சமூகநீதி காவலருக்கு நினைவுச் சின்னம்!

Viduthalai
3 Min Read

15 ஆண்டுகளுக்கு முன்பே (2008) சொன்னார் தமிழர் தலைவர் ஆசிரியர் –

கலைஞர் ஏற்றார் – இன்று தி.மு.க. ஆட்சி செய்கிறது – வரவேற்கிறோம்!

தமிழ்நாடு

‘‘தமிழ்நாட்டிலே எப்படி நினைவுச் சின்னத்தை உருவாக்குவது என்பதை நாங்கள் கேட்டு நம்முடைய தலைவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செய்யக் கூடியவர் அல்ல. அவருக்குத் தெரியும் எப்படிச் செய்வது? 

எப்பொழுது செய்வது? எதைச் செய்வது? இதை எல்லாம் யாரும் கேட்காமலே செய்யக்கூடிய ஆற்றல்  படைத்த முதலமைச்சர் நமது கலைஞர்! 

அதனால்தான் பல பேர் அவரிடத்திலே ஆத்திரப் படுகிறார்கள். நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியடைகின்றோம். அவருடைய ஆற்றலைக் கருதி – தகுந்த நினைவுச் சின்னத்தை நாம் உருவாக்க வேண்டும். அவருக்கு நினைவுச் சின்னம் மண்டல் கமிசன்தான், 

வடபுலத்திலே இருக்கிற பெரியார் மய்யம் இடிக் கப்பட்டு – அதன்பின் விரிவாகக் கட்டப்பட்டிருக்கின்ற டில்லி பெரியார் மய்யத்தை பிப்ரவரியிலே நம்முடைய தலைவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் திறந்து வைக்க இருக்கின்றார்கள். 

பெரியார் மய்ய அரங்கிற்கு வி.பி.சிங் பெயர் 

எனவே, டில்லியிலே இருக்கின்ற பெரியார் மய்யத்தில் ஓர் அரங்கத்திற்கு வி.பி.சிங் அரங்கம் என்று பெயரிடக் கூடியதாக அமையும் என்பதை இந்த நேரத்திலே சொல்கிறேன். அது இயக்கம் சார்பானது.

ஆனால், மக்கள் சார்பாக தமிழ்நாட்டின் சார்பாக அவருக்கு எப்படிப்பட்ட பெருமைகளை உருவாக்க வேண்டும் – எப்படிப்பட்ட நினைவுச் சின்னங்களை உருவாக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களே கூறுவார்கள். எனவே அதிலே அவர்களுக்குப் பங்குண்டு. 

அந்த வகையிலே தான் அவர்கள் சொன்னார்கள். இந்த கூட்டமே உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். நாம் அவருக்கு நல்ல மரியாதை செலுத்த வேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

அந்த வகையிலே வி.பி.சிங் அவர்களுக்கு தமிழ் நாட்டின் தலைநகரத்திலே எப்படிப்பட்ட ஒரு சிறப்பான நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களோ அவர்களோடு உடன் இருந்து பெரியார் தொண்டர்கள் நாங்கள் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் – இருக்கிறோம்.   

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

– சென்னை, தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற வி.பி.சிங்., படத்திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை, (‘விடுதலை’, 17.12.2008)

சென்னை தியாகராயர் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தலைமையேற்று வி.பி.சிங்  படத்தினைத் திறந்து வைத்தார்.

இன்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று, முதல மைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் பெரு மகிழ்ச்சியோடு இசைவு தந்தார். ‘எனது இளவல் வீரமணி இட்ட கட்டளை’ என்றும் கூறினர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 27 ஆம் தேதி சென்னையில் சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலையைத் திறக்க இருப்பது கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறோம் – வரவேற்கிறோம்!

கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சில் பால் வார்த்தார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். 27 விழுக் காடு இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளித்ததன்மூலம் – அதனால் தனது பிரதமர் பதவி இழப்பு என்ற விலையையும் கொடுத்தார் – இதனை என்றும் நினைவுகூர்வோம்!

வாழ்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *