நமது எட்டாம் எட்வர்டு மன்னர், அரியாசனமேறி 325 நாள்களுக்குப் பிறகு புகழ்பெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தனியரசைத் துறந்து விட்டார். அவரது சகோதரர் யார்க் கோமகனார் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிபதியாகி விட்டார். பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சரித்திரத்திலே நமது மன்னர் துறவு மிகவும் முக்கியமான ஒரு சம்பவமாகும்.
இவ்வாறு நேருமென்று நமது மன்னர் பிரஜைகள் எதிர்பார்க்கவே இல்லை. மன்னர்பிரான் குண விசேஷங்களை அவர்களது பிரஜைகள் அறிந்துள்ளனராயினும், அவரது தற்காலத் துறவு மூலம் அவர் மீது அவரது பிரஜைகளுக்கு இருந்து வந்த ராஜ பக்தி நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இவ்வளவு உத்தம குணம் படைத்த ஒரு மன்னனை & திவ்ய புருஷ தியாகியை எவ்வாறு இழப்பதென்று அவரது பிரஜைகள் இன்று இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.
மன்னர் பெருமானும் அவரது ஆசை நாயகியும் நினைத்திருந்தால் கிரியாம்சையில் ஒரு தம்பதிகளுக்குள்ள சுகங்களையெல்லாம் அனுபவித்துக்கொண்டு, தத்தம் நிலைமைக்கு ஆபத்து ஏற்படாமல் வாழ்க்கை நடத்தியிருக்கலாம். எத்தனையோ மன்னர்களும் அவர்களது ஆசை நாயகிகளும் அவ்வாறு இன்று வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். உலகம் அதைத் தடுக்கவுமில்லை.
ஆனால், அத்தகைய கீழ்த்தர வாழ்வு – மிருக வாழ்வு வாழ நமது வீரத் தம்பதிகள் விரும்பவில்லை. நிஜ வாழ்வு – கறையற்ற வாழ்வு – புனித வாழ்வு வாழவே அவ்விருவரும் விரும்பினர்.
பொய் வாழ்வு வாழ்ந்து சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாயிருப்பதைவிட சாமானிய மனிதனாய் மெய் வாழ்க்கை வாழ்வதே மேலென முடிவு கட்டிய நமது மன்னர் பிரானின் மனத்தூய்மைதான் என்னே! என்னே!
ஆம், இத்தகைய ஓர் உத்தம வேந்தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒரு மாது மெய்யாகவே ஓர் உத்தமியாகவே இருக்க வேண்டும். கேவலம் உடலழகில் மயங்கி ஒரு சாம்ராஜ்யத்தைத் துறக்கக்கூடிய அப்பாவியல்ல நமது மன்னர் பிரான்.
ஒரு சாம்ராஜ்யத்தையும் துறக்கும் மனத் துணிவு அவருக்கு ஏற்பட வேண்டுமானால் சாம்ராஜ்யத்தினும் மிக மிகப் பெரிய புனிதமான ஏதோ ஒன்று அவ்வம்மையாரிடம் அமைந்திருப்பதாய் சக்கரவர்த்தி உணர்ந்திருக்க வேண்டும். ஸ்ரீமதி சிம்சன் இருமுறை கலியாண விடுதலை பெற்றிருப்பதினால் உத்தம குணங்களுக்கு இழுக்கு ஏற்படாது.
கற்பைப் பற்றிய மேனாட்டு கருத்து வேறு; கீழ் நாட்டுக் கருத்து வேறு. மேனாட்டு வழக்குப்படி ஸ்ரீமதி சிம்சன் ஓர் உத்தமியே! விரும்பும் போது விவாக விடுதலை செய்து கொள்ள மேனாட்டுச் சட்டம் இடந்தருகிறது. எனவே, ஸ்ரீமதி சிம்சன் மீது ஒழுக்கக் குற்றம் சாட்டுவதற்கில்லை.
அம்மையார் இருமுறை விவாகம் செய்தவராயினும் அவரது ஆத்மாவுக்குத் திருப்தியளிக்கும் காதலை அவர் நமது மன்னர் பிரானிடமே கண்டிருக்க வேண்டும். தனது ஆத்மாவுக்குத் திருப்தியளிக்கக் கூடிய காதலி ஸ்ரீமதி சிம்சனே என நமது மன்னர் பெருமானும் உணர்ந்திருக்க வேண்டும். ஆகவே, அவ்விரண்டு வீர உள்ளங்களும் ஒன்றிவிட்டன. தெய்வீக குணம் படைத்த இரண்டு உள்ளங்கள் ஒன்றும் காட்சியே பேரானந்தக் காட்சி.
வாஸ்தவத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைத் துறந்த எட்வர்டு மன்னரும், அவரது காதலுக்கு இலக்கான ஸ்ரீமதி சிம்சனும் ஆணுக்கும், பெண்ணுக்கும் எல்லைக் கற்களாகி விட்டனர். நமது மன்னரது துறவினால் காதலும் பெண்மையும் நூறு மடங்கு மதிப்பேறி விட்டன. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினும் பெண் தெய்வமே அவருக்கு மேலெனப்பட்ட தெனில் பெண்மையின் பெருமையை அளக்கவும் முடியுமோ?
தமது தியாகத்தினால் மன்னர் பிரான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரத்தைத் துறந்துவிட்டது மெய்யே எனினும், அவரது தியாகம் உலக மக்களுக்கெல்லாம் அவரைச் சக்கரவர்த்தியாக்கி விட்டது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி நிலையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யக் குடிகளின் பக்திக்கே அவர் சட்டப்படி உரியராயிருந்தார். இப்பொழுது சாமானிய விண்ட்சர் நிலையில் உலக மக்கள் பக்திக்கே அவர் அவர் உரியவராகி விட்டார். இன்று உலக மக்களெல்லாம் அவரை வாயார வாழ்த்துகின்றனர்.
உலகத்திலுள்ள எல்லா தேசத்தாரும், எல்லா மதத்தாரும், எல்லா மொழியாரும் அவரை ஒருமனப்பட்டுப் போற்றுகிறார்கள். இந்நிலை பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி நிலையிலும் பன்மடங்கு பெரியதன்றோ!
இவ்வளவு சீரிய குணம் படைத்த ஒருவர் பிரிட்டிஷ் மன்னராவதற்குத் தடையாக நின்ற நாட்டு வழக்கு மிகவும் கொடிதே!
வெறுக்கத் தக்கதே !! எட்வர்ட் மன்னரும், ஸ்ரீமதி சிம்சனும் தம்பதிகளாகி, உலக மதிப்புப் பெற்று பல்லாண்டு பெருவாழ்வு வாழ்வாராக!
– ‘விடுதலை’ – 9.12.1936