(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
கவிஞர் கலி.பூங்குன்றன்
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் என்றால் பொய்யர்கள் என்று ஒரே வரியில் சொல்லி விடலாம். காந்தியார் படுகொலைக்குப் பின்புலமாக இருந்தது அவர்களின் தத்துவம். ஆர்.எஸ்.எஸ். காரணம் என்பது உண்மையல்ல – காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே இந்து மகா சபைக்காரர் – ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று சொல்லிக் கொள்ளட்டும்! காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோட்சேயின் சகோதரரும் அவரது துணைவியாரும் இதனை மறுக்கின்றனர்.
அது ஒரு புறம் இருந்து தொலையட்டும்!
ஆர்.எஸ்.எஸைப் பற்றிச் சொல்லும்போது – காந்தியாரே பாராட்டியிருக்கிறார்; ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்டு அவர்களின் கட்டுப்பாட்டைப் பாராட்டினார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். அம்பேத்கர் பாராட்டினார் என்பார்கள். உண்மையிலேயே காந்தியார் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்னதான் தெரிவித்தார்! ஆர்.எஸ்.எஸ். பற்றி காந்தியாரின் கணிப்புதான் என்ன?
இதோ ஆதாரங்களோடு,
காந்தியும் – ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்
பிபிசி இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கம்
சுதந்திரத்திற்குப் பிறகான வகுப்புக் கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக 1947இல் காந்தி டில்லிக்குச் சென்றபோது, பங்கி காலனியில் தங்கினார். அங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன.
தினமும் ஹிந்து இளைஞர்கள் அங்கே ஒன்று கூடி, அணிவகுப்பு நடத்தி, லத்தியுடன் உடற்பயிற்சிகள் செய்வார்கள். பாரத மாதா கொடியை ஏற்றி அவர்கள் மரியாதை செலுத்துவார்கள்.
அவர்களுடைய ‘இந்து மாதா’ என்பது, காந்தியாரின் மனதில் இருந்த அனைவரும் ஒன்றிணைந்த இந்தியா என்றதில் இருந்து வேறுபட்டிருப்பதை, காந்தியாரின் செயலாளர் பியாரேலால் கவனித்தார். அவர் இவ்வாறு எழுதுகிறார். ”அவர்களுடைய அன்னை என்பது மகா காளி போன்றவர். தன்னுடைய இருப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களையும், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று கூறக் கூடியவர். அதாவது ‘முஸ்லிம் சமூகத்தவர்களை’ என்ற அர்த்தத்தில் கூறுவதாக இருந்தது.”
”வகுப்புவாத இந்துக்களின் ராணுவம் போன்ற அமைப்பாக அது இருந்தது. ”அவர்களுடைய மத அடிப்படைவாத சித்தாந்தம் கடைசியில் தேசத் தந்தையின் உயிரைப் பறித்துவிட்டது.” (`பூர்ணாஹுதி-1. பக்கம் 234, மணிபாய் பி. தேசாயின் குஜராத்தி மொழி பெயர்ப்பு)
தன்னுடன் இருந்த பிரிஜ்கிருஷ்ண சாண்டிவாலாவிடம் ஆர்.எஸ்.எஸ். வரலாறு பற்றி காந்தியார் பின்வருமாறு விளக்கியுள்ளார்:
”ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதலாவது தலைவர் நல்ல சிந்தனைகளைக் கொண்டவர். ஆனால் இப்போது சங் அமைப்பு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. அவர்களுடைய செயல்பாட்டின் போக்கு மாறிவிட்டது. சங் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்போது வன்முறையை நம்புகிறார்கள்.” (`பாபுனி சேவமா’, பிரிஜ்கிருஷ்ண சாண்டிவாலா, பக்கம் 74)
சங் பயிற்சி முகாம்கள் சிலவற்றை காந்தியார் பார்வையிட்டிருக்கிறார்.
சங் அமைப்பின் தலைவர் கோல்வல்கர் ‘குருஜி’, காந்தியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். விசேஷமான கவுரவம் அளித்து, பல சமயங்களில் பாராட்டிய, வார்த்தைகளை வைத்துக் கொண்டு இப்போது வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு நினைத்தாரா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
ஏனெனில் காந்தியார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ‘தேசியவாதத்துக்கு’ நேர் எதிரானதாக ஆர்.எஸ்.எஸ் சிந்தனைகள் இருந்தன. இந்த நாடு ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் சொந்தமானது என்று காந்தியாரும் மற்றவர்களும் நம்பிய நிலையில், சங் சித்தாந்தம் அதற்கு முரண்பட்டதாக இருந்தது.
ஊடுருவல்காரர்களான முஸ்லீம்களுக்கு (இதைத்தான் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் மோடி கூறினார். குஸ்பேட்டியாங்க் என்றால் ஆக்ரமித்தவர்கள்/ஊடுருவல்காரர்கள்), ஜனநாயக உரிமையை கொடுக்கும் சிந்தனைக்கு கோல்வால்கர் எதிர்ப்பு தெரிவித்தார்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி, பிற மதங்களைச் சேர்ந்த அனைவருமே இரண்டாம் தரத்தினராகக் கருதப்பட வேண்டும், அதுமட்டுமின்றி, அவர்களுக்குக் குடிமக்கள் என்ற உரிமைகளை வழங்கக் கூடாது என்று அவர் கூறினார். (சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம் பக்கம் 437-8)
`முஸ்லிம் சமூகத்தில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் ஜிகாதிகளிடம் அவர் (காந்தியார்) சரணடைந்துவிட்டார்’ என்றும்”இந்து – முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் சுயராஜ்யம் சாத்தியமற்றது என்றும் கூறிய நபர், சமூகத்திற்கு மிகப் பெரிய மோசடியை செய்துள்ளார்’ ”நமது மகத்தான மற்றும் பழைமையான (இந்து) மக்களின் உயிரோட்டத்தை அவர் கொன்றுவிட்டார்.”’ ”அனைத்து இந்துக்களும் முஸ்லிம்களாக மாறிவிடுவதுதான் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான எளிய வழி,” என்று ஏளனமாக கோல்வால்கர் எழுதியுள்ளார்.
சங் நிகழ்ச்சி ஒன்றை காந்தியார் பார்வையிட்டபோது, ”இந்து மதம் தந்த அற்புதமான மனிதர்” என்று அவரைக் குறிப்பிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய காந்தியார், ”இந்துவாக இருப்பதில் எனக்குப் பெருமைதான். ஆனால் என்னுடைய ஹிந்து மதம் சகிப்புத்தன்மை அற்றதாகவோ அல்லது பல்வேறு குழுக்களாகப் பிளவுபட்டதாகவோ இல்லை,” என்று கூறினார்.
”எனக்குப் புரிந்த வரை, அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த விஷயங்களை ஏற்றுக் கொண்டிருப்பது தான் ஹிந்து மதம். அதுதான் அதன் மகத்துவம்.”
”ஹிந்து அல்லாதவர்கள் இந்த தேசத்தில் வாழ விரும்பினால், அவர்களுக்கு தேசத்தில் சமமான மற்றும் மரியாதைக்குரிய இடம் இல்லை, முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்கள் அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்துக்கள் நம்பினால். அதுதான் இந்து மதத்தின் முடிவாக இருக்கும்.
தங்களுடைய கொள்கைகளில் இஸ்லாத்துக்கு எதிரான துவேஷம் எதுவும் கிடையாது” என்று அவருக்கு சங் உறுதியளித்தது.
அந்த வாக்குறுதியை காந்தியார் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, ”இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் உங்கள் அமைப்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது கவலைக்குரியது,” என்று கூறியுள்ளார். (பூர்ணாஹுதி-4, பக்கம் 18)
அவருடைய உரைக்குப் பிறகு, அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, எந்த மாதிரியான சித்தாந்தத்தில் சங் நம்பிக்கை கொண்டிருந்தது என்பதை வெளிக்காட்டுவதாக இருந்தது.
”அடக்கி ஆள்பவரைக் கொல்லுவது இந்து தர்மத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறது இல்லையா? அப்படி இல்லை என்றால், கவுரவர்களை அழிக்கும்படி சிறீகிருஷ்ணர் கூறிய ஆலோசனைகளைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அடக்குமுறை செய்பவர் யார் என்பதை முடிவு செய்வதற்கு முன்னதாக, ஒருவர் வெறுப்புணர்வுகளைக் கைவிட்டு குற்றச்சாட்டுகள் இல்லாதவராக இருக்க வேண்டும், நீதியைத் தர வேண்டிய அந்தப் பொறுப்பு சட்டபூர்வ அரசாங்கம் மற்றும் நீதிபதிகளுக்கு உரியது என்றும், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நீதி வழங்க முடியாது என்றும் அவர்களுக்குக் கூறியுள்ளார் காந்தியார். (பூர்ணாஹுதி-4, பக்கம் 18)
நம்பகத்தன்மை இல்லாத உறுதிமொழிகள்
காந்தியாரிடம் பல முறை சங் உறுதிமொழிகள் அளித்துள்ளது. அது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மற்ற வகுப்புவாத சக்திகளின் வாக்குறுதிகளைப் போல இதனையும் காந்தியார் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
கோல்வால்கருடன் நடந்த ஒரு சந்திப்பின்போது, ”உங்கள் அமைப்பின் கரங்களிலும் ரத்தக் கறை படிந்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று காந்தியார் கூறியுள்ளார். அந்தப் புகாரை அவர் மறுத்தார். யாரையும் பகைவராக தங்கள் அமைப்பு பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.
”முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும் என்ற செயல்திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. ஹிந்து மதத்தைக் காப்பதற்கு எங்கள் அமைப்பு தன் சக்தி முழுவதையும் பயன்படுத்துகிறது.
எங்கள் அமைப்பு அமைதியை விரும்புகிறது. எங்களுடைய இந்த சிந்தனைகளை நீங்கள் வெளியில் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” (டில்லி டைரி, பக்கம் 11)
இதற்குப் பதில் அளித்த காந்தியார், ”நீங்கள் கூறியவை எல்லாம் உங்களுடைய மனதில் இருந்து வந்த வார்த்தைகள் என்றால், அதை உங்கள் வாயால் சொல்ல மக்கள் கேட்பது நல்லதாக இருக்கும்,” என்று கூறினார் (பூர்ணாஹுதி-4, பக்கம் 17)
பின்னர் தன்னுடைய வழிபாட்டின்போது கோல்வால்கரின் கோரிக்கை பற்றி காந்தியார் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும், அதற்குப் பிறகும் ஆர்.எஸ்.எஸ்-இன் வன்முறை செயல்கள் பற்றி காந்தியாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.
கோல்வால்கருடன் நடந்த ஒரு சந்திப்பின்போது, காந்தியாரின் உடனிருந்த ஒருவர், அகதிகள் முகாம்களில் சங் அமைப்பினர் சமுதாய சேவை ஆற்றியபோது ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தினார்கள் என்று கூறினார். அதற்குப் பதில் அளித்த காந்தியார், ”ஹிட்லரின் நாஜி படையினரும், முசோலினியின் பாசிஸவாதிகளும் இதேபோன்ற சேவைகளை செய்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்,” என்று கூறியுள்ளார்.
கோல்வால்கர் மற்றும் காந்தியார் இடையிலான உரையாடல் பற்றி பியாரேலால் குறிப்பிட்டுள்ளார். அவருடைய குறிப்பின்படி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ”சர்வாதிகார மனப்போக்கு கொண்ட வகுப்புவாத அமைப்பு” என்று காந்தியார் கூறினார் என்று உள்ளது. (பூர்ணாஹுதி-4, பக்கம் 17)
“நான் இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று கூறிய அண்ணல் அம்பேத்கர், அதன்படியே பல லட்சம் மக்களோடு ஹிந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு புத்த மார்க்கம் தழுவினார்.
இப்படிப்பட்ட அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸை பாராட்டினார், நற்சான்று வழங்கினார் என்று எல்லாம் கூறுவது பார்ப்பனியத்துக்கே உரித்தான நயவஞ்சகமும் திரிபுவாதங்களும்தான்.
இன்னும் கூறப்போனால் அண்ணல் அம்பேத்கரின் சமையல்காரர் மூலம் உணவில் விஷம் வைத்து கொல்லும் சதித் திட்டத்தைத் தீட்டியவர் சவர்க்களின் உடன் பிறப்பான பாபா சவர்க்கார்.
ஜே.பி. என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் 1976ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு எழுதிய கடிதமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு கலாச்சார இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலில் நுழைந்து அதிகாரத்தைப் பிடிக்கும் அபாயத் திட்டத்தை பிரதமர் மொரார்ஜிக்குத் தமது கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்!
உண்மை இப்படி எல்லாம் இருக்க, எவ்வளவுத் தில்லு முல்லுகளை சங்பரிவார்கள் அரங்கேற்றுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸால் தங்களுக்கு நெருக்கடி வரும் போது – ஆர்.எஸ்.எஸ். வேறு; நாங்கள் வேறு என்று பிஜேபியினர் கழற்றி விட்டுவிடுவார்கள்.
உண்மை என்னவென்றால் ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் தான் பிஜேபியின் தேசிய செயலாளராக வர முடியும் என்ற தீர்மானம் இருக்கிறது.
தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ஒருவர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். (சர்சங்சாலக்) தோற்றத்திலிருந்து அதன் தலைவராக வந்தவர்கள் அனைவரும் சித்பவன் பார்ப்பனர்கள் தான் – ஒரே ஒரு தலைவரைத் தவிர – அவர்தான் ராஜேந்திர சிங் தோமர். 1994 முதல் 2000 வரை ஆர்.எஸ்.எஸில் தலைவராக இருந்தார். இவரை ராஜி பையா என்று அழைப்பார்கள்.
1925இல் தோற்றுவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அத்தனைத் தலைவர்களும் சித்பவன் பார்ப்பனர்தான் என்பதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். என்பது யாருக்கானது என்று தெரியவில்லையா?
குருமூர்த்திகள் விழுந்து விழுந்து ஆதரிப்பதன், அரவணைப்பதன் அந்தரங்கம் புரியவில்லையா?
தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எசுக்கு நெருக்கடி நிலை காலத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நிதி தந்து உதவினார் என்று ராம.கோபாலன் தனது வாழ்க்க வரலாற்று நூலில் பதிவிட்டுள்ளாரே!
ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது, பிரபல வழக்குரைஞர் டி.ஆர்.வி.சாஸ்திரியை அழைத்து, தடையை நீக்க நடவடிக்க எடுக்கச் சொன்னவர் காஞ்சி பெரியவர் (சந்திர சேகரேந்திர சரஸ்வதி – சங்கராச்சாரியார்) நேருவிடம் பேசித் தடையை நீக்க உதவினார் என்று இதே ‘துக்ளக்’ குருமூர்த்தி பெருமை பொங்க ஒப்புக் கொண்டு எழுதியுள்ளாரே! (துக்ளக், 12.5.2021, பக்கம் 15).
ஆர்.எஸ்.எஸ். என்றாலும், பா.ஜ.க. என்றாலும், பார்ப்பனர் என்றாலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!