“நான் கடவுள்” – உருட்டலின் உச்சம்

Viduthalai
1 Min Read

“நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான்.”
“ஏதோவொரு விடயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தேர்தல் பிரச்சாரத்தில் புதிய அவதாரத்தை எடுத்துள்ள தெய்வப் பிறவி(?) மோடி அவர்களது பேச்சு.
பல ஆண்டுகளாக பதவி சுகம், பகட்டான வாழ்க்கை, மக்களை பிளவுபடுத்தும் பேச்சு, தேர்தல் வெற்றிக்காக பிரதமர் பதவிமீது பத்தாண்டுகளுக்குப் பிறகும் அடங்காத மோகம் கொண்ட ஒருவர் தன்னை இறைவனின் தூதரே நான்தான் என்று பேசுவது எவ்வளவு மோசமானது.

இதுபோன்ற சிந்தனையை சதாகாலமும் சிந்திக்கும் ஒரு மனிதர்கள் தங்களை அதுவாகவே மனதளவில் உருவகப் படுத்திக் கொள்வார்கள் என்று அறிவியல் சொல்வதையும் சிந்திக்க வேண்டும்.
உலகின் பல சர்வாதிகாரிகளின் ஆரம்பகால சிந்தனை. இதுபோன்ற மனநிலையை ஏற்படுத்திக் கொண்டுதான் மிகக் கொடிய சர்வாதிகாரிகளாக மாறி இன அழிப்பில் ஈடுபட்டு பல லட்சம் பேர் அழிவதற்கு காரணமாக இருந்துள்ளார்கள். இதை நோக்கித்தான் மோடியும் செல்கிறாரோ என்று அச்சம் ஏற்படுகிறது.
ஒருவேளை ராமன் கோவிலை திறந்து வைத்ததால் தன்னையே ‘அவதார புருஷராக’ உருவகப்படுத்தும் மன நிலையில் இருக்கிறாரோ? எது எப்படியோ மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தனக்கே நாடு முழுவதும் சிலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்.
மொத்தத்தில் இந்த தேர்தலைப் போன்ற மோசமான தேர்தலை இதுவரை நாடு சந்தித்ததில்லை. தனது கடமையை சரியாக செய்யமுடியாத பலவீனமான தேர்தல் ஆணையத் தையும் இதுவரை பார்த்ததில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *