கென்யா நாட்டில் வினோத மூடநம்பிக்கை

Viduthalai
1 Min Read

ஞாயிறு மலர்

அல்பினிஸம் (Albinism) என்பது வெண்மைத் தோல் நோய். மரபணு குறைபாடுகளால் இது ஏற்படுகிறது. முகம் உள்பட உடல் முழுவதும் வெண்ணிறத் தோலுடன் காணப்படும் பலரை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் குணப்படுத்த அறிவியல் நிபுணர்களும் மருத்துவர்களும் போராடி வருகின்றனர்.
கென்யா என்ற ஆஃபிரிக்க நாட்டில் மூட நம்பிக்கைகளும், மத வெறியும் உச்சத்தைத் தொட்டுள்ளன என்கிறார்கள். அமெரிக்க, அய்ரோப்பிய ஆராய்ச்சியாளர்கள். அல்பினி ஸத்தால் பாதிக்கப்பட்ட இளம் பிள்ளைகள் கடத்தப்பட்டு கொல்லப்படுவது அங்கே நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறதாம். இவர்களுடைய உடலின் பகுதிகள் மாந்திரீகச் செயல்களுக்கும், ஏவல் சூனியம் போன்ற தீயச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமாம்.

The Center for Inquiry (CFI) என்பது ஒரு பன்னாட்டு மனிதநேய அமைப்பு. பல நாடுகளில் இதற்குக் கிளைகள் உள்ளன. தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது. நம் ஆசிரியருக்கு மனித நேயர் விருது வழங்கப்பட்தில் இந்த அமைப்புக்கு பெரும் பங்கு இருந்தது. இதன் மேனாள் தலைவரான ரானல் லிண்ட்ஸேவும் அவருடைய இணையர் டெப்ரா ராபின்ஸனும் இந்த மூடநம்பிக்கை பற்றி அறிந்து கென்யாவுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு பகுத்தறிவுப் பாடம் புகட்டி மனமாற்றம் ஏற்படுத்தியுள்ளனர்.

CFI மதச்சார்பற்ற மனிதநேயம் என்ற கொள்கையுடன் உலகம் முழுவதும் செயலாற்றி வருகிறது. கென்யாவில் உள்ள பல ஆதரவற்ற பிள்ளைகளுக்கு சீருடைகள், எழுதுப் பொருட்கள், புத்தகங்கள் வழங்கினர் லிண்ட்ஸேயும் அவரது துணைவியாரும். பிற்போக்குத்தனம் மிகுந்த நாடு கென்யா. அங்குள்ள CFI கிளையுடன் இணைந்து ரானல் லிண்ட்ஸே சமூகச் சீர்திருத்தப் பணிகள் பல புரிந்து நாடு திரும்பியுள்ளார். மனித நேயம் குறித்து பேசுவதோடும் எழுதுவதோடும் நின்று விடாமல் செயலில் இறங்கி பாடுபடுகிறார் இவர்.
அல்பினஸத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியருக்கு தேவைப்படும் மருந்து மாத்திரைகள், களிம்புகள், சூரிய ஒளித்தடுப்பு ஆடைகள் ஆகியவற்றை வழங்கி பலரை பகுத்தறிவுப் பாதைக்கும் வரவழைத்து விட்டனராம் லிண்ட்ஸேவும் அவரது வாழ்விணையரும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *