சென்னை, மே 30 முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கடந்த 3 ஆண்டுகளில் விளையட்டுத் துறைக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளார். விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பன்னாட்டு, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டின் 2,738 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.87.61 கோடியை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
சென்னையில், முதல்முறையாக தமிழ்நாடு அரசும், இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ரூ.114 கோடி ரூபாய் செலவில், உலகப் புகழ் பெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்தியது. இதன் பயனாக, சென்னை இனி உலகின் முன்னணி விளையாட்டு நகரம் எனப் புகழ்கொடி நாட்டியது. தொடர்ந்து, கடந்த 2022-இல் பன்னாட்டு மகளிர் டென்னிஸ் வாகையர் பட்டம் போட்டி, ஏடிபி சேலஞ்சர் 100 பன்னாட்டு ஆண்கள் டென்னிஸ் போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டி, ஆசிய ஆடவர் ஹாக்கி வாகையர் பட்டம் உலகளவில் புகழ்பெற்ற பன்னாட்டு அலைச் சறுக்குப் போட்டி, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி ஆகிய போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன.
இதில், கேலோ இந்தியா போட்டியில், 30 தங்கம், 21 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு 2-ஆம் இடம் பிடித்தது. இத்தகைய செயல்பாடுகளால் தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாறி வருகிறது.