மதுவிலக்கு வழக்குகளில் ஓராண்டில் 1.60 லட்சம் குற்றவாளிகள் கைது

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 22- சட்டமன்றத்தில் நேற்று (21.6.2024) தாக்கல் செய் யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 61 ஆயிரத்து 241 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 1 லட்சத்து 60 ஆயிரத்து 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூ.23 கோடியே 56லட்சம் மதிப்பிலான இந்திய தயாரிப்பு மது பானங்கள், சாராய ஊறல், கள்ளச்சாராயம், எரிசாராயம் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் போதைப் பயிர் பயிரி டுவது முற்றிலும் தடுக்கப் பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் தொடர்பாக கடந்த ஒரு ஆண்டில் 10 ஆயிரத்து 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 வெளிநாட்டினர் உள் பட 14 ஆயிரத்து 447 குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். – இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளன.

மத மோதலை தூண்டும் வலைதளப் பதிவு
பா.ஜ.க. பிரமுகர் கைது

தமிழ்நாடு

ஆலந்தூர், ஜூன் 22- மத மோதலை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். நங்கநல்லூர், கனிகா காலனி, முதல் தெருவை சேர்ந்தவர் கோகுல் நாயுடு (45). இவர், பாஜகவில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இசுலாமிய பெண், இந்து சாமியாருடன் அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய படத்தை பதிவிட்டு அதில், ‘‘முசுலிம் பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்ய வேண்டும். இதன் மூலம் முசுலிம் பெண்கள் முத்தலாக், ஹலாலாவில் இருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்” என பதிவிட்டு இருந்தார்.

இந்த சர்ச்சை பதிவை பார்த்த இசுலாமியர்கள் பலரும் மத மோதலை உருவாக்க நினைக்கும் இவரை கைது செய்ய வேண்டும் என பதிவு செய்து கண்டனத்தை தெரிவித்தனர்.

அதன்பேரில், இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் சென்னை தெற்கு காவல்துறை இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில், பழவந்தாங்கல் காவல்துறையினர், மத மோதலை தூண்டும் வகையில் எழுதுவது, மத உணர்வுகளை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாஜக மாவட்ட செயலாளர் கோகுல் நாயுடுவை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ளச்சாராய உயிர் இழப்பு
நான்கு பேர் கைது

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி, ஜூன் 22- கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயஉயிரிழப்பு தொடர்பாக சிபிசிஅய்டிஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக கள்ளச் சாராயம் விற்றதாக கருணாபுரம் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டியைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரது மனைவி விஜயா, சகோதரர் தமோதரன் மற்றும் விஜயாவின் சகோதரி ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர், கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிறீராம் முன்னிலையில் 4 பேரையும் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கள்ளச் சாராய மொத்த வியாபாரி சின்னதுரை, ஜோசப் (எ) ராஜா, மாதேஷ் மற்றும் கல்வராயன்மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சிய 20 பேரிடம் காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து வந்ததா? – கள்ளச் சாராயத்தில் மெத்தனால் வேதிப் பொருள் கலந்ததுஉறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த வியாபாரி சின்னதுரையிடம் இருந்து கள்ளச் சாராயத்தை கண்ணுக்குட்டி வாங்கியுள்ளார். அதில் மெத்தனால் கலந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம் விரியூரைச் சேர்ந்த ஜோசப்ராஜா மெத்தனாலை கண்ணுக்குட்டிக்கு கொடுத்ததாகவும், ஜோசப் ராஜாவுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் மெத்தனாலைக் கொடுத்ததாகவும் கூறப் படுகிறது.ஆந்திர மாநிலம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் செயல்படாத சில கெமிக்கல் நிறுவனங் களிடமிருந்து மெத்தனால் வாங்கியதாகவும் கூறப் படுகிறது. இதுதொடர்பாக சிபிசிஅய்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சென்று, அங்குள்ள குழந்தைகள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த,தமிழ்நாடு அரசால் ஒரு நபர்ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேற்று (21.6.2024) கள்ளக்குறிச்சி வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அவர், கருணாபுரம் பகுதிக்குச் சென்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *