தொலைக்காட்சியில் வாஸ்து சாஸ்திரம் கூறிக் கொண்டு இருக்கும் நபர் தான் – உலகப்புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள் கட்ட வாஸ்து சாஸ்திர ஆலோசனைகளைக் கூறினாராம்.
பீகார் மாநிலம் பாட்னா அருகே நாளந்தா மாவட்டத்தில் உள்ள நகரம் ராஜ்கிரி. இங்கு அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழக புதிய கட்டடங்களைக் கடந்த 19.6.2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்த நாளந்தா பல்கலைக்கழகம் பவுத்த நெறியின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. சுமார்1600 ஆண்டுகளுக்கு முன்பு 108 பாடங்களைக் கொண்ட உலகின் முதல் உண்டு உறைவிடப் பல்கலைக்கழகமாக இயங்கி வந்தது.
அதன்பின்னர் சுங்கன் என்ற பார்ப்பனன் மவுரியப் பேரரசனைக் கொலை செய்து மகதப்பேரரசை கைப்பற்றியப் பிறகு, அவனின் ஆணைப்படி இந்தப் பல்கலைக்கழகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அதனால் அங்கு இருந்த 30 கோடி ஓலைச்சுவடிகள் தீக்கு இரையாகின. அங்கிருந்த நூல்நிலையம் மூன்று மாதங்கள் வரை நிற்காமல் இரவு பகலாக எரிந்தது என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இருப்பினும் ஆங்கிலேயர்கள் காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, பின்னர் சுதந்திரம் அடைந்த பிறகு பல்கலைக்கழகம் இயங்கத் துவங்கியது. அப்போதிலிருந்து, பன்னாட்டு மாணவர்கள் கல்வி கற்கும் களமாக இது இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டடங்கள் கட்ட –மோடி அரசு வாஸ்து கலையில் நிபுணத்துவம் கொண்ட ஒருவரை – இந்தக் கட்டடக் கலையை வடிவமைக்க அழைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இப்போது ,ராமகிருஷ்ண ராஜு என்பவர் தான் – நாளந்தா பல்கலைக்கழக கட்டடங்களைக் கட்டுவதற்கான வாஸ்து பார்த்துக் கொடுத்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அய்தராபாத்தில் உள்ள பிரகதி நகரில்தான் ராமகிருஷ்ண ராஜு வசித்து வருகிறார். இவரைக் கடந்த 13.9.2019 அன்று நாளந்தா பல்கலைக்கழக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வாஸ்து நிபுணராக நியமித்துள்ளனர். திட்டக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இவருக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணைகளை அப்போதைய பதிவாளர் சஞ்சய் பட்நாகர் வழங்கினார். இவர் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் எனப் பஞ்ச பூதங்களின் அடிப்படையில் கட்டடங்களை எப்படி வடிவமைப்பது என்று நாள்தோறும் வழிகாட்டுதல்களை வழங்கி வந்துள்ளாராம்.
இந்திய பவுத்த கட்டடக் கலை பாணிகளின்படி எப்படிக் கட்டடங்களைக் கட்டுவது என்றும், அதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் இயற்கையான வடிவில் வகுப்பறைகளை எப்படி உருவாக்குவது என்றும் இவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளாராம்.
இது பற்றி தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தைச் சேர்ந்தவரான நாளந்தா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சுனைனா சிங் கூறுகையில், “பீகார் அரசு ஒதுக்கிய 450 ஏக்கர் நிலத்தில், 13 ஏக்கரில் ஏரிகள் இருந்தன. அவற்றைச் சிதைக்காமல் அப்படியே பாதுகாத்து கார்பன் நச்சுத்தன்மையைக் குறைக்கும்படியாக நாங்கள் வளாகம் கட்ட முடிவு செய்தோம்.
இந்தப் புதிய கட்டடமானது பழங்கால கட்டட மாதிரியைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது. நாளந்தா என்பது வரலாற்று ரீதியாக வாஸ்து சாஸ்திரத்தில் உலகப் புகழைக் கொண்ட அறிவுக் களஞ்சியம். ஆகவேதான், நாங்கள் அதில் நிபுணத்துவம் கொண்ட ராமகிருஷ்ண ராஜுவை அழைத்தோம்’’ எனக் கூறியுள்ளார்.
எந்த ஒரு உயர்கல்வியும் கற்காமல், ஏற்கெனவே வாஸ்து பார்த்துக்கொண்டு இருந்த நபர்களிடம் வாஸ்து சொல்வது எப்படி என்பதை ஏதோ கற்றுக்கொண்டு பிறகு தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் வாஸ்துவைப் பற்றி பேசிக் கொண்டு இருந்த ஒருவரை, உலகின் மிகவும் புகழ்பெற்ற பழைமை வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தினை உருவாக்க அழைத்துள்ள வெட்கக்கேட்டை என்ன சொல்ல!
மும்பையில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டில் யானைத் தலையை வெட்டி முண்டமான விநாயருக்கு அதைப் பொருத்தியவர் சிவன்! அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை இருந்திருக்கிறது என்று பேசியவர் பிரதமர் மோடி அல்லவா! இந்திய அரசமைப்பு வலியுறுத்தும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் இலட்சணம் இதுதானோ!