குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு இரங்கல்!
சென்னை, ஜூன் 20 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் இன்று கூடியதும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவிற்கும், குவைத் நாட்டில் தீ விபத்தால் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்தால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைவுற்றவர்களுக்கு மரியாதை செலுத்தி அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான துறைவாரியான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கான தமிழ்நாடு சட்டப் பேரவையின் கூட்டம் இன்று (20.6.2024) காலை 10 மணியளவில் கூடியது.
மேனாள் உறுப்பினர்கள்
மறைவுக்கு மரியாதை
பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் எழுந்து இரங்கல் குறிப்பு வாசித்தார் அதில்:
சட்டமன்றப் பேரவை மேனாள் உறுப்பினர்களான எஸ். மாணிக்கராஜ், இ. ரவிக்குமார், டாக்டர் வி. தனராஜ், வ. சின்னசாமி, டாக்டர் எ. இராமகிருஷ்ணன், அ.கணேசமூர்த்தி, சு. சிவராமன், ச. வேணுகோபால், ஆ.கு.சீ. அன்பழகன், இராம. வீரப்பன், இரா. இந்திரகுமாரி, எச்.எம். ராஜூ, சி. வேலாயுதன், தா. மலரவன், தா. இராசாம்பாள், ெமா. பரமசிவம், சி. இராம நாதன் ஆகியோர் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவையில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீ விபத்தில்
மறைவுற்றவர்களுக்கு இரங்கல்
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.
கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் உயிரிழந்த வர்களின் 34 நபர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது. –
நா. புகழேந்தி மறைவுக்கு இரங்கல்!
விக்கிரவாண்டி சட்டமன்றப் பேரவை உறுப்பினர் நா. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் பேரவை தெரிவித்தது.
மேற்கண்ட மேனாள், இன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கும், குவைத் தீ விபத்தால் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியதால் உயிரிந்தவர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பெரு மக்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
அவை ஒத்தி வைப்பு
இதையடுத்து பேரவையின் இன்றைய கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு, மீண்டும் நாளை காலை கூடும் என பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.