அரியானா மாநிலம், குருக்ஷேத்ராவின் கான்பூர் கோலியான் கிராமத்தில் வசித்து வந்த ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் மேனாள் மேலாளர் ரஞ்சித் சிங், கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஅய் விரிவான விசாரணை நடத்தி, கடந்த 2007இல் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் 2021 அக்டோபர் 8ஆம் தேதி அன்று, ரஞ்சித் சிங் கொலை வழக்கு தொடர்பாக ரஹீம் மற்றும் நான்கு பேர் குற்றவாளிகள் என பஞ்ச்குலா சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதோடு குர்மீத் ராம் ரஹீமுக்கு ரூ.31 லட்சமும், மற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து குர்மீத் ராம் ரஹீம் தரப்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்வர் தாக்கூர், லலித் பத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் பஞ்சாப் மற்றும் அரியாணா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த வழக்கு தவிர, தனது இரண்டு சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம், தற்போது அரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2021- ஆம் ஆண்டு சிறை சென்ற குருமீத் ராம் ரஹும் பெரும் பாலான நாட்கள் பிணையிலேயே இருந்து வந்தா ராம். இந்த ஆண்டு ஜனவரி வரை 7 முறை குர்மீத் ரஹுமிற்கு பரோல் விடுவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் சமயத்திலும், அரியானா மாநகராட்சித் தேர்தல் சமயத்திலும் குர்மித் ராம் ரஹுமிற்கு பரோல் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பஞ்சாப் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஜூன் 1ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் சரியாக தேர்தல் வாக்குப்பதிவுக்கு 3 நாள்களே இருக்கும் நிலையில் அவர் விடுதலை ஆகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் என்னதான் நடக்கிறது? இதற்கு மேலும் நடப்பதற்கு என்னதான் இருக்கிறது?
காஷ்மீரில் ஆசிஃபா என்ற சிறுமியை கோயில் கருவறையில் வைத்து பல நாள்கள் வன்புணர்வு செய்த கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோதுகூட, பிஜேபியினர் கட்சிக் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதும்; உ.பி.யில் குளிர் சாதனப் பெட்டியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி, முகம்மது அக்லாக்கை கொலை செய்த குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்ததா? மாறாக என்.டி.பி.சி.யில் (நேஷனல் ெதர்மல் பவர் கார்ப்பரேஷன்) பணியமர்த்தம் செய்யப்படவில்லையா?
சட்ட விரோதம் – அராஜகம் இவற்றின் வடிவங்களாக இருக்கும் ஓர் ஆட்சி 10 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறுகிறது என்பதை நினைத்தால் குனிந்த தலை நிமிரவே மறுக்கிறது.