிதத்தின் வாசகங்கள்.
‘’ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத் தில், கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கி றோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்
இந்தக் கடிதத்தில் இந்திய சுதந்திரப் போராட் டம் என்ற உணர்வு துடித்து நிற்கிறதா? ஆரிய பார்ப்பனர்களின் ஸநாதன தர்மம் என்ற வெறி – சூலத்தைத் தூக்கிக் கொண்டு தாண்டவமாடுகிறதா?
கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சன் ஜார்ஜ் பஞ்சமன் என்ற சொற்களைத் துருவித் துருவிப் பார்க்கட்டும் எவரும்.
மிலேச்சன் என்று ஆரியர் யாரைக் குறித்துச் சொல்லுவர்? பஞ்சமன் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?
பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கடை கோடியில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களைத்தானே?
அந்தச் சொற்களை ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடப் பயன்படுத்துவதைக் காண வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி வெறியனை – இந்து மதக் கொடியவனை – ஸனாதன வெறியனை சுதந்திரப் போராட்ட வீரன் என்று சொல்லுவதும், ஆஷ்துரை படுகொலை செய்யப்பட்ட இடமான ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரைச் சூட்டுவதும் எந்த ஒழுக்கத்தைச் சேர்ந்தது?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஸநாதனம் குறித்து அடிக்கடிப் புகழ்ந்து பேசுவதும், எந்த அடிப்படையில் என்பது இப்பொழுது தெரியவில்லையா?