சென்னை, ஜூன் 21- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று (20.6.2024) வெளியிட்ட அறிவிப்பு:
அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வு, இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் 8.7.2024 முதல் 28.7.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 3.7.2004 முதல் 3.1.2008 வரை பிறந்துள்ள 20 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். மேலும் விருப்பமுள்ள, ஆர்வமுள்ளவர்கள் இது தொடர்பான விவரங்களை agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையலாம்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில் விபத்து எதிரொலி
பாதுகாப்பு பிரிவில் ஆய்வு செய்து
ஜூன் 28-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க ரயில்வே கோட்டங்களுக்கு உத்தரவு
சென்னை, ஜூன் 21- மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து நிகழ்வைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் சிக்னல் தொழில்நுட்பம், ரயில் ஓட்டுநர்கள் சந்திக்கும் அசாதாரண நிலை ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்து ஜூன் 28ஆம் தேதிக்குள் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 17ஆம் தேதி சிக்ன லுக்காக காத்திருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின் பகுதியில் அதேபாதையில் வந்த சரக்கு ரயில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மனிதப்பிழை காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹா தெரிவித்திருந்தார்.
இந்த விபத்தினைத் தொடர்ந்து, ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் சிக்னல், பாதை உள்பட ரயில்வே பாதுகாப்புப் பிரிவுகளில் ஆய்வு செய்ய ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் சிக்னல் தொழில்நுட்பம், ரயில் இயக்குவதில் ஓட்டுநர் சந்திக்கும் அசாதாரண நிலை ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்து, ஜூன் 28ஆம் தேதிக்குள் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியதாவது: ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது, கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது உள்பட பல்வேறு பாதுகாப்பு விசயங்களை மேற்கொள்ள கோட்டங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிக்னல் தொழில்நுட்ப பிரிவுகளில் முழுமையாக ஆய்வு நடத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் இயக்கத்தின்போது, அசாதாரண நிலைகள் இருந்தால் ரயில் ஓட்டுநர் பிரிவுக்கான ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும். ரயில் இயக்கும்போது, பாதை மற்றும் சிக்னல் ஆகியவற்றில் ஏதாவது பிரச்சினை இருந்தால் தெரிவிக்கலாம். இது தொடர்பாக பாதுகாப்பு அறிக்கை ஜூன் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.