சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் “இனியும் தேவையா நீட்?” எனும் தலைப்பில் 18.6.2024 மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
நிறைவாகக் கண்டன உரையை நிகழ்த்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னதுபோல – நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய பல்வேறு கட்சித் தலைவர்களும் முன்னணியினரும் ஒருவர் கூறியதை மற்றவர் திருப்பிக் கூறாமல், கூறியது கூறல் என்பதற்கு இடமில்லாமல், ‘நீட்’ கூடாது என்பதற்கான காரணங்களைத் தனித் தன்மையான முறையில் எடுத்துரைத்தனர்; தரவுகளோடு கருத்துகளைப் பதிவு செய்தனர்.
ஏதோ மேடைச் சொற்பொழிவு என்று இல்லாமல் பொருள் மிக்க கருத்தரங்கமாக மிளிர்ந்தது என்று சொல்ல வேண்டும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை 2010இல் ‘நீட்’ என்ற பிரச்சினை எழுந்தது முதற்கொண்டே, எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலித்தது. பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் சமூகநீதிக்கு விளையும் ஆபத்துகளை விளக்கிக் கூறி வந்திருக்கிறது.
2010ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரக்கோணத்தில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. (19.11.2016) திருச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அடங்கிய முத்தரப்பு மாநாட்டையும் நடத்தியது. (19.12.2016).
2017 மார்ச்சு 18 முதல் மார்ச்சு 21 முடிய நீட்டை எதிர்த்து திராவிட மாணவர் கழகத் தோழர்களின் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டது.
20.1.2020 முதல் 30.1.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் 2700 கி.மீ. பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
3.4.2022 முதல் 25.4.2022 முடிய நாகர்கோயில் முதல் சென்னை வரை நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மீண்டும் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் தொடர் பிரச்சாரப் பயணம் தொடர்ந்தது.
கடந்த 18.6.2024 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் வரும் ஜூன் 11 முதல் 15 வரை தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். திராவிட மாணவர் கழகம் மற்றும் இளைஞரணித் தோழர்கள் அந்தப் பயணத்தில் பங்கேற்பர்.
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 அன்று திராவிடர் கழகம் தோன்றிய அதே சேலம் மாநகரின் தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்து இரு சக்கர வாகனங்களில் ‘நீட்’ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளும் தோழர்கள் சங்கமிப்பார்கள்.
அந்த சங்கம நிகழ்ச்சியில் சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் கழகத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சமூகநீதிக் கொள்கையில் எப்பொழுதுமே தமிழ்நாடுதான் முன்னேராக போர்க்கொடி தூக்கிப் போர்க் குரல் எழுப்பி வந்திருக்கிறது.
காரணம் சமூகநீதியை முன்னெடுத்தே தந்தை பெரியார் காங்கிரசை விட்டே வெளியேறினார் என்பது வரலாற்றுக் கல்வெட்டு.
இட ஒதுக்கீட்டுக்காக முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் தந்தை பெரியாராயிற்றே – திராவிட இயக்கப் பூமியாயிற்றே!
பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் குரலாக இருந்தது; அதைக்கூட அளிக்க முன் வரவில்லை – பார்ப்பன ஆதிக்கக் கூடாரமாக இருந்த அன்றைய காங்கிரஸ்.
இன்றைக்கு அதே தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணைப் பாதுகாப்போடு தலை நிமிர்ந்து நிற்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு 50 விழுக்காடு என்ற வரையறை நீக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதை நினைத்துப் பார்த்தால், தந்தை பெரியார் உடலால் மறைந்தாலும் கொள்கையால் நாளும் வெற்றி பெற்று வருகிறார் என்பதை அறிய முடிகிறது.
நீட்டை எதிர்த்து தமிழ்நாட்டில் தூக்கப்பட்ட போர்க் கொடி, இப்பொழுது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் (பிஜேபி ஆளும் மாநிலங்கள் உள்பட) பட்டொளி வீசிப் பறக்கிறது. எங்கெங்கும் பெரியார் வாழ்க என்ற குரல் ஒலிக்கிறது. பதாகைகளில் தந்தை பெரியார் உருவம் இடம் பெற்றிருக்கிறது.
“நீட்” தேர்வில் இதற்கு மேல் மோசடிகள் – ஊழல்கள் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு குளறுபடிகள் நடந்து விட்டன.
இலட்சோப லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்றமும் ‘நீட்’ தேர்வில் ஏற்பட்டுள்ள மோசடிகளைக் கவலையோடு சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஒரு தவறும் நடக்கவில்லை என்று வழக்கம் போல பொய்ப் பேசும் பிஜேபி – அதன் அமைச்சர் ‘நீட்’ தேர்வில் தவறுகள் நடந்தது உண்மைதான் என்று இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார்.
நமது அழுத்தமான கருத்தெல்லாம், குறைபாடுகளுக்கும், மோசடிக்கும், ஊழலுக்கும் இடமின்றி நூற்றுக்கு நூறு சரியாக “நீட்” தேர்வு நடத்தப்படுவதாக இருந்தாலும் சரி – “நீட்” என்பது சமூகநீதிக்கு எதிரானது – அது ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் நமது அசைக்க முடியாத நங்கூரம் பாய்ச்சப்பட்ட நிலைப்பாடாகும்.
“நீட்”டால் பலன் அடைந்தவர்கள் யார்? பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்கிற புள்ளி விவரங்களே, “நீட்” என்பது சமூகநீதியைக் கொலை செய்யும் கண்ணி வெடி என்பது மிகத் துல்லியமாகவே புரியும்.