2024 மே 5ஆம் தேதி ‘நீட்’ தேர்வுகள் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோத்ரா காவல்துறைக்கு ஒரு அழைப்பு வருகிறது. கட்டுக்கட்டாக பணத்தோடு கார் ஒன்று நிற்பதாக – அந்த தகவலை அடுத்து கோத்ரா காவல்துறை அந்தபகுதிக்குச் சென்று விசாரிக்கிறது.
அந்தக் கார் ஜெய் ஜலாராம் என்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரின் கார் என்று தெரியவருகிறது, அந்த ஆசிரியர் நீட் தேர்வு நடக்கப்போகும் பள்ளியில் மேற்பார்வையாளராக உள்ளே சென்றுள்ளார். அவரது காரில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்ற விசாரணை தொடங்கியது
துஷார் பாஹட் என்ற அந்த ஆசிரியர் தேர்வுக்கு வரும் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து அதனை அவரசர அவசரமாக தனது காரின் பின் சீட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
பணம் கொடுத்த மாணவர்கள் யார்?
குறிப்பிட்ட தேர்வு மய்யத்தில் கருநாடகா, அரியானா, ஒடிசா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வந்து தேர்வெழுதி உள்ளார்கள். இவர்கள் அனைவருமே பெரும்பணக்காரர்களின் பிள்ளைகள். இவர்கள் அந்த அந்த மாநிலங்களில் தேர்வெழுதாமல், ஏன் சரியான போக்குவரத்து வசதிகளே இலலாத கோத்ரா நகரின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் குறிப்பிட்ட பள்ளியைத் தேர்வு செய்யவேண்டும்?
இந்தக் கேள்விக்கு விடை – தேசிய தேர்வு முகமைக்கு மிகவும் நெருக்கமான எஜுகேசன் கன்சல்டன்சி ஒன்றை நடத்தும் பரசுராம் ராய் என்பவர்தான் காரணம்.
இவர் கரோனா காலத்தில் இணையவழியில் கல்வி ஆலோசனை என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் கல்வி தொடர்பான ஆலோசனையை வழங்கி வந்தார்.
வடோதராவில் உள்ள இவரது உண்மையான தொழில் அரசு நடத்தும் தேர்வுகளில் மோசடி செய்வதுதான்,. அதன் மூலம் ரூ.35 கோடிக்கு மேல் ஓரே ஆண்டில் வருமானம் பார்த்துள்ளார்.
நீட் தேர்வு எழுதவேண்டுமா? படிக்கக்கூட வேண்டாம். குறிப்பிட்ட தேர்வு மய்யத்திற்கு தேர்வெழுத வாருங்கள் – அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி நபர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரை வாங்கி உள்ளார். முன்பணம் ரூ. 7 லட்சம் தேர்விற்கு முன்பு – தேர்வு முடிந்த பிறகு மீதிப் பணம். அதுவும் காசோலை அல்லது பேங்க் மூலம் வேண்டாம், ரொக்கமாக அதுவும் புதிய நோட்டாக இல்லாமல் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த நோட்டுக்கள் தான் வேண்டும்.
முதலில் பரசுராம் ராய் நாடுமுழுவதும் நீட் தேர்வு நடத்தும் பள்ளிகளில் உள்ள பள்ளி முதல்வர்களிடம் பேரம் பேசுவார். இவர் சொல்லும் தொகைக்கு எந்த பிரின்ஸ்பால்கள் ஒத்துவருகிறார்களோ அந்த பள்ளியை தேர்வு செய்துகொண்டு அந்தப்பள்ளி நீட் மோசடி செய்வதற்கான ஒத்திகையைத் தானே சில ஆட்களை செட் அப் செய்து பார்த்துவிடுவார்
குறிப்பாக குறிப்பிட்ட தேர்வு மய்யத்திற்கு வரும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களுக்கும் பிரின்ஸிபல் மூலம் ஒரு தொகைவழங்கி அவர்களை சம்மதம் பெற வைத்துவிடுவார்கள்.
பிறகு தேர்வு நடக்கும் அன்று அனைவருக்கும் வினாத்தாள் வழங்கப்படும். ஆனால், யாருமே விடை எழுதக்கூடாது – தேர்வு முடியும் வரை வெறுமனே அமர்ந்திருக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகு வினாத் தாள்களை வரிசைப்படுத்தி அவற்றை அனுப்புவதற்கு 2 மணி முதல் மூன்று மணிநேரம் ஆகும். அந்த இடைவெளியில் பிரின்ஸிபால் அழைத்து வந்தவர்கள் துல்லியமான அனைத்து விடைகளையும் சரியாக குறித்து பிறகு ‘சீல்’ வைத்து அனுப்பி விடுவார்கள்.
அப்படித்தான் கோத்ராவிலும் நடந்துள்ளது. மோசடியாக மாணவர்கள் பெயரில் விடை எழுதும் நபர்களை அப்பள்ளி ஆசிரியரான துஷார் பட் ஏற்பாடு செய்வார். அவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை விடை எழுதிய பிறகு கொடுத்துவிடுவார். இது பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளதும் அதிர்ச்சியான தகவலாகும். பல ஆண்டுகளாக நடக்கும் இந்த மோசடி இங்குமட்டுமல்ல, வட இந்தியாவின் பல பகுதிகளில் நடந்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
அடுத்து பீகார் மாநிலம் பட்னாவிற்கு வருவோம்.
அமித் ஆனந்த என்ற பொறியியலாளரை நீட் மோசடி தொடர்பாக கைதுசெய்து விசாரணை நடத்தியது பீகார் காவல்துறை. அப்போது அவர் கூறியதாவது: “நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் அனைத்து விடைத் தாளையும் நான் பெற்றுவிடுவேன். பிறகு ஏற்கெனவே நாங்கள் பணம் கொடுத்த மாணவர்களின் பெயரில் விடைத்தாளை தயாரித்து வைத்திருப்போம். அதை ‘சீலிட்டு’ அனுப்பி விடுவோம், மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை தீயிட்டு எரித்துவிடுவோம்” என்று கூறினார்.
மே 16ஆம் தேதி பாட்னாவின் குறிப்பிட்ட பகுதியில் ‘நீட்’ தேர்வு விடைத்தாள்கள் எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, இதனை அடுத்து காவல்துறை அங்கு சென்று பாதி எரிந்த நிலையில் உள்ள நீட் விடைத்தாளை கைப்பற்றி விசாரணை நடத்தியது. அதன் படி அமித் ஆனந்த என்ற பொறியியலாளர் கைதுசெய்யப்பட்டார்.
இரு மாணவருக்கு ரூ. 31 லட்சம் வரை பெற்று. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரிடமிருந்தும் பணம் மற்றும் காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளநிலை கலந்தாய்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
நீட் மோசடி குறித்து தேசியத் தேர்வுகள் முகமைக்கு, உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.