புதுடில்லி, ஜூன் 21- நடப்பாண்டில், இந்தியாவைக் காட்டிலும் சீனாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான பெரும் பணக்காரர்கள் புலம்பெயர்வர் என, தனியார் நிறுவன ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ‘ஹென்லே அண்டு பார்ட்னர்ஸ்’ நிறுவனம், 2024ஆம் ஆண்டுக்கான தனியார் சொத்து புலம்பெயர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டில் சீனாவிலிருந்து 15,200 பேரும், பிரிட்டனிலிருந்து 9,500 பேரும், இந்தியாவிலிருந்து 4,300 பேரும் பெரும்பணக்காரர்கள் புலம்பெயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி புலம்பெயர்கின்ற பெரும்பணக்காரர்களை ஈர்க்கின்ற நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் அய்க்கிய அரபு எமிரேட்ஸ் 6,700 பேரையும், இரண்டாமிடத்தில் அமெரிக்கா 3,800 பேரையும், மூன்றாமிடத்தில் சிங்கப்பூர் 3,500 பேரையும் ஈர்த்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டில், சீனாவிலிருந்தே அதிக அளவிலான பெரும் பணக்காரர்கள் மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்வர். அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர்வோரை கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரிட்டன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவிலிருந்து புலம்பெயர்வோரின் எண்ணிக்கை, நடப்பாண்டில் குறையக்கூடும் என்ப தால், இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் தென் கொரியா உள்ளது. நடப்பாண்டு அந்நாட்டிலிருந்து 1,200 பெரும் பணக்காரர்கள் புலம்பெயரக் கூடும். உக்ரைன் போருக்கு பின், ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பெரும் பணக்காரர்கள் புலம்பெயர்ந்து வந்த நிலையில், நடப்பாண்டு அது சற்றே குறைந்து, கிட்டத்தட்ட 1,000 என்ற எண்ணிக்கையை ஒட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலான பெரும் பணக்கார புலம்பெயர்வோரை ஈர்க்கும் பட்டியலில், அய்க்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்தில் உள்ளது.
பூஜ்ஜிய சதவீத வருமான வரி, பகட்டான வாழ்க்கை முறை மற்றும் அழகான சுற்றுச்சூழல் ஆகியவற்றின் காரணமாக, பல பெரும் பணக்காரர்கள் அய்க்கிய அரபு எமிரேட்ஸை நாடிச் செல்கின்றனர்.
அந்நாட்டின் வலுவான சொத்து மேலாண்மை அமைப்பு, பல்வேறு பிராந்தியங்களில் இருந்து புலம்பெயரும் கோடீஸ்வரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சாதகமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் புகலிட திட்டங்களைக் கொண்ட நாடுகள், வரும் காலங்களில் தங்களது புலம்பெயர் பெரும் பணக்காரர்கள் மக்கள்தொகையில் தொடர்ந்து வளர்ச்சியைக் காண வாய்ப்புள்ளது.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.