ஆளுக்கொரு நீதியா?

Viduthalai
2 Min Read

அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை, ஜூன் 17 அமைச்சர் மனோ தங்கராஜ் சமூகவலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி 2010-இல் காஷ்மீரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அருந்ததிராய் அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளுக்கு பின் ஊபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டில்லி ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்திருப்பது புதிராக இருக்கிறது. ஒருவேளை இது பாஜக அவருக்கு பதவி வழங்கியதற்கு காட்டும் கைமாறா என்பது தெரியவில்லை! திருமதி. அருந்ததி ராய் அவர்களின் பேச்சு இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 ஆகியவற்றிற்கு முரணாக உள்ளதெனில், அதே வகை குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மவுனம் காப்பது ஏன்?

1. மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் இசுலாமியர்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்றும் ‘அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்’ என்றும் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தி மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் நச்சுமிகுந்த கருத்துக்களை கட்டவிழ்த்துவிட்டனர்.
2. “நமது வீட்டு சாவி காணா மல் போனால் ஜெகந்நா தரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாகக் காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போல சித்தரித்து காயப்படுத்தினார் பிரதமர் மோடி.
3. தமிழ்நாட்டு மக்களின் உணவு கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஒடிசா பாஜக காட்சிப் பதிவை வெளியிட்டது.
இது போன்ற நிகழ்வுகளில் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 கோமாவிற்கு சென்றது ஏன்?
ஜனநாயகத்திற்கு எதிரான ஊபா சட்டம் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்று. இச்சட்டத்தின் கீழ் 2019, 2020, 2021 ஆண்டுகளில் மட்டும் 4871 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 19 பேர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். பல பத்திரிகையாளர்கள் மீது வழக்கு உள்ளது. குறிப்பாக மேனன்டார் என்னும் ஒளிப்பட செய்தியாளர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பத்திரிகையாளர் சித்திக் கப்பான் 2020 முதல் 2023 வரை சிறையில் இருந்தார். இந்தியாவில் ஊபா சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97% பேர் நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர்.
எனவே, தேவையில்லாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் அருந்ததி ராய் அவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே ஜனநாயகம்! இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *