மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

1 Min Read

உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை ஜூன் 19 புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 ஆகியவற்றை ரத்து செய்து 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது.

இந்த 3 சட்டங்களின் திருத்தம் போதிய ஆலோசனைகள் இல்லாமல் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப்பட்டியல் 3-க்குள் அடங்கும். எனவே மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு தங்கள் கருத்துகளை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்படாததால், எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல் புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
பாரதிய நியாயா சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாக்ரிக்சுரக்‌ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்ஷ்யா ஆதினியம் (பிஎஸ்ஏ) என்று 3 சட்டங்களுக்கும் சம்ஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. இது இந்திய அரசியலமைப்பின் 348-ஆவது பிரிவை தெளிவாக மீறுகிறது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயமாகும்.

தெளிவற்ற விதிகள்
கூடுதலாக, இந்த சட்டங்களில் சில அடிப்படை பிழைகள் உள்ளன. உதாரணமாக, பாரதிய நியாயா சன்ஹிதாவில் 2 வெவ்வேறு வகை கொலை குற்றங்களுக்கு 2 உட்பிரிவுகள் உள்ளன. ஆனால் இவை இரண்டும் ஒரே தண்டனையைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தில், மேலும் சில விதிகள் உள்ளன. அவை தெளிவற்ற அல்லது சுயமுரண்பாடு கொண்டவையாகும்.
மேலும், இந்த புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை திருத்துவதற்கு போதுமான நேரம் தேவைப்படும். இதன் அடிப்படையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் கருத்துகளை கவனத்தில் கொண்டு புதிய சட்டங்களை மறுபரிசீலனை செய்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சட்டங்களை நிறுத்தி வைக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *