பகுத்தறிவு மையூற்றி அச்சாகி வந்த அமிழ்து (வெண்பா)

1 Min Read

செல்வ மீனாட்சி சுந்தரம்

நூறாண்டின் முன்பிறந்த குடிஅரசு!
முடிமடியில் நூலமர்ந்து மோடியென ஆள
அடிப்படிய மர்ந்துற்றோம் அல்லல்! – இடியாய்க்
குடிஅரசின் கோல்விடுத்த கேள்வியம்பு பட்டே

இடிந்ததுகாண் வர்ணவரண் இற்று!
அச்சுத்தாள் ஏடெல்லாம் ஆரியத்தாள் தாங்கிகளாய்
உச்சாணிக் கொம்பர்சீர் ஓதுதற்கோ? – இச்சழக்கின்
வீச்சறுத்து வீழ்த்தப்போர் வேங்கைபெரி யார்தொடுத்தார்

கூர்ச்சொல் குடியரசு கொண்டு!
சாத்திரம்ச னாதனத்தைச் சாதிமதம் ஆகமத்தைக்
காத்தருள் வேதியத்தின் காவியத்தை – ஆர்த்துக்
கடிந்து கனன்றெழுந்து கந்தகச்சொற் பெய்தே
இடித்த குடிஅரசு ஏடு!

சுயமரி யாதை தொலைத்திழிந்தார் வாழ்வின்
துயர்களைந் தூக்கிய தோழன்! – கயத்தால்
உரிமை யிழந்துழன்ற ஊமை நமக்குப்
பெரியார் குடிஅரசு பேச்சு!

ஈராய் முடிபிணித்து ஈரா யிரமாண்டாய்
ஊரார் உழைப்புறிஞ்சி ஓய்ந்துமகிழ் ஆரியத்தை
கூராயு தம்கொண்டு கொய்த குடிஅரசு
தீராநோய் தீய்த்தொழித்த தீ!

அயலார் அடிபணிந்து ஆளுமை அற்றார்
மயல்தீர்க்க வந்த மருந்து! – புயலாய்க்
கயமைக் கருத்தழித்துக் காத்த கருணைப்
பெயலாம் குடிஅரசு பேறு!

வரிதாங்கி வந்தாலும் மக்களூறு செய்யாப்
பரிவால் குடியோம்பப் பண்பார் பெரியாரின்
பேராழச் சிந்தையிலே பூத்த குடிஅரசு
நூறாண்டு கண்டநன் னூல்!

ஈரோட்டு மண்பிறந்த ஈகம் பெரியார்கூர்
ஏரோட்டத் தாள்துளிர்த்த ஏடு!நம் – சீரோங்கப்
பச்சையட்டை தாங்கிப் பகுத்தறிவுமையூற்றி

அச்சாகி வந்த அமிழ்து!
குடிவதைத்த கூன்நிமிர்த்தக் கோலீந்த கொற்றம்!
விடியலுக்காய் வந்துதித்த வெய்யோன்! – குடிஅரசு
தாள்பிறந்தார் என்றிழிந்த சூத்திரரின் தாழ்வகற்றத்
தோள்தந்த தாய்மைத் துணை!

பேதமில்லாப் பேருலகைப் பெண்ணுரிமை பேணுலகை
மீதமின்றிப் பாழ்மடமை வெல்லுலகை – ஏதமில்லா
வாழ்வுற்ற மானிடத்தை வார்க்கக் குடிஅரசு
தாள்வடிவில் வாய்த்த தகை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *