‘நீட்’டுக்கு ஒரு முடிவைக் காண்போம்!

Viduthalai
4 Min Read

‘நீட்’ என்பதுதான் இன்றைய தேதியில் மக்கள் பிரச்சினை.
அரியானாவில் உள்ள ஒரு தேர்வு மய்யத்தில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களில் 8 பேர் முதலிடம் பெற்றவர்கள் பட்டியலில் உள்ளதாக வெளியான தகவல் – மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு அதிர்ச்சியோடு அய்யப்பாடுகளை எழுப்புவதாக அமைந்தது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான அனுமதி ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு உள்ளது. தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கும்படி தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘நீட்’ கொண்டு வரப்பட்ட அந்த 2010ஆம் ஆண்டு முதலே நீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் பல்வேறு பேராட்டங்களை நடத்தி வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டி ‘நீட்’டுக்கு எதிரான தீர்மானங்களை நிறை வேற்றியது.
நாடு தழுவிய பரப்புரைகளை மேற்கொண்டது.

2024 – 2025 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 13 மொழிகளில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுக்கு 10 லட்சத்து 29 ஆயிரத்து 154 ஆண்கள், 13 லட்சத்து 76 ஆயிரத்து 831 பெண்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 24 லட்சத்து 6 ஆயிரத்து 79 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டைவிட 16.85 சதவீதம் பேர் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில், 9 லட்சத்து 98 ஆயிரத்து 298 ஆண்கள், 13 லட்சத்து 34 ஆயிரத்து 982 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளைத் தேர்வு செய்து அந்நாளில் ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட்டனர். மக்களின் கவனத்தைத் திசை திருப்பிட!
23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் எழுதிய தேர்வில், 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 ஆண்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 பெண்கள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 56.4 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.

இதில் அதிகபட்சமாக ஆங்கில மொழியில் 18 லட்சத்து 92 ஆயிரத்து 355 பேர் தேர்வை எழுதி இருந்தனர். அதற்கடுத்தபடியாக ஹிந்தி மொழியில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 908 பேர் எழுத விண்ணப்பித்தி ருந்தனர். இதில் தமிழில் எழுத 36 ஆயிரத்து 333 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். தமிழ் மொழியில் தேர்வு எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
‘நீட்’ தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் முதல் 100 இடங்களை பெற்றவர்களில் 67 பேர் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை எடுத்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதேபோல், 720 மதிப்பெண் முதல் 164 மதிப்பெண் வரை 11 லட்சத்து 65 ஆயிரத்து 904 பேர் எடுத்து இருக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி ஏற்படும் நிலை உள்ளது. இதனிைடயே நீட் தேர்வில் ஒரே மய்யத்தில் 8 பேர் முதலிடம் பெற்று இருப்பதாகவும் முறைகேடு இருக்கக் கூடும் என்ற ரீதியில் தனது கவலையை சமூக வலைத்தளத்தில் ஒருவர் தரவுகளுடன் பதிவிட்டார். 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்கள். இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று.
தேர்வு நடைமுறை மற்றும் நேர்மை குறித்து கேள்வி வெடித்துக் கிளம்பியுள்ளது. 2023-ஆம் ஆண்டு 720க்கு 720 எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை வெறும் 2 தான்.
தகுதி – திறமை உள்ளவர்கள் தானே டாக்டராக முடியும்; அதற்கொரு அளவுகோல் வேண்டாமா? அதுதான் ‘நீட்’ தேர்வு என்று ‘கோரஸ்’ பாடினார்கள்.

தொடக்கத்தில் நாம் வலியுறுத்தியதைப் புரிந்தோ, புரியாமலோ எதிர்த்தவர்கள்கூட, இந்த முறை ‘நீட்’ நடத்தப்பட்ட விதம், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கண்டு இது ஒரு மோசடியான திட்டம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மய்யம் கொண்ட எதிர்ப்புப் புயல், இப்பொழுது இந்தியா எங்கும் சுழன்று சுழன்று வீசுகிறது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் இதற்கொரு தீர்வு கிடைத்திருக்கும். அதே நேரத்தில் ஜனநாயகத்தில் வெறும் எண்ணிக்கைக் கணக்கே இறுதியானதல்ல!
மக்கள் சக்தி கிளர்ந்து எழுந்தால் மாமலையும் கடுகாகி விடும் என்பதுதான் உலக வரலாறு!
‘நீட்’ ஒழிக்கப்படும் வரை நம் பணி ஓயாது! ஓயாது!!
ஒன்றிடுவோம் – வென்றிடுவோம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *