பீகார் அரசுத் தேர்வாணையத்தின் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விஷால் சவுராஷியா என்பவர் கைதாகிறார்.
இவர் ஏற்கெனவே மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில அரசுத்தேர்வு வினாத்தாளை தேர்விற்கு முன்பே கோடிக்கணக்கில் விற்பனை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, கைதாகி கடந்த ஆண்டு ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஒடிசா மாநில அரசுத்தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக இவரை ஒடிசா காவல்துறை கைது செய்து தற்போது புவனேஸ்வர் சிறையில் உள்ளார்.
அப்போது காவல்துறையினரிடம், “2024 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான விடைத்தாள் எந்த நாட்டிலும், எந்த பாதாள அறையிலும் பிரிண்ட் ஆனாலும் என் ஆட்கள் அதனை பெற்றுவிடுவார்கள். தேர்வு நடத்தும் அனைத்துத் துறைகளிலும் (N.T.A. உட்பட) எங்களது ஆட்கள் உள்ளனர்” என்று கூறி சவால் விட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒடிசா காவல்துறை பீகார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது,
பீகார் காவல்துறை 20.03.2024 அன்று தேசிய தேர்வு முகமைக்கு (N.T.A.) “இந்த ஆண்டு நடக்கப் போகும் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடக்க உள்ளன. ஆகவே உடனடியாக இந்த விவகாரத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கடிதம் எழுதியது.
மார்ச் மாதம் ஒரு நினைவூட்டல் கடிதம் என மார்ச், ஏப்ரல் மாதங்களில் 4 கடிதங்களை எழுதியது. மேலும் விஷால் சவுராஷியாவின் கூட்டாளியான விஜயேந்திர குப்தா என்பவர் இதுவரை கைதாகவில்லை.
முகத்தை மறைத்து, கொண்டு ‘டைம்ஸ் ஆப் சுவராஜ்’ என்ற ஊடகத்துக்குப் பேட்டி அளிக்கும் போது “எனது கூட்டாளி சவுராஷியா எந்த மூலையில் இருந்தாலும் நீட் தொடர்பான வினாத்தாளை வாங்கிவிடுவார். வேண்டுமென்றால் பந்தயம் கட்டலாமா?” என்று கூறியுள்ளார்.
இதனையும் சாட்சியாக எடுத்துக்கொண்டு பீகார் காவல்துறை தேசிய தேர்வு முகமைக்கு எச்சரிக்கைக் கடிதம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் அனுப்பியது. இவ்வளவு நடந்தும் தேசிய தேர்வு முகமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து 15 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடி உள்ளது.
பிஜேபி ஆட்சியின் நிர்வாக இலட்சணம் எந்தக் கெதியில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே
2018ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண்களைப் பெற்று தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்தார். கல்வியில் பின் தங்கிய மாநிலமாக உள்ள பீகார் மாநில மாணவி தேசிய அளவில் ‘நீட்’ தேர்வில் முதலிடம் பிடித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த மாணவி குறித்த சர்ச்சை ஒன்று எழுந்தது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அந்த மாணவிக்கு இல்லை என்ற சர்ச்சைதான் அது. பீகார் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த அந்த மாணவி, நீட்’ தேர்விற்காக வெளிமாநிலம் ஒன்றில் தங்கி இரண்டு ஆண்டுகளாக தயர் செய்துவந்துள்ளார். வெளிமாநிலத்தில் இருந்ததால், பீகார் பள்ளியில் வகுப்பிற்கு சரியாக அவர் செல்லவில்லை. அதனால் பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அவருக்கு இல்லை. ஆனாலும் நீட் தேர்வு எழுதிய அந்த மாணவி 12ஆம் வகுப்பில் 500க்கு 433 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த கல்பனாவின் தந்தை பீகார் மாநில பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் பேராசிரியர் குழுவின் தலைவராக உள்ளார். இவரது தாயார் அரசு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராவார். அதுமட்டுமல்ல, சிறுவயதில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த இந்த மாணவி 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு பீகார் மாநில அரசுப் பள்ளியில் சேர்கிறார். பீகார் அரசுப் பள்ளி யில் சேர்ந்ததிலிருந்தே, வகுப்பிற்குச் செல்லவில்லை. இவர் குறிப்பிட்ட பள்ளியில் படித்தவர் என்று செய்தித் தாள்களில் வந்தபோது, அந்தப்பள்ளியைச் சேர்ந்த குறிப் பிட்ட வகுப்பு மாணவிகள், இவரை நாங்கள் பார்த்ததே கிடையாது என்று கூறியுள்ளனர். குறிப்பிட்ட மாணவி படித்த அரசுப்பள்ளியில் தேர்ச்சி விகிதம் 62.3
பள்ளிக்கே செல்லாதவர்கள் எப்படி தேர்ச்சி பெறுவார்கள்? இரண்டு ஆண்டு நீட் தேர்வு பயிற்சியில் படிக்கும் மாணவர்கள் ஒருவேளை நீட் தேர்வில் சறுக்கிவிட்டால், அதற்காகத்தான் ஆள்மாறாட்டம், தேர்வு முடிவுகளில் தலையிடுவது என பல விதங்களில் தில்லுமுல்லுகள் உண்டு.
இந்த நிலையில் அந்த மாணவி பீகார் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தார் என்பதற்கான சான்றுகளைத் தரமுடியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் அவரது நுழைவு சீட்டையாவது கொடுங்கள் என்று அப்போது பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் கேட்ட போது, அன்றைய கல்வி அமைச்சர் கிருஷ்ணா காந்த வர்மா ஏ.என்.அய். செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: “நமது மாநில மாணவி முதலிடம் வந்துள்ளார் – இது நமக்குப் பெருமை, அவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினாரா, எழுதவில்லையா, எங்கே இருந்து தேர்வெழுதினார் – என்று கேட்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று – அவரின் திறமையைப் பாராட்டுவோம்” என்று கூறி கல்பனா குமாரிக்கு ஆதரவாக பேட்டியளித்துச் சென்றார். இன்றுவரை அவர் 12 ஆம் வகுப்பை எங்கு எழுதினார் என்பதே அறிய முடியாமல் கமுக்கமாகவே உள்ளது.
கடந்த ஆண்டு அவர் டில்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தும் முடித்துவிட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
தகுதி – திறமைக்கான அளவுகோல்தான் ‘நீட்’ என்று வாய் நீளம் காட்டுவோரின் யோக்கியதையையும், பின்னணியையும் தெரிந்து கொள்வீர்!