சென்னை, ஜூன் 14- முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை,ஜமாத் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 9.1.2024 அன்று கிறிஸ்தவ சமுதாய பிரதிநிதிகளுடனும், 7.2.2024 அன்று முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது, கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அதன்படி அந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தவகையில் சிறுபான்மையின மக்களின் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை புதிதாக கட்டுவதற்கும், ஏற்கெனவே உள்ள வழிபாட்டுதலங்களை புனரமைப்பதற்கும் அரசு அனுமதி வழங்குவதில் /இருந்து வந்த நடைமுறை சிக்கல்களை நீக்கி எளிமையாக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதேபோன்று, பல்வேறு கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சருக்கு நன்றி
இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு மசூதிகளின் அய்க்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் முகமது பஷீர், செயலாளர் முகமது பெய்க், பொருளாளர் லியாகத் அலி, துணை செயலாளர் ஆரிப் சுல்தான், சென்னை மாவட்ட நிர்வாகிகள் காசிம் முஸ்தபா, முகமது பாரூக், ஹனீபா ஆகியோர் நேற்று (13.6.2024) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனிருந்தார்.