புலவர் நாத்திகநம்பி எனும் வை.இளவரசன் –தேனீ மலர்களிலிருந்து தேனை சேகரிப்பது போல, 76 வயதான புலவர் இளவரசன் மக்களிடமிருந்து விடுதலை சந்தாக்களை சேகரிக்கிறார். 1968 முதல் 2024 மே மாதம் வரை 800 க்கும் மேற்பட்ட சந்தாக்களை சேர்த்திருப்பதாக ஆதாரங்களோடு காட்டுகிறார் புலவர் இளவரசன்.
முதன் முதலில் ‘விடுதலை’யை
எங்கு படித்தீர்கள்?
புலவர் இளவரசன்: நெற்றியில் திருநீறும், நிறைந்த பக்தியும் கொண்ட நான் கடலூர் மாவட்டம் வடகரை கிராமத்தைச் சேர்ந்தவன். 1968 ஜூன் 13 அன்று வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள மணிமேகலை உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியர் நாராயணசாமியுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. உணவு இடைவேளை நேரத்தில் அவர் வீட்டுக்கு என்னை சாப்பிட அழைத்தார். அப்போது, ஆசிரியர் நாராயணசாமி அறைக்கு முன்பாக இருந்த தட்டி ஒன்றில் விடுதலை நாளிதழ் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் பெரியார் படம், கடவுள் மறுப்பு கருத்துகள் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். அதுவரை பெரியார் பற்றியும் விடுதலை நாளிதழ் பற்றியும் அறிமுகம் இல்லாத எனக்கு ஆசிரியர் நாராயணசாமி விடுதலையை படிக்கக் கொடுத்தார். விடுதலையை படிக்கத் தொடங்கியதும் என் மனதில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து 1970 ஆம் ஆண்டு பெண்ணாடத்திற்கு தந்தை பெரியார் வருகை தந்தார். தந்தை பெரியாரின் பேச்சை முழுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். கூட்டம் முடிந்தவுடன், கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கருகில் அடிக்குழாய் இருந்தது, அங்கிருந்த ஒருவரை அழைத்து அடி குழாயில் தண்ணீரை அடிக்கச் சொல்லி என் நெற்றியில் இருந்த திருநீறை அழித்தேன். பின் வீட்டிற்கு சென்று கடவுளர் படங்களை அகற்றி, வீட்டுக்குப் பின்னால் இருந்த புளிய மரத்துக்கு அடியில் கொண்டுபோய் வைத்தேன். அதே ஆண்டில் பொன்னம்பலனார் வடகரை கிராமத்துக்கு வருகை தந்தார். அப்போது, அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர், முழுமையான பகுத்தறிவாளனாக பரிணமித்தேன்.
1971இல் மிகுந்த எதிர்ப்புக்கிடையே பொன்னம்பலனாரை அழைத்து எங்கள் ஊரில் கழகக்கொடி ஏற்றி கூட்டம் நடத்தினோம். ஆசிரியர் பணியில் இருக்கும் பொழுதே, செந்துறை, அரியலூர் பகுதிகளுக்கு கூட்டங்களுக்கு செல்வேன்.
கூட்டங்களில் பேசுவதற்கு வழிச் செலவு வாங்காமல் விடுதலைக்கு சந்தாக்கள் பெறுவேன். இயக்க நூல்களை வாங்கி விற்பனை செய்வேன். இப்படியாக ஆசிரியர் பணியோடு இயக்கப் பணிகளும் தொடர்ந்தன. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன். பணி ஓய்வுக்குப் பின் விடுதலைக்கு சந்தாக்களை திரட்டுவதை முழு நேரப் பணியாக கொண்டேன்.
சந்தா திரட்டும் முறை
அய்ந்து நிலைகளில் சந்தா திரட்டுகிறேன்.
அதாவது,
1. உடன் பயின்றவர்கள்
2. உடன் பணியாற்றியவர்கள்
3. என்னிடம் பயின்ற மாணவர்கள்
4. அரசியல் கட்சி நண்பர்கள்
5. உறவினர்கள்
இதில் 2 மற்றும் 3ஆவது நிலையில் உள்ள வர்களே அதிக சந்தாக்களை வழங்குகின்றனர்.
2007 ஆம் ஆண்டுக்கு முன்பு விடுதலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சந்தாக்களை திரட்டி இருக்கிறேன். ஆனால் பணி ஓய்வுக்கு பின் சந்தா திரட்டுவதை எனக்கு நானே ஒரு இயக்கமாக எண்ணிக் கொண்டு, சந்தா திரட்டுவதையும், திரட்டிய சந்தாக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கிறேன் என அந்த குறிப்பேட்டை காண்பித்தார் புலவர். குறிப்பேட்டில் சந்தாதாரர் பெயர், முகவரி, வரிசை எண், ரசீது எண் ஆகியவைகளை எழுதி வைத்திருக்கிறார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை எங்கு சந்தித்தாலும் விடுதலை சந்தாவோடு தான் சந்திப்பேன் என்கிற நிலைப்பாட்டை கொண்டிருக்கும் புலவர் இளவரசனை விடுதலை தேனி என தமிழர் தலைவர் அழைப்பது சிறப்புக்குரியதாகும்.
விடுதலை தேனீ சேகரித்த சந்தாக்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக:
2007- 23 சந்தா
2008- 53 சந்தா
2009 – 54 சந்தா
2010 – 53 சந்தா
2011 – 60 சந்தா
2012 – 50 சந்தா
2013 – 48 சந்தா
2014 – 51 சந்தா
2015 – 55 சத்தா
2016- 38 சந்தா
2017 – 41 சந்தா
2018 – 25 சந்தா
2019 – 12 சந்தா
2021 – 22 சந்தா
2022 – 47 சந்தா
(அரியலூர் இளைஞரணி மாநாட்டில்)
2023- 33 சந்தா
2024- 10 சந்தா ஏப்ரல் முடிய
2024- மே-28 – 8 சந்தா.
76 வயதை கடந்தும் சந்தா திரட்டுவதை தனது பணியாகவும், அந்தப் பணியில் தனி பாணியை கொண்டிருக்கும் புலவர் இளவரசனை இயக்கப் பொறுப்பாளர்கள் முன்மாதிரியாக கொண்டு விடுதலை சந்தா சேகரித்தால் இலக்கை எளிதாய் எட்டலாம்.
விடுதலையை தட்டியில் படித்து அதனைத் தாங்கிப் பிடித்து, விடுதலை பரப்புவதையே பணியாக கொண்டிருக்கும் விடுதலை தேனீ புலவர் இளவரசனின் தொண்டு தொடர்க.
தொகுப்பு: த.சீ.இளந்திரையன்