குவைத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமு கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், தஞ்சையைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய், திருச்சியைச் சேர்ந்த ராஜூ எபினேசர், செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், சென்னையைச் சேர்ந்த சிவசங்கர் ஆகிய 7 பேர் உயிரிழந்துள்ளனர்
இதில் செஞ்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப் குவைத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார் அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் அவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார்.
பக்ரீத் விழாவை முடித்துவிட்டு குவைத் செல்லலாம் என்று கூறியபோது நீண்ட நாள் விடுப்பில் இருந்தால் ஒரு மாத ஊதியம் தரமாட்டார்கள், மேலும் வீட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதால் பொருள் ஈட்டவேண்டிய நிலை உள்ளது. ஆகவே, நான் செல்கிறேன்.
நீங்கள் பக்ரீத் விழாவை கொண்டாடுங்கள் என்று கூறி சில நாட்களிற்கு முன்புதான் குவைத் சென்றார்.
இந்த நிலையில் குவைத்தில் தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அவரது மனைவி அலைபேசியில் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
குவைத்தில் இருக்கும் கணவரின் நிலை குறித்து அறிய முடியாமல் ஷெரிஃபின் மனைவி அஃப்ருனிஷா பல சிரமங்களை எதிர்கொண்டார். அதன் பிறகு தமிழ்நாடு அரசு மூலமாக ஷெரிஃப் இறந்த செய்தி குடும்பத்துக்கு சொல்லப்பட்டது.
மரணமடைந்த முகமது ஷெரீபின் தந்தை யாகுப் செரீபிற்கு 65 வயது ஆகிவிட்டது, ஷெரீபின் தந்தை அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இறந்த முகமது ஷெரீபின் வருவாய் மட்டுமே வாழ்வாதராமாக இருந்தது.
குவைத் தீவிபத்து குறித்து அறிந்த உடன் தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து மரணமடைந்தவர்களை அடையாளம் கண்டு உடல்களை ஊருக்கு கொண்டுவரும் வரை முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையம் சென்று உடல்களைப் பெற்று அந்த அந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார். இறந்த முகமது ஷெரிபின் மனைவிக்கு அரசு வேலை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.