புதுடில்லி, ஜூன் 24- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்க வந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பினர். 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்க மேடை ஏறிய போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக குரல் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.
இளநிலை நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தேசிய தேர்வு முகமை இயக்குநர் பதவியில் இருந்து ஒன்றிய அரசு நீக்கிய நிலையில், கல்வி அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக 9 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.